India

Uganda

United Kingdom

Malaysia

38. இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமையை போராடி மீட்ட தமிழன்!!!

திங்கள், ஏப்ரல் 04, 2011

இங்கே போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோடைகால நேரக் கணக்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது அன்றிலிருந்து இனி வரும் ஆறு மாதங்களுக்கு GMT+1 நேரம் யு.கே-ன் நேரமாகக் கணக்கில் கொள்ளப் படும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு GMT யு.கே-ன் நேரமாகக் கணக்கிடப் படும். இந்த நேர மாற்றம் முதலில் சில நாட்களுக்கு சற்றே குழப்பமாக இருக்கும். பின்னர் பழகிவிடும். இந்தியாவில் கோடை மற்றும் குளிர் காலங்களுக்கிடையே வித்தியாசம் கண்டறிவது வானிலை ஆய்வாளர்களுக்கே கடினமாக இருப்பதால் ஆணியே புடுங்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் இந்த மாதம் 13-ம் தேதி தேர்தலில் ஓட்டளிக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. அதனாலென்ன இங்கே இங்கிலாந்துத் தேர்தலில் ஓட்டளித்து மகிழுங்கள் என்று காமன்வெல்த் குடிமக்களுக்கு மாட்சிமை பொருந்திய மகாராணி அறிவிவித்திருப்பதால் சற்றே சமாதானமடைந்து இருந்தேன். "நாங்கள் உங்கள் நாட்டை இருநூறு வருடங்களாக ஆண்டு உங்களை ஓட்டாண்டியாக்கிய துயரத்திலிருப்பதை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு உங்களுக்கு சர்வ வல்லமையுடைய ஆங்கிலேய தேர்தல்களில் வாக்களிக்க உரிமையளிக்கிறோம்" என்று மகாராணியோ அல்லது ஏதோனும் ஒரு பிரதமரோ அறிவித்தது இங்கே வசிக்கும் ஒவ்வொரு காமன்வெல்த் குடிமகனுக்கும் தனித்தனியாக இல்லை. ஆனால் எனக்கு, எனக்கே எனக்கென கவுன்சில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி தன் கைப்பட, நான் ஒரு காமன்வெல்த் குடிமகனென்ற உரிமையில் என்னால் இங்கிலாந்துத் தேர்தலில் ஓட்டளிக்க முடியுமென்று கடிதம் எழுதியிருக்கிறார். அது எப்படியென்ற ஆவலைத் தாங்க முடியாதவர்கள் மட்டுமே இந்த மொக்கை கதையை மேலே படிக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.

இங்கே மே மாதம் 5-ம் தேதி கவுன்சில் தேர்தலும், இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்க மக்கள் கருத்தை அறியும் கணிப்பும் நடக்க இருக்கிறது, அங்கே போய் நமது ஜனநாயகக் கடமை ஆற்றிவிட்டு வந்து விடலாமென்றிருந்தேன். தேர்தலை முன்னிட்டு தேர்தல் அட்டையையும் கவுன்சில் என் வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஆங்கிலக் குடிமக்களைத் தவிர எந்தக் குடியேறியும் எக்காரணம் கொண்டும் சந்தோசமாக இருக்கலாகாது என்று கன்சர்வேட்டிவ்கள் முடிவெடுத்திருப்பதால் கவுன்சில் அலுவலகத்திலிருந்து ஒரு பெண்மணி போன வாரம் என் வீட்டுக் கதவை தட்டினார். என் அடையாளங்களைச் சரி பார்த்த பின்னர் நான் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால் என்னால் இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என்று கூறினார். எனக்கு தேர்தல் அட்டை வந்திருக்கும் செய்தியை அவரிடம் கூறி நான் காமன்வெல்த் தேசத்தைச் சேர்ந்தவன் என்பதையும், நான் ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டளித்திருப்பதையும் கூறினேன். ஆனால் பாவம் அந்தப் பெண்மணிக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. நீங்கள் ஆங்கிலக் குடிமகனில்லாத காரணத்தால் ஆங்கிலத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என்று சொல்லி என்னுடைய தேர்தல் அட்டை தவறுதலாக அனுப்பப் பட்டிருக்கலாம் என்று அதன் மேலே நான் ஒரு இந்தியன் என்றும் என்ன விசாவில் இங்கே குடியிருக்கிறேன் என்றும் எழுதி தன்னுடன் எடுத்துச் சென்று விட்டார்.

இத்தனை காரியங்கள் செய்கிறாரே ஒருவேளை சட்டத்தை மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது என்று நானும் நினைத்தேன். ஆனால் இணையத்தில் தேடிய போது அது போல ஒன்றும் அறிவிக்கப் படவில்லை. எனக்கு சற்றே எரிச்சலாக வந்தது. அந்தப் பெண்மணியின் மேல் கவுன்சிலில் புகார் செய்யலாம் என்றால் அந்தப் பெண்மணியின் பெயரைக் கூட அன்று நான் கேட்கவில்லை. என்னடா இது நம் ஜனநாயகக் கடமைக்கு வந்த சோதனை என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்தத் தேர்தல் அட்டையிலிருந்த வாசகங்கள் நினைவுக்கு வந்தன. அதாகப்பட்டது, அவர்கள் அனுப்பிய தேர்தல் அட்டை வாக்காளர் அட்டை இல்லாமலும் என்னால் ஓட்டளிக்க முடியும். வேறு அடையாள அட்டைகள் இருந்தால் போதும், பாஸ்போர்ட் போல. அந்தப் பெண்மணி யார் என்னுடைய வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க, கண்டிப்பாக நான் ஓட்டுப் போட்டே தீருவேன் என்று நினைத்துக் கொண்டேன்.

நேற்று மாலை என் வீட்டு தபால் பெட்டியில் ஒரு கவர் கிடந்தது. என்னுடைய தேர்தல் அட்டை, கூடவே ஒரு கடிதம். நான் பிரேம் போட்டு மாட்ட வேண்டிய அந்த வரலாறு ஆவணம், அந்தப் பெண்மணி எழுதியது. நான் காமன்வெல்த் குடிமகன் என்ற உரிமையில் என்னால் ஆங்கிலேயத் தேர்தல்களில் ஓட்டளிக்க முடியும் என்று தன் கைப்பட எழுதியிருந்தார். இப்போது நீங்கள் பதிலளிக்க வேண்டியது என்னுடைய இரு கேள்விகளுக்கு. ஒன்று, இனி யாரேனும் உனக்கு இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமயை கொடுத்தது யார் என்று என்னிடம் கேட்க முடியுமா? இரண்டாவது, இதை விட மரண மொக்கையான கதை சொல்லியை நீங்கள் பார்த்ததுண்டா?

0 கருத்துகள்: