India

Uganda

United Kingdom

Malaysia

43. பிரிட்டனில் பொங்கல் விழா!

ஞாயிறு, ஜனவரி 22, 2012

இன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழுவினர் கரோக்கி மூலம் பாடல்கள் பாடினர். அதன் பின்னர் சிறுவர் சிறுமியர்களுக்கான வினாடி வினா நடத்தப்பட்டது. அதில் சர்க்கரைப் பொங்கல் அணி வெண்பொங்கல் அணியைத் தோற்கடித்தது. பின்னர் பெண்கள் ஆடினார்கள், கோலாட்டம் போல் ஆரம்பித்துப் பின்னர் அனைத்து வகை நடனங்களும் ஆடினர். அதன் பின்னர் ஆண்கள் குழு ஆடியது. பாடல்களுக்கு நடிகர்கள் போல் ஆடினர். இதன் நடுவிலேயே சாப்பாடு பரிமாற ஆரம்பித்தனர். ஒரு இட்லி, சட்னி, சாம்பார், சிறிது சாதம், புளிக்குழம்பு, சிறிது ஃப்ரைடு ரைஸ், கொஞ்சம் மெது பக்கோடா, பாயசம் மற்றும் அப்பளம். அனைத்தும் நன்றாகவே இருந்தன. கிட்டத்தட்ட 150க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். Bracknell மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதே எனக்கு இன்றுதான் தெரிந்தது.

இந்நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள் கீழே...

நண்பர் ஒருவர் எம்ஜிஆர் வேடத்தில் கலக்குகிறார்.

ஆண்கள் ஆடுகிறார்கள்

பெண்கள் கொண்டாட்டம்.

இன்னிசைக் குழு.

ஒரு சிறுமி பாடுகிறாள்.

காவடியாட்டம்.

சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சி.

கரகாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆட்டம் பாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆர்கெஸ்ட்ரா.

இவை தவிர மூன்று சிறுமிகள் சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு சிறு பகுதியை நாடகமாக நடத்தினார்கள். மற்றொரு சிறுமி கர்னாடக இசைக் கச்சேரி வழங்கினாள். மிகவும் நன்றாக இருந்தது. அவற்றைப் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். 

நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நல்ல முறையில் இருந்தது. யாரோ ஒருவர் அசிங்கத்தை மிதித்து விட்டு அரங்கிற்குள் நுழைந்து விட்டார். ஏதேனும் சிறுவர்களாக இருக்கலாம். விழா ஏற்பாடு செய்த நண்பர் ஒருவர், அருவெறுப்புப் படாமல் அதைத் துடைத்து வெளியே போட்டார். நாங்கள் சாப்பிட்ட பிளேட்களை ஒரு பெண்கள் சிலர் கவனமாக வாங்கி அடுக்கி வைத்தார்கள். அவர்களுக்கு இதெல்லாம் செய்ய வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. ஆனாலும் விழா சிறப்பாக நடக்க அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். 

42. ஃபிலிம் காட்டுவது எப்படி!!!

ஞாயிறு, நவம்பர் 20, 2011

எனக்கு வெகு நாட்களாக லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளத்தில் வேலை செய்யனும்னு ஆசைங்க. ஆனா பாருங்க, நான் ஒரு உயிரியல் வல்லுனனுங்க‌ (அடங்கொக்க மக்க..எம்புட்டு ஆசை!). இருந்தாலும் கணிப்பொறி-ல இந்தப் பசங்கள்லாம் ஆணி புடுங்கிறதப் பார்க்குறப்ப நாமலும் இப்படி பொட்டி தட்டுனா எப்படி இருக்கும்னு அப்பப்ப ஆசை வருமுங்க. ஆனா நம்ம பப்பெல்லாம்  இந்த சாஃப்ட்வேர் பண்ணாடைங்க கிட்டே வேகாதுன்னு நமக்கு நல்லாத் தெரியுமுங்க. அதனால எதையாவது அரைகுறையாவாவது படிச்சுட்டு, நம்மளைப் போன வீணாப் போன உயிரியல் வல்லுனனுங்க கிட்டேயே பீட்டர் விடனும்னு முடிவு பண்ணீட்டனுங்க. ஆனா அதிலேயும் பாருங்க, அங்கேயும் Bio-Statistics -ல (இதைத் தமிழல டைப் பண்ணா ரெம்ப காமெடியா இருக்குங்க..) வேலை செய்யுறவெனுங்க கிட்டேல்லாம் வெச்சுக்க முடியாதுங்க. இப்படில்லாம் சில பல ஆராய்ச்சிகள் பண்ணி யாருகிட்டேல்லாம் பீட்டர் உடனும்னு முடிவு பண்ணீட்டேங்க... ஆனா இந்த ஆராய்ச்சில்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமாத்தானுங்க அது நமக்கு உரைச்சது. அடடா இந்த மைக்ரோசாஃப்ட் ஆபீசை விட்டா நமக்கும் எதுமே தெரியாதே. இந்த எழவெடுத்த மைக்ரோசாஃப்ட் ஆபீசை எல்லாப் பண்ணாடைங்களும் நம்மளை விட நல்லா யூஸ் பண்ணுங்களேன்னு பல்ப் எரிஞ்சது. அப்போ வந்ததுதாங்க இந்த லினக்ஸ் ஐடியா... எப்படியாவது லினக்ஸ்சைப் படிச்சு இந்த அப்பாவி உயிரியல் வல்லுனனுங்க உயிரை எடுக்கிறதுன்னு முடிவு பண்ணீட்டேனுங்க... அதில பாருங்க, நாம ஒரு தடவை முடிவு பண்ணீட்டமுன்னா நம்ம பேச்சை எவனுமே கேட்க மாட்டானுங்க‌ (ஒரு காட்டன் டயலாக் கூட இல்லாம பதிவு போட்டா தற்கொலை பண்ணிக்கிடுவேன்னு அன்பா மிரட்டி லெட்டர் போட்ட திருப்பூர் சங்கருக்கு இந்த காட்டன் டயலாக் சமர்ப்பணம் - சமர்ப்பணம்னு ஏன் சொல்றேன்னா என்னோட முந்திய பதிவப் படிச்சுட்டு அய்யா அல்ரெடி மர்கயா!!).

சரி எப்படியாவது லினக்சைப் படிச்சுடலாம்னு, முதல்ல லினக்ஸை விண்டோஸுக்கு சைடியேயே இன்ஸ்டால் பண்ணினேன். ஆனா பாருங்க வயர்லெஸ், மவுஸ்லாம் வேலை செய்யலை. அதை எப்படி சரி பண்ணலாம்னு ஒரு நண்பரைப் பார்த்தேன். அவரு, எப்போப் பார்த்தாலும் ஒரு 27 இன்ச் ஆப்பிள் முன்னாடி உக்கார்ந்து சின்சியரா சாட் பண்ணீட்டு இருப்பார். அப்பப்போ நம்ம கிட்டே வந்து லினக்ஸ் ஐஒஎஸ் அப்படி இப்படின்லாம் பீலா உட்டிட்டு இருப்பார். சரின்னு அவர்கிட்டே இந்தப் பிரச்சினைகளைக் காட்டினா, அப்புறமாத்தான் தெரியுது, அவரு நம்ம கிட்டே உட்ட பீலால்லாம் அதுக்கு முந்தின நாளு நைட்ல மனப்பாடம் பண்ணீட்டு வந்ததுன்னு!!. நம்மளை மாதிரியே நிறைய பேரு இருக்காங்க போலிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன்.

சரி இது வேலைக்காகாதுன்னு, என்னோட நோட்பேடுல விண்டோசை எடுத்து விட்டுட்டு உபுண்டுவை இன்ஸ்டால் பண்ணீட்டேன். அதில மவுஸ் பிரச்சினை தீர்ந்தது. அப்புறம் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஆராய்ச்சி பண்ணி வயர்லெஸ் பிரச்சினையையும் சரி பண்ணீட்டேன். அப்புறமா பார்த்தா லினக்ஸ்ல மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் இல்லை. அதுக்குப் பதிலா ஓபன் ஆபீஸ்னு ஒன்னு இருந்தது. அது பார்கிறதுக்கு ஆபீஸ் மாதிரியேதான் இருந்தது. ஆனா பொறந்ததிலேருந்து மைசா (Microsoft ஐ சுருக்கி MS-னு வைக்கலாம்னா மைக்ரோசாஃப்ட்-ஐ சுருக்கி மைசா-ன்னு ஏன் வைக்கக் கூடாது?) ஆபீஸ் மட்டுமே யூஸ் பண்ணின எனக்கு ஓபன் ஆபீசைப் பார்த்த உடனே பிடிக்கலை. என்னடா செய்ய்லாம்னு வழக்கம் போல ஒன்றரை நாள் ஆராய்ச்சி பண்ணினா உபுண்டுல வைனை (WINE) இன்ஸ்டால் பண்ணினா மைசா ஆபீசையும் யூஸ் பண்ணிக்கலாம்னு தெரிஞ்சு அதையும் பண்ணீட்டேன். அப்புறமா இன்னொரு பிரச்சினை, விண்டோஸ்ல வலது பக்கம் இருக்கிற நிறைய விசயம் உபுண்டுல இடது பக்க இருக்குது. உதாரணமா ஏதாவது விண்டோவை மூடனும்னா பட்டன்லாம் இடது பக்கம் இருக்குது. இன்னொரு ஒன்றரை நாள், பட்டனெல்லாத்தையும் விண்டாஸ் மாதிரியே வலது பக்கத்துக்கு மாற்றியாச்சு. ஒரு வாரம் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் மாத்திட்டேன்.

விதைத்தாச்சு.. இப்போ அறுவடை பண்ணனும். மனைவி கிட்டே காட்டலாம், ஆனா அவள் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். இருந்தாலும் பரவாயில்லைன்னு நம்ம புராடெக்ட் மேல் நம்பிக்கை (!) வச்சு, அவள் கிட்டேப் போய் "மனுசன் படைச்சதிலேயே உருப்படியான ரெண்டே விசயம். ஒன்னு நான், இன்னொன்னு நான் இன்ஸ்டால் பண்ணீருக்கிற இந்த உபுண்டு" அப்டீன்னு டயலாக் உட்டேன். நோட்புக்கை ஒரு பார்வை பார்த்துட்டு காறித்துப்பு விட்டாள். இப்படி எல்லாத்தையுமே விண்டோஸ் மாதிரி மாத்தி விண்டோஸ்ல இருக்கிற எல்லா சாஃப்வேரையும் இங்கே யூஸ் பண்றதுக்கு நீங்க விண்டோஸையே யூஸ் பண்ணலாமே, எதுக்கு உபுண்டு இன்ஸ்டால் பண்ணனும்னு செவுட்டில அடிச்ச மாதிரி கேட்டாள். இந்தக் கேள்வி கேட்டதுக்கு என்னை நீ கொன்னிருக்கலாம்னு சொன்னேன். சரீன்ட்டு அவ உடனே வெசத்தைத் தேடப் போய்ட்டா. நாலு பேர் கிட்டே பிலிம் காட்டனும்னு ஆசைப்பட்டது கடைசிலே உயிருக்கே ஆபத்தாயிப் போயிருச்சுங்க.... நீங்களே சொல்லுங்க, நான் பண்ணினது தப்பாங்க??? 

41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்

வெள்ளி, நவம்பர் 11, 2011

அது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை சிறிதாகக் கூட ஃபோன்களை உருவாக்க முடியுமா என்றே தோன்றியது. அதுவரை நான் பார்த்ததெல்லாம் கார்ட்லெஸ் போன்களும், கிட்டத்தட்ட அதே சைஸிலிருந்த (Nokia 5160 என்று நினைக்கிறேன்) செல்ஃபோன்களும்தான். என் நண்பன் காட்டியது Nokia 3310. முதல் தடவை பார்த்த போது அசந்தே போனேன். ஆனால் பாருங்கள் கடந்த‌ பத்து வருடங்களுக்குள் செல்ஃபோன்கள் எவ்வளவு மாறி விட்டன‌! Computer வகையறாக்களும் அதேயளவு ஆச்சர்யகரமான‌ மாற்றங்களையே கடந்த பத்தாண்டுகளில் அடைந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றினைந்து ஒரே பொருளாகவும் உருமாறி விட்டன. Computer களில் பேசுகின்றோம், செல்ஃபோனைக் கிட்டத்தட்ட Computer போல உபயோகிக்கின்றோம்.

இந்த அதீதமான தொழில்நுட்ப வளர்ச்சி எனக்கு சில சம‌யங்களில் எரிச்சலாகவே இருக்கின்றது. எப்போதுமே எல்லோருடைய‌ தொடர்பு எல்லைக்குள்ளாகவே இருக்கின்ற ஒரு உணர்வு. சமயங்களில் மனிதர்களின் பெயருக்குப் பதிலாக இனிமேல் நம்பர்களே நினைவில் நிற்குமோ என்று கூடத் தோன்றுகிறது. அதிலும் இந்த Smart Phone கள் வந்த பின்பு நிலைமை இன்னும் மோசம். மெயில் பார்ப்பதிலிருந்து, டிவி பார்ப்பது வரை அதிலேயே நடக்கின்றது. மெயில் அலர்ட் வேறு... ஒரு கட்டத்தில் எரிச்சலாகி ஒரு Nokia 1508 வாங்கி விட்டேன். ஆனால் அதை வெளியிடத்தில் உபயோகிக்கத் தயக்கமாக இருக்கின்றது. நம்மை ஏதோ சிந்து சமவெளியிலிருந்து வந்திருப்பவ‌னைப் போல் பார்க்கின்றனர். ஆனால் அவ்வப்போது உபயோகித்தே வருகின்றேன்.

இந்த அதீதமான மாற்றங்களினால் இன்னொரு பிரச்சினையும் தோன்றியது. நமக்கு சும்மாவே மனசு அலைபாயும் (சும்மாவா யூத்துல்ல!!!)... ஹலோ, ஹலோ... தப்புத் தப்பால்லாம் யோசிக்காதீங்க... படிப்பில் ஃபோகஸ் பண்றதைச் சொன்னேன். ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது 4 மணி நேர புகைவண்டியில் பயணிக்க வேண்டிய கட்டாயம் (போக வர மாதம் 4 அல்லது 6 முறை). அப்போதெல்லாம் என்னுடைய லாப்டாப்பையும் தூக்கிக் கொண்டே அலைவேன். பயனத்தின் போது படிக்கலாம் பாருங்கள். ஆனால் கடந்த இரண்டரை வருடங்களாக அது ஒழுங்காக நடந்ததே இல்லை. வடிவேலு சொல்வதைப் போல, பிகினிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கும் ஆனா ஃபினிசிங்தான் சரியா இருக்காது. முதல் அரை மணி நேரம் ஓகே. அப்புறம், சரி பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கலாமேன்னு தோணும், அப்புறம், சரி போரடிக்குதே, அந்தப் படத்தை கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு தோணும். அப்புறம் படிச்ச மாதிரிதான்...

இதுக்கு என்னா செய்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்த போதுதான் அமேசான் கிண்டிலைப் பத்திக் கேள்விப்ப்ட்டேன். படிக்கிறதைத் தவிர வேற எதுவும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் என்ன உடனே வாங்கிட்டேன். உண்மையிலேயே சொல்றேன். அடுத்த புகைவண்டிப் பயணத்துல நல்லா உபயோகமாச்சு. மூன்றரை மணி நேரம் படிக்கிறதுல மட்டுமே போச்சு. நல்ல உபயோகமான ஒரு பொருளை வாங்கினேன்னு ஒரு திருப்தி இருக்கு. ஆனா பாருங்க, இப்ப படிப்பை முடிச்சுட்டதினால, மனைவி இருக்கிற ஊருக்கே வந்திட்டேன். இப்போ புகைவண்டிலேயே பயணிக்கிறதில்லை. கிண்டில் வீட்டிலே சும்மாதான் இருக்கு.

40. மற்றுமொரு இடைவேளை

செவ்வாய், நவம்பர் 08, 2011

2007 February -ல் கூட நான் மேற்படிப்பு படிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. 1998-ல் B.Pharmacy முடித்த பின் ஒரு நாள் கூட Pharmacist ஆகப் பணிபுரியாமல் Marketing-ல் சேர்ந்தேன், பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக. நான்கு வருடங்கள் பட்டப்படிப்பு முடித்தவனுக்கு, அரசாங்க வேலைக்கு வாய்ப்பே இல்லை. தனியார் மருத்துவமனையில் 2,000 முதல் 4,000 ரூபாய் வரையும், மருந்துக் கம்பெனிகளில் Production Chemist-ஆகச் சேர்ந்தால் கிட்டத்தட்ட அதே அளவுக்கும்தான் காசு வரும். மருந்துவப் பிரதிநிதி வேலைக்குத்தான் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை கிடைத்தது.

ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வேலை செய்யலாம் பின்னர் வேறு வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்துச் சேர்ந்தேன். அது ஐந்தரை வருடங்களாக நீண்டு விட்டது. கடைசி கடைசியில் வேலையில் ஆர்வம் சுத்தமாகக் குறைந்து விட்டது. வேறு வேலைக்குப் போக வேண்டுமென்றால் அதற்கான முனைப்பு வேண்டும். இந்த வேலையில் இருக்கும் வரையிலும் வேறு வேலை தேட முடியாது என்று தோன்றிய போது,  வேலையை விட்டு விட்டேன், வேறு வேலை கிடைக்கும் முன்னரே. கிட்டத்தட்ட 5 மாதங்கள் வெளி நாடுகளுக்குச் செல்ல முயற்சி செய்தேன். அப்போதும் மேலே படிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

ஒரு வழியாக என் நண்பன் ரஜினிகாந்த்தின் உதவியுடன் உகாண்டாவிற்குச் சென்றேன். Pharmacy Manager-ஆக. அங்கே இரண்டரை வருடங்கள். அந்த வேலையை மிகுந்த ஈடுபாட்டுடனே செய்து வந்தேன். இந்தமுறை பிரச்சனை மலேரியா மூலம் வந்தது. இரண்டரை வருடங்களில் கிட்டத்தட்ட 6 முறை மலேரியா வந்து படுத்தியது. அதிலும் ஒருமுறை Falciparum மலேரியா வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் அவதிப்பட்டேன். மற்றோரு பிரச்சினை திருமணத்திற்குப் பெண் கிடைக்காமலிருந்ததில் வந்தது. உகாண்டா என்றதுமே எல்லாப் பெண் வீட்டாரும் பின்வாங்கினர்.
 
மீண்டும் வேறு ஏதாவது வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தபோதுதான் என் தம்பி பிரிட்டனுக்கு வந்து விடு என்றான். அப்போது என் நண்பன் மணிகண்டன் மான்செஸ்டர் பல்கலையில் Ph.D படித்துக் கொண்டிருந்ததால் அவனைத் தொடர்பு கொண்டேன். அவன் முயற்சி எடுத்து பல Supervisor களிடம் தொடர்பு கொண்டு Cancer Biology-ல் இடம் வாங்கிக் கொடுத்தான். 2007 ஜூலையில் மான்செஸ்டர் பல்கலையில் சேர்ந்தேன். நான்கு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. 2010 ஜூனில் Thesis முடித்து செப்டம்பரில் Viva-ம் முடித்து, அக்டோபரில் Corrections-ம் முடித்தாயிற்று. இதனிடையில் கிடைத்த 6 மாத Research Assistant வேலையும் சரியாக் அக்டோபரில் முடிந்தது. Ph.D யில் செய்த வேலையையும் பேப்பருக்கு அனுப்பியாகி விட்டது. மீண்டும் வேலை தேடும் படலம். கையில் Ph.D இருப்பதால் இம்முறை தைரியமாகவே இருக்கிறேன். பார்க்கலாம்...

39. சில புரியாத விசயங்கள்...

ஞாயிறு, ஜூலை 31, 2011


என்னை மிகவும் கோபமுண்டாக்கும் செயல்களில் ஒன்று ஆய்வகத்தில் அடுத்தவர்கள் என் அனுமதியில்லாமல் என்னுடைய பொருட்களை உபயோகப் படுத்துவது.  ஏனென்றால் எடுத்த பொருட்களை திருப்பி வைக்கவும் மாட்டார்கள், நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள். நம்முடைய உபயோகத்திற்காக அவசரமாகத் தேடும் போது அவை இருக்காது. இது நம்மை மிகவும் எரிச்சலூட்டுவதோடு மட்டுமல்லாமல் வேலையையும் பாதிக்கும். ஆனால், நிறைய பேர் வேலை பார்க்கும் இடங்களில் ஒழுங்கு என்பதை அதிகமும் எதிர்பார்க்க முடியாது. அதுவும் ஆய்வகங்கள் போன்ற கூடுதலாக ஒழுங்கு தேவைப்படும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த விசயத்தில் எங்களுடைய ஆய்வகத்தில் இருக்கும் சீன மாணவன் மீது எனக்கு மிகவும் மனவருத்தம் உண்டு. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" கொள்கையில் மிகவும் பிடிப்புள்ள மாணவன். எல்லோருடைய பொருட்களையும் தன்னுடைய பொருட்களாகவே எண்ணும் பரந்த மனப்பான்மை கொண்டவன். எடுத்த பொருட்களை திருப்பியும் வைக்க மாட்டான். ஆனால் நாம் அதை விசாரிக்கத்தால் உடனடியாக மன்னிப்புக் கோரும் உயரிய பண்புடையவன். ஆனால் திரும்ப‌வும் அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்யத் துணிந்தவன். "Sorry" என்ற அந்த ஒற்றை வார்த்தை சகல தவறுகளையும் செய்யும் அதிகாரத்தை அவனுக்கு வழங்கியிருந்தது. ஆனால் மற்றபடிக்கு மிகவும் நல்ல பையன். தானுண்டு தன்னுடைய Facebook உண்டென மகிழ்ச்சியாக வாழ்பவன். ஆய்வகத்தில் அவனே இளையவன். ஆகவே பல சமயங்களில் எனக்குத் தோன்றும், நாங்கள் அனைவரும் படிப்பை முடித்துச் சென்ற பிறகு இந்தப் பையன் என்ன செய்வானோ என்று. மிகவும் கஷ்டப்படப் போகிறான் என்று மட்டும் தோன்றும். ஒரு வழியாக அவனையும், புதிதாகச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் தவிர அனைவரும் ஆய்வக வேலை முடிந்து, thesis எழுதச் சென்றுவிட்டோம்.

இடையில் ஒரு நாள் என்னுடைய Supervisor-ரைப் பார்க்க நான் அவருடைய அலுவகத்திற்குச் சென்றிருந்தேன். நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், ஏதோ எடுக்க வேண்டுமென்று ஆய்வகத்திற்குள் சென்றார். திரும்பி வந்தபோது அவருடைய கிரேக்க முகம் முற்றாக வெளிறிப் போயிருந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற முகபாவத்திலிருந்தார். என்ன ஆயிற்று என்றேன். த‌ன்னுடைய ஆய்வகத்தையே காணவில்லை என்றார். ஆய்வகத்தில் ஒரு பொருளும் இல்லை, யாரோ ஒட்டுமொத்தமாக ஆய்வகத்தையே சுருட்டிக் கொண்டு போய் விட்டனர் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படி யார் செய்யக்கூடும். அதுவும் இவருடைய அனுமதி இல்லாமல்... நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஆய்வகத்தினுல் நுழைந்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி என்னால் நம்ப முடியாததாக இருந்தது. அவ்வளவு சுத்தமாக எங்கள் ஆய்வகத்தை நான் பார்த்ததே இல்லை. எல்லா கருவிகளும் சுத்தம் செய்யப்பட்டு ஒழுங்காக அதனதன் இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. காலி அட்டைப் பெட்டிகள் மற்றும் பனிக்கட்டி வைக்கப் பயன்படும் பெட்டிகள் ஒன்றையும் காண முடியவில்லை. Bufferகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு Canகளில் முழுவதுமாக நிரப்பப் பட்டிருந்தன. அந்தச் சீன மாணவன் இவையனைத்தையும் செய்திருப்பான் என என்னால் நம்பமுடியவில்லை. இத்தனை குப்பைகளையும் இத்தனை காலமாகப் பார்த்துக் கொண்டிருந்த Supervisor-ருக்கு அவை இல்லாமல் அவருடைய ஆய்வகமே அவருக்கு அடையாளம் தெரியாமல் போய்விட்டது. எனக்கும் வெட்கமாக இருந்தது. இவ்வளவு குப்பைகளையும் வைத்துக் கொண்டா நான் ஆய்வகத்தில் வேலை பார்த்திருக்கிறேன்... வெளியே வந்து Supervisor-ரிடம் விளக்கினேன். ஆய்வகம் நம்பமுடியாத அளவிற்குத் தூய்மையாக இருப்பதைச் சொன்னேன். அவரும் சமாதானமடைந்து பெருமூச்சு விட்டார். முகத்தில் மீண்டும் அமைதி குடிறேறியது.

ஆனால் எனக்குச் சில விசயங்கள் புரியவேயில்லை. அவன் ஏன் இவ்வளவு நாட்களும் இதைச் செய்யவில்லை? நாங்கள் அனைவரும் வெளியேறும் வரை ஏன் காத்திருந்தான்? இவ்வளவு ஒழுங்காக ஆய்வகத்தை வைக்கத் தெரிந்தவன், ஏன் நாங்கள் இருந்தவரையிலும் அத்தனை ஒழுங்கீனமாக நடந்துகொண்டான்? இவைகளுக்கு இன்னமும் விடை தெரியவில்லை எனக்கு.

38. இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமையை போராடி மீட்ட தமிழன்!!!

திங்கள், ஏப்ரல் 04, 2011

இங்கே போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோடைகால நேரக் கணக்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது அன்றிலிருந்து இனி வரும் ஆறு மாதங்களுக்கு GMT+1 நேரம் யு.கே-ன் நேரமாகக் கணக்கில் கொள்ளப் படும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு GMT யு.கே-ன் நேரமாகக் கணக்கிடப் படும். இந்த நேர மாற்றம் முதலில் சில நாட்களுக்கு சற்றே குழப்பமாக இருக்கும். பின்னர் பழகிவிடும். இந்தியாவில் கோடை மற்றும் குளிர் காலங்களுக்கிடையே வித்தியாசம் கண்டறிவது வானிலை ஆய்வாளர்களுக்கே கடினமாக இருப்பதால் ஆணியே புடுங்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் இந்த மாதம் 13-ம் தேதி தேர்தலில் ஓட்டளிக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. அதனாலென்ன இங்கே இங்கிலாந்துத் தேர்தலில் ஓட்டளித்து மகிழுங்கள் என்று காமன்வெல்த் குடிமக்களுக்கு மாட்சிமை பொருந்திய மகாராணி அறிவிவித்திருப்பதால் சற்றே சமாதானமடைந்து இருந்தேன். "நாங்கள் உங்கள் நாட்டை இருநூறு வருடங்களாக ஆண்டு உங்களை ஓட்டாண்டியாக்கிய துயரத்திலிருப்பதை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு உங்களுக்கு சர்வ வல்லமையுடைய ஆங்கிலேய தேர்தல்களில் வாக்களிக்க உரிமையளிக்கிறோம்" என்று மகாராணியோ அல்லது ஏதோனும் ஒரு பிரதமரோ அறிவித்தது இங்கே வசிக்கும் ஒவ்வொரு காமன்வெல்த் குடிமகனுக்கும் தனித்தனியாக இல்லை. ஆனால் எனக்கு, எனக்கே எனக்கென கவுன்சில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி தன் கைப்பட, நான் ஒரு காமன்வெல்த் குடிமகனென்ற உரிமையில் என்னால் இங்கிலாந்துத் தேர்தலில் ஓட்டளிக்க முடியுமென்று கடிதம் எழுதியிருக்கிறார். அது எப்படியென்ற ஆவலைத் தாங்க முடியாதவர்கள் மட்டுமே இந்த மொக்கை கதையை மேலே படிக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.

இங்கே மே மாதம் 5-ம் தேதி கவுன்சில் தேர்தலும், இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்க மக்கள் கருத்தை அறியும் கணிப்பும் நடக்க இருக்கிறது, அங்கே போய் நமது ஜனநாயகக் கடமை ஆற்றிவிட்டு வந்து விடலாமென்றிருந்தேன். தேர்தலை முன்னிட்டு தேர்தல் அட்டையையும் கவுன்சில் என் வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஆங்கிலக் குடிமக்களைத் தவிர எந்தக் குடியேறியும் எக்காரணம் கொண்டும் சந்தோசமாக இருக்கலாகாது என்று கன்சர்வேட்டிவ்கள் முடிவெடுத்திருப்பதால் கவுன்சில் அலுவலகத்திலிருந்து ஒரு பெண்மணி போன வாரம் என் வீட்டுக் கதவை தட்டினார். என் அடையாளங்களைச் சரி பார்த்த பின்னர் நான் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால் என்னால் இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என்று கூறினார். எனக்கு தேர்தல் அட்டை வந்திருக்கும் செய்தியை அவரிடம் கூறி நான் காமன்வெல்த் தேசத்தைச் சேர்ந்தவன் என்பதையும், நான் ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டளித்திருப்பதையும் கூறினேன். ஆனால் பாவம் அந்தப் பெண்மணிக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. நீங்கள் ஆங்கிலக் குடிமகனில்லாத காரணத்தால் ஆங்கிலத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என்று சொல்லி என்னுடைய தேர்தல் அட்டை தவறுதலாக அனுப்பப் பட்டிருக்கலாம் என்று அதன் மேலே நான் ஒரு இந்தியன் என்றும் என்ன விசாவில் இங்கே குடியிருக்கிறேன் என்றும் எழுதி தன்னுடன் எடுத்துச் சென்று விட்டார்.

இத்தனை காரியங்கள் செய்கிறாரே ஒருவேளை சட்டத்தை மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது என்று நானும் நினைத்தேன். ஆனால் இணையத்தில் தேடிய போது அது போல ஒன்றும் அறிவிக்கப் படவில்லை. எனக்கு சற்றே எரிச்சலாக வந்தது. அந்தப் பெண்மணியின் மேல் கவுன்சிலில் புகார் செய்யலாம் என்றால் அந்தப் பெண்மணியின் பெயரைக் கூட அன்று நான் கேட்கவில்லை. என்னடா இது நம் ஜனநாயகக் கடமைக்கு வந்த சோதனை என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்தத் தேர்தல் அட்டையிலிருந்த வாசகங்கள் நினைவுக்கு வந்தன. அதாகப்பட்டது, அவர்கள் அனுப்பிய தேர்தல் அட்டை வாக்காளர் அட்டை இல்லாமலும் என்னால் ஓட்டளிக்க முடியும். வேறு அடையாள அட்டைகள் இருந்தால் போதும், பாஸ்போர்ட் போல. அந்தப் பெண்மணி யார் என்னுடைய வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க, கண்டிப்பாக நான் ஓட்டுப் போட்டே தீருவேன் என்று நினைத்துக் கொண்டேன்.

நேற்று மாலை என் வீட்டு தபால் பெட்டியில் ஒரு கவர் கிடந்தது. என்னுடைய தேர்தல் அட்டை, கூடவே ஒரு கடிதம். நான் பிரேம் போட்டு மாட்ட வேண்டிய அந்த வரலாறு ஆவணம், அந்தப் பெண்மணி எழுதியது. நான் காமன்வெல்த் குடிமகன் என்ற உரிமையில் என்னால் ஆங்கிலேயத் தேர்தல்களில் ஓட்டளிக்க முடியும் என்று தன் கைப்பட எழுதியிருந்தார். இப்போது நீங்கள் பதிலளிக்க வேண்டியது என்னுடைய இரு கேள்விகளுக்கு. ஒன்று, இனி யாரேனும் உனக்கு இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமயை கொடுத்தது யார் என்று என்னிடம் கேட்க முடியுமா? இரண்டாவது, இதை விட மரண மொக்கையான கதை சொல்லியை நீங்கள் பார்த்ததுண்டா?

37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்

திங்கள், ஜனவரி 24, 2011

எங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கே திரும்பி வந்து விட்டனர். பையன் கனடா பாஸ்போர்ட்டுடனும் சீன முகத்துடனும் இருப்பான். அண்மையில் இவன் விடுமுறைக்காக ஹாங்காங் சென்றிருந்தான். அப்போது அங்கு பார்த்தவற்றை அவன் சொல்லிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சீனர்கள் காப்பியடிப்பதில் வல்லவர்கள் என்பது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக் கொள்ளப் பட்ட விசயம். ஆனால் இந்த அளவுக்குச் செய்வார்களா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.

சீன அரசாங்கம் தற்போது தொழில்நுட்பக் கல்விக்கும், உயர் கல்வி ஆய்வுகளுக்கும் அதிகமான அளவில் நிதி அளித்து வருவது தெரிந்ததே. அதுபோக உலகமெங்கும் வியாப்பித்திருக்கும் சீன ஆய்வாளர்கள் தரமான ஆய்வுக் கட்டுரைகளை உலக அளவில் பிரபலமான பல ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளிலும் வெளியிடுகிறார்கள். ஆனால் இவர்கள் பெயரைக் கெடுக்கும் விதமாக சீனாவில் சிவ விசயங்கள் நடப்பதாக அந்த மாணவன் கூறினான். அதாகப் பட்டது, உலகின் பல மூலைகளில் இருக்கும் உயர்ந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்டு தரமான அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடப் படும் பல ஆய்வு வெளியீடுகளைக் காப்பியடித்து அவர்கள் பெயரில் சீனாவிலிருந்து வெளியாகும் பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்களாம். அவைகள் பெரும்பாலும் சீன மொழியில் இருப்பதாலும், பிரபலமான பத்திரிக்கைகளாக இல்லாத காரணத்தாலும் வெளி உலகத்திற்குத் தெரிவதில்லை என்றான். ஆய்வாளர்களின் பெயரை மட்டும் மாற்றி விடுவார்கள், அல்லது ஆய்வு முடிவுகளை சற்றே மாற்றி வெளியிட்டு விடுகிறார்களாம். ஒரு போதும் சீன அறிவியல் பத்திரிக்கைகளில் தான் ஆய்வு முடிவுகளை வெளியிடப் போவதில்லை என்ற தகவலையும் கூறினான். இந்தியாவில் இதே மாதிரி ஏதேனும் நடக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

36. 2011

ஞாயிறு, ஜனவரி 02, 2011

புது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன்? 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா? யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருபுரு கருபுரு, யூ வார் அண்டர் அரெஸ்ட்...). வழக்கமாகப் பாட்டிலுடன் தொடங்கும் புதுவருடம் வாழ்க்கையிலேயே முதன்முறையாக இரவு 12 மணி பூஜையுடன் தெடங்கியிருக்கிறது. மனைவிக்கு நன்றி. காலையில் லண்டனில் இருக்கும் பிரம்ம குமாரிகள் உலக மையத்திற்குச் மனைவி அழைத்துச் சென்றாள். பத்து நிமிட தியானம். (டென்சன் ஆவாதீங்க... நான் இல்ல... நான் இல்ல... அவள்தான்) எலுமிச்சை சாதம் போல ஒன்றும், காபியும் இருந்தது. (இது எனக்குத்தான்...) அங்கிருந்து ஃபெல்த்தாம் சினிவேல்ட்... பதினைந்து நிமிடம் தாமதம். மன்மதன் அம்பு பார்க்க முடியாமல் ஊர் திரும்பினோம். இந்த வருடமாவது கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டும். பார்க்கலாம். ரொம்ப நாளா யாருமே வராததினால என் வலைப்பதிவுக்குள்ளே வர எனக்கே பயமா இருக்கு!!!. இருந்தாலும் யாரும் தைரியமா நுழைஞ்சிருந்தா உங்களுக்கு என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

35. நின்று போகாத உலகம்...

திங்கள், டிசம்பர் 20, 2010

என் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், "நீ இந்த வேலைகளைச் செய்யாவிட்டாலும் கம்பெனியின் உலகம் ஒன்றும் நின்று போய்விடாது, இந்த வேலைகளைச் செய்யும் ஆட்கள் திடீரென்று முளைத்து வருவார்கள், கம்பெனி எப்போதும் போல் லாபம் ஈட்டும்" என்று. என் மனைவி எப்போதும் போல் என்னைப் பொருட்படுத்தாமல் சென்று விடுவாள். விவாதத்தில் வென்றுவிட்ட தொனியில் நான் புன்னகைப்பேன். எனக்குத்தான் எல்லாம் தெரியுமே...

இந்தக் கதைக்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக இங்கே வெள்ளைக்காரர்களுடன் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஓரளவு உற்சாகத்துடன் கலந்து கொண்டிருந்தாலும் இந்த முறை அந்த உற்சாகம் மிஸ்ஸிங். பக்கத்து லேப் பசங்களுடன் இந்த முறை விருந்துக்குக் கூட செல்ல வில்லை. இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு ரொட்டீன்தனம் தெரிவது காரணமாக இருக்கலாம். அல்லது நன்றாகப் பழ‌கிய பலர் வெளியேறி புதிதாகப் பலர் வந்திருப்பதால் இருக்கலாம். என்னவோ, நான் கிருஸ்மஸ் கொண்டாடாததால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. யாரும் அது பற்றிக் கவலைப் படப் போவதும் இல்லை. ஆனால் கிழக்காப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் ஒரு பத்துப் பேராவது அது பற்றிக்கவலைப் படுவார்கள் என நான் நம்புவதற்கு இடமிருந்தது.

உகாண்டாவில் நான் வேலை பார்த்து வந்த கடையின் ஊழியர்களே அவர்கள். கடையில் ஸ்டாக் எடுக்கும் போது அவர்களை எனது வீட்டில் சாப்பிட அழைப்பேன். அங்கே கோழி (வான் கோழியென்று நினைக்கிறேன்) விலை அதிகம், ஆடு விலை கம்மி. எனது  House Girl-லிடம் அவர்களுக்காகக் கோழி வாங்கி சமைக்கச் சொல்லுவேன். அவர் ஆப்பிரிக்கரானதால் அவர்களுடைய சுவக்கேற்ற மாதிரி மசாலா இல்லாமலும்,  எனக்காகத் தனியாக மசாலா போட்டு ஆடும் சமைப்பார். Stock taking என்பது அதிகமான களைப்பை உண்டாக்கும் வேலையாதலால் இந்த மதிய உணவு அவர்களுக்கு சற்றே தெம்பளிக்கும் என்று நான் இதைச் செய்து வந்தேன். அந்த உணவுக்குப் பின்பும் அவர்கள் வேலை செய்ய வேண்டுமென்பதால் அங்கு குடிப்பதற்கு அனுமதிப்பதில்லை.

அதுபோக அவர்களை வருடத்திற்கு இரண்டு முறை வெளியே உணவகத்தில் இரவு விருந்திற்கு அழைப்பதுண்டு. அங்கே குடிப்பதற்கு அனுமதி உண்டு. ஈஸ்டருக்கு விடுமுறைக்கு முன்னாலும், கிருஸ்மஸ் விடுமுறைக்கு முன்னாலும் பாலேயின் உயர்தர உணவகம் ஒன்றில் இது வருடாவருடம் நடக்கும். நூறிலிருந்து நூற்றம்பதாயிரம் ஷில்லிங்குகள் வரை செலவாகும். மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வரை. இது எனக்கும் அவர்களுக்குமான உறவைப் பலப்படுத்தி, இதெல்லாம் செய்கிறானே என்று கடையில் திருடாமல் இருப்பார்களே என்று நம்பி செலவானாலும் பரவாயில்லை என்று செய்து வந்தேன். அப்படியும் நிறைய ஊழியர்கள் திருடி மாட்டிக் கொள்வார்கள். அப்படி மாட்டி நிறைய பேரை வேலையிலிருந்து தூக்கியும் இருக்கிறேன். இருந்தாலும் இந்த விருந்து வைபோகத்தை மட்டும் நிறுத்தவில்லை. அங்கிருந்து வந்து மூன்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் என்னை மிகவும் மிஸ் செய்திருப்பார்கள் எனத் திண்ணமாக நம்பியே இதுநாள் வரையிலும் இருந்து வந்தேன். இந்த உலகில் நாம் திரும்பிப் போகவே போகாத இடத்திலிருக்கும் சிலர் நம்மை மிஸ் செய்கிறார்கள் என்ற எண்ணமே சில சமயங்களில் நம்மை ஆழ்ந்த பெருமிதத்திற்குள்ளாக்குகிறது. ஆகா, எவ்வளவு நல்லவன் நான்... எவ்வளவு கொடுத்து வைத்தவன் நான்!!!

கடந்த வாரம் உகாண்டாவிலிருக்கும் ஒரு நண்பருக்குத் தொலைபேசினேன். அவரிடம் எனது பெருமையை நிலை நாட்டும்பொருட்டு இப்போது அங்கே நிலவரம் என்ன என்று விசாரித்தேன். என்னைக் கடை ஊழியர்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்ற செய்தியை உள்வாங்கி என் மனதைக்குளிர்விக்க என் காது மிகவும் உன்னிப்பானது. ஆனால் அவர் சொன்ன விசயம் என் அகந்தையைத் தவிடு பொடியாக்கியதுதான் மிச்சம். அதாகப் பட்டது, நான் கடையை விட்டகன்ற அடுத்த வருடத்தில் கடை ஊழியர்கள் அனைவரும் புதிய மேலாளரிடம் இந்த விருந்து வைபோகத்தைப் பற்றிக் கூறி அதைத் தொடரும் பொருட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவரும் அதை கம்பெனி மேலதிகாரிகளிடம் விளக்கி அந்த வருடத்திலிருந்து கம்பெனி செலவிலேயே அவர்களுக்கு கிருஸ்மஸ் விருந்து வழங்கப் பட்டிருக்கிறது. ஆக இந்த விருந்து படலத்தைத் தொடங்கி வைத்தவன் என்ற முறையிலே எனக்கு மூவாயிரத்து ஐநூறு வருடாவருடம் நட்டம்.  அவ்வளவுதான்.

நண்பர் சொன்ன விசயம் எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. நான் ஒருவன் இல்லாதது அவர்கள் எவருக்கும் ஒரு சிறு சலனத்தைக்கூட அளிக்க வில்லையா? வெட்கம்... திரும்பிப் பார்க்கிறேன். என் மனைவி வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்தாள். வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.  எனக்கு ஒன்று புரிந்தது. நான் கிருஸ்மஸ் கொண்டாடாததைப் பற்றிக் கிழக்காப்பிரிக்காவிலும் யாரும் கவலைப் படப் போவதில்லை.

34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...

வியாழன், அக்டோபர் 07, 2010

சமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ  அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம். அதை விடக் கொடுமை அந்த ஒரிஜினல் படங்களுக்கு நன்றி என்று கூடப் போடுவதில்லையாம். என்ன கொடுமை, என்ன கொடுமை... இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையம் முழுக்க நிறைய காணக்கிடைக்கின்றன. இந்தப் பின்ன‌னியில்தான் நான் நேற்று பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தை  அலச வேண்டியிருக்கிறது. படத்தின் பெயர் "தி டவுன்". சார்ல்ஸ் டவுன் என்பதன் சுருக்கமே அது. இந்தப் பெயர் ஒன்றே போதும் இந்த இயக்குனருக்கு கற்பனை வளமே இல்லையென்று நிரூபிக்க. ஏனென்றால் நம் இயக்குனர் இங்கே சுப்ரமணியபுரம் என்று ஏற்கெனவே சுயமாகச் சிந்தித்துப் பெயர் வைத்து விட்டார். ஊரின் பெயரால் இங்கே ஏற்கெனவே ஒருவர் சிவகாசி, மதுர, திருப்பாச்சி என்று பல படங்கள் வந்திருந்தாலும், சுப்ரமணியபுரத்தில் மட்டுமே கதைமாந்தர்கள் ஊடாக‌ அந்த ஊரின் ஒரு முழுமையான சித்திரம் பார்வையாளனுக்குக் கிடைத்தது. தி டவுனும் அதே மாதிரியான ஒரு முயற்சியே. இது படம் தொடங்குவதற்கு முன்னர் காட்டப்படும் எழுத்துக்களிலேயே விளக்கப் பட்டு விடுகிறது.

சுப்ரமணியபுரத்தின் கதை என்ன? ஒழுங்கான வேலை இல்லாத சில இளைஞர்கள் காலப்போக்கில் ஒரு அரசியல்வாதியின் அடியாட்கள் போல ஆக நேரிடுகிறது. வன்முறையின் பாதையில் இழுக்கப்படும் அவர்கள் அதன்பின் அதிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. இடையில் நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இந்தக் காதல் பிடிக்காமல் எச்சரிக்கும் இன்னொரு நண்பன், காதலித்த‌ பெண்ணின் துரோகத்தால் அவர்கள் எல்லோரின்  கதையும் முடிகிறது.

இப்போது தி டவுனின் கதை. திருடுவதையே தொழிலாகக் கொண்ட சில நண்பர்கள், அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மாஸ்டர் மைண்ட் தாதா, முயன்றாலும் அந்த தாதாவின் பிடியிலிருந்து வெளிவரமுடியாத நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இதை எச்சரிக்கும் இன்னொரு நண்பன், ஒரு பெண்ணின் துரோகத்தால் நண்பர்கள் அனைவரும் காலி. கதாநாயகன் மட்டும் எஸ்கேப்.   அவன் காதலியை வைத்து அவனைப் பிடிக்க திட்ட்ம் தீட்டும் போலீஸ், துரோகியாகும் கதாநாயகி, இதிலும் எஸ்கேப்பாகும் கதாநாயகன். கதாநாயகன் எஸ்கேப் தவிர எல்லாமே ஒன்றுதானே.

கதாநாயகன் சாகிற சீன் இதிலே இல்லையே என்று ஜல்லியடிப்பவர்கள் போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கலாம். படத்தின் இயக்குனரான் பென் அப்ஃலெக் சுப்ரமணியபுரத்தைப் பார்திருப்பார் என்று நான் நம்பவில்லை, நீங்களும் நம்பப் போவதில்லை. இதைப்பற்றி ஆங்கிலத்தில் யாரும் பதிவிடப் போவதுமில்லை. ஆனால் இதே விச‌யம் தமிழில் நடந்தால் மட்டும் ஏன் நாம் இயக்குனரைக் குறை சொல்லி ஏகப்பட்ட‌ பதிவுகள் இடுகிறோம்? சில இடுகைகளில் கூறப்படும் சினிமா ஒற்றுமைகள் சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கிறது. ஆகவே பொதுமக்களே வதந்திகளை நம்பாதீர்கள். இந்தப் பதிவையும் கூட...

33. அயன் - Special Preview Show in Manchester

ஞாயிறு, ஏப்ரல் 05, 2009

முன்னறிவிப்பு : இது அயன் படத்தைப் பற்றிய விமர்சனமல்ல...

இங்கே இங்கிலாந்தில் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. Cineworld, AMC, Odeon எனப் பல தொடர்திரையரங்குகளும், சில பல சிறிய மற்றும் நடுத்தர வகைத் திரையரங்குகள் இருந்தாலும், படம் பார்க்கக் கட்டணம் என்பது எல்லா இடங்களிலும் சராசரியாக 6 பவுண்டுகள் வரை வருகிறது. மாணவர்களுக்குச் சில கட்டணக்கழிவுகள் உள்ளன. திங்கள் முதல் வியாழன் வரை பகல் நேரப் படங்களுக்கு 4.50 பவுண்டுகள் ஆகின்றன. இது போக சில செல்போன் கம்பெனி தள்ளுபடிகளும் உள்ளன. அதாவது நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட செல்போன் சேவையை உபயோகிப்பவரானால், புதன்கிழமையன்று ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம். மாணவர்களுக்கான சில இணையதளங்களும் இத்தகைய தள்ளுபடிகளை அளிக்கின்றன.

ஆனால் இந்தவகைத் தள்ளுபடிகளுக்கெல்லாம் சிகரம் என்றால் அது Cineworld திரையரங்கக் குழுமம் வழங்கும் Unlimited Cinema Card Offerதான். அதாகப்பட்டது, நீங்கள் மாதம் 11 பவுண்டுகள் கட்டினால் அவர்கள் கொடுக்கும் அட்டையைப் பயன்படுத்தி மாதம் முழுவதும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அந்த அட்டைக்குக் குறைந்த பட்சம் ஒரு வருடம் Contract போட வேண்டும் அல்லது ஒரே தவணையில் ஒரு வருடத்திற்கான மொத்தப் பணத்தையும் கட்டி வாங்கிக் கொள்ளலாம். இவர்கள் UK முழுவதும் 70க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வைத்திருப்பதால் இது அவர்களுக்கும் லாபகரமானதாகவே இருக்குமென்று நம்புகிறேன். ஆனால் நேற்று அயன் திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து அந்த நம்பிக்கை மேல் கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கிறது.

நேற்று பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று நண்பர்கள் அயன் திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தோம். படம் ஓரளவுக்கு பரவாயில்லை ரகமாகவே இருந்தது. மூன்று பேருமே ரசித்துத்தான் படம் பார்த்தோம். விசயம் என்னவென்றால் கிட்டத்தட்ட 150 பேர் அமரக்கூடிய அந்தத் திரையரங்கில் மொத்தமே நாங்கள் மூன்று பேர்தான் அமர்ந்திருந்தோம். இதில் உள்ளே நுழையும்போது பையையெல்லாம் திறந்து காட்டச் சொல்லிப் பரிசோதித்தனர் (காமெரா இருக்கிறதா என்றுதான்...) எங்களுக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. இந்த லட்சணத்தில் நான் Unlimited Cardவைத்திருந்தேன். மான்செஸ்டரில் தமிழ்ப்படங்கள் அவ்வளவாக வருவதில்லை. எப்போதாவதுதான். இப்படிக் கூட்டம் அலை மோதினால் அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம்... இது ஏனென்று தெரியவில்லை. மான்செஸ்டர் இங்கிலாந்தில் மூன்றாவது பெரிய நகரம். நிறையத் தமிழர்கள் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். சரியாக விளம்பரம் செய்யவில்லை, திரையரங்கம் வெகு தொலைவில் உள்ளது என்ற பல காரணங்கள் இருந்தாலும் வெறும் மூன்றே பேர் ஒரு படத்தைப் பார்த்தது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் எங்கள் மூன்றே பேருக்காக என்றாலும் படத்தை ஓட்டிய திரையரங்கத்திற்கு நன்றி. கிட்டத்தட்ட ஒரு Special Preview Show மாதிரி இருந்தது.

32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள் சாப்பிட்டு விட்டு இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியாமல் அடுத்த நாள் காலையில் நெஞ்சுக் கரிக்கிறது என்று சொன்னதற்குத்தான் இப்படிச்சொன்னார் . இப்படி அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அவதிப்படுவது எப்போதிருந்து தொடங்கியது என்றுநினைவில்லை. அனேகமாக கல்லூரியில் படிக்கும் போதுதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன் +2 வரையில் வீட்டிலிருந்து படித்தபோது இப்படி அதிகமாக உண்டதாகநினைவில்லை. கல்லூரியில் எப்போதாவது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைவரும் போது காஞ்சமாடு கம்மங்கொல்லையில் பாய்ந்தது போல எக்குத்தப்பாகச் சாப்பிட்டுவிட்டுபுளிச்ச ஏப்பமா வருதும்மா என்று பரிதாபமாகச் சொன்னது நினைவிருக்கிறது. என்னவோதெரியவில்லை, உணவகங்களில் சாப்பிடும் போது அப்படி அதிகமாகவெல்லாம் சாப்பிடமுடியவில்லை. மற்றவர்கள் பார்ப்பார்களோ என்ற உணர்வுடனே சாப்பிட்டதால்இருக்கலாம். இருந்தாலும் தமிழ் நாட்டு உணவகங்களில் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நாட்டின் தேசிய உணவான புரோட்டா சால்னா சாப்பிடும் போது அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறேன்.... வீட்டிற்கு வந்துவிட்டால் சாப்பாட்டில் நான் பீமன்தான். நிறைய நேரங்களில் சாப்பிட்ட பின் என்னால் எழுந்திரிக்கவே முடியாமல் போய் விடும். என் தம்பிதான் கை கொடுத்துத் தூக்கி விடுவான். அம்மா சமையலில் எல்லாமே பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது ஞாயிறு காலையில் வைக்கும் இட்லி, கறிக்குழம்பு கூட்டணி. பலமுறை பதினைந்து இட்லிகளுக்கு மேல் ஸ்வாகா பண்ணியிருக்கிறேன்.

இப்படி சாப்பாட்டு இராமனாக இருந்த நான் திடீரென்று உகாண்டாவிற்குச் செல்ல வேண்டும் என்றவுடனே கொஞ்சம் பயந்துதான் போனேன்... அங்கே அவர்கள் வேறு நரமாமிசம் சாப்பிடுவார்கள் என்று நண்பர்கள் டுபாக்கூர் விட்டிருந்ததால் கனவில் கறிக் கடைக்காரரிடம் சென்று, "அந்த பிருஷ்ட பாகம் வேண்டாம், கொஞ்சம் கீழே முழங்காலுக்கு மேலே தொடைக் கறியாக‌த் தாருங்கள். ரொம்ப மேலே போகாதீர்கள்...வேறு எதையாவது வெட்டிவிடப் போகிறீர்கள்..." என்றெல்லாம் கேட்டுத்தொலைக்க வேண்டியிருக்குமோ என்று நடுங்கித்தான் போனேன். நல்லவேளையாக நான் சென்ற போது கறிக்கடைகளில் ஆடு மாடுகளையே தொங்க விட்டிருந்தார்கள்.

உகாண்டாவில் வீட்டு வேலை செய்வதற்கு குறைந்த ஊதியத்திற்கு House Boys அல்லது House Girls எனப்படும் ஆட்கள் கிடைப்பார்கள். (அவர்களை வேலைக்காரர்கள் என்று குறிப்பிட்டால் கோபித்துக் கொள்வார்கள்) வீட்டில் சமையல், துணி துவைப்பது, தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் செய்து விடுவார்கள். இவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில இடங்களில் திருடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். என் வீட்டில் இருந்த பெண்மணி நல்லவர். சமையலிலும் வல்லவர். நான் உகாண்டாவில் இரண்டரை வ‌ருடங்கள் இருந்தாலும் எடை குறையாமல் இருந்ததற்கு இவரும் ஒரு காரணம். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், மிக்சர், சமோசா, முறுக்கு, சாம்பார், அனைத்து வகை சட்னிகள் மற்றும் கறி, கோழிக்குழம்பு, பிரியாணி என அனைத்தையும் சுவையாகச் செய்வார். இவர் சமையலில் எனக்கு மிகவும் பிடித்தது பூரி, தேங்காய் சட்னி, சாம்பார் கூட்டணி...ம்ம்ம்.... நினைத்தால் இப்பவும் எச்சில் ஊறுகிறது.

உகாண்டாவில் நான் இருந்த சின்ன ஊரான பாலே(Mbale) யில் இரண்டு இந்திய உணவகங்கள் இருந்தன. நான் உகாண்டா போன புதிதில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மின்தடை அமலில் இருந்தது. அதெல்லாம் அந்தக் காலம்... இப்போது மின்சாரம் தடைபடுவதே அபூர்வம் என்று கேள்விப்பட்டேன். (சத்தியமாக இதில் நுண்ணரசியல் எதுவும் இல்லை ;‍)) அந்த சமயங்களில் நானும் என்னுடன் வேலை பார்த்த குஜராத்தி நண்பனும் அங்கே சென்று விடுவோம். கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும். பெரும்பாலும் வட இந்திய உணவுகளே கிடைத்தாலும் சுவை நன்றாகவே இருக்கும். அங்கே என் விருப்ப உணவு மசாலா சிப்ஸ். இங்கே மான்செஸ்டர் வருவதற்கு முன்னரே முன்னேற்பாடாக எங்கெங்கெல்லாம் இந்திய உணவகங்கள் இருக்கின்றன என்று இணையத்தில் தேடியாயிற்று (படிப்பு சம்பந்தமாக எதையுமே தேடவில்லை என்பதை இந்தப் பொன்னான தருண‌த்தில் உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ;‍-)) என்னுடைய அதிர்ஷ்டம் இங்கே பல்கலை அருகிலேயே Curry Mile என்று செல்லமாக அழைக்கப் படும் சாலை இருக்கிறது. நிஜமாகவே ஒரு மைல் தூரத்திற்கு நெடுக உணவகங்கள்தான் (ஏறக்குறைய 70 என்று கேள்வி). பெரும்பாலும் இந்திய உணவகங்கள் என்ற பெயரில் பங்களாதேசிக்காரர்கள் நடத்துவது. சில இடங்களில் சாப்பிட்டுப் பார்த்து நொந்து போய்விட்டேன். சில பரவாயில்லை. நிறைய Take Aways இருக்கின்றன. இதில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று தெரிந்தும் விரும்பிச் சாப்பிடுவது கபாப் எனப்படும் வஸ்து... இங்கே வந்த பின்னர் சாப்பிட்டுப் பழகியது. இன்று மதியம் சாப்பிட்டால் நாளை காலை வரை வயிறு கம் என்றிருக்கும். சாப்பிடும் வரை நன்றாயிருக்கும். சாப்பிட்டு முடித்தபின் ஏன்டா சாப்பிட்டோம் என்றிருக்கும்... இருந்தாலும் இதற்கெல்லாம் பீதியடைகிற ஆட்களா நாம்???

இது போக மான்செஸ்டரிலேயே வேறு இடங்களில் இருப்பவைகளில் நவாப், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் ஓரியண்டல் பஃபே மற்றும் சில பெயர் மறந்து போன உணவங்களில் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. என்ன இருந்தாலும் இவ்வளவு பெரிய மான்செஸ்டரில் ஒரு தென்னிந்திய உணவகம் கூட இல்லாதது எனக்குப் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. எனக்குத் தெரியாமல் எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கிற தென்னிந்திய உணவகம் பற்றித் தெரிவிப்பவர்களுக்கு மன்செஸ்டர் மியூசியத்தில் ஒரு சிலை வைக்கப் படும்.சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த போது, "உன் மருமகன் உன்னை மாதிரியே வந்திருக்கிறான்டா, சாப்பிட்டதுக்கு அப்புறமா கை கொடுத்துத் தூக்கினாத்தான் எந்திரிக்கிறான்" என்றாள் அக்கா. இந்தப் பழக்கம் ஜீனிலேயே அச்சேறி அடுத்த தலைமுறையும் கிளம்பி விட்டதை புரிந்து சிரிக்கிறேன்...

31. Manchester கதைகள்...

சனி, ஜூன் 07, 2008

முந்தா நேத்து எங்க லேப்ல இருந்த ஸ்பெக்ட்ரோ சரியா வேலை செய்யலேன்னு பக்கத்து லேபுக்கு போயிருந்தேன். வழக்கம் போல பேனாவை எடுத்துட்டுப் போகலை. சரீன்னு அங்க இருந்த ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல கை வழக்கம் போல பேனாவை வாய்க்கு எடுத்துட்டு போச்சு. அப்பத்தான் பேனா முனையில ஏதோ எழுதி இருந்ததைக் கவனிச்சேன். உத்துக் கவனிச்சு எழுத்துக் கூட்டிப் படிச்சா....

"Don't chew... Cyanide dipped..." ன்னு ஏதோ மெக்டொனால்ட்ல ஸ்வீட் சில்லி ஸாஸ்ல டிப் பண்ணின மாதிரி எழுதி இருந்தானுங்க. அடப்பாவிங்களா, பேனாவை வாயில வைக்கிறது ஒரு குத்தமாடா? அதுக்குப் போய் மரண தண்டனையாடா தருவீங்கன்னு பயந்துபோய் ஓடி வந்துட்டேன்.

இதை நினைக்கிறப்ப கார்ன்வால் போயிருந்தப்ப ஒரு உணவுவிடுதிக்கு வெளில இருந்த அறிவிப்புப் பலகைதான் ஞாபகத்துக்கு வருது. அது விளையாட்டுக்கு எழுதினதா, ஸீரியசா எழுதினதான்னு தெரியலை.

"Unattended children will be sold as slaves". அடங்கொக்காமக்க... காவாலிப்பய ஊரால்ல இருக்குன்னு நொந்துக்கிட்டேன்.

இருந்தாலும் நேற்று நடந்தது கொஞ்சம் ஓவரான ஜோக்குதான். இங்க பல்கலைக்கழகத்துல ஒவ்வொரு வருடம் முடிக்கும் போதும் ஒரு workshop நடத்துவாங்க. இந்த வருடம் எங்களுக்கு Communication skills பற்றி நடந்தது. சன் பத்திரிக்கையில் அறிவியல் பக்கத்தை எடிட் பண்றவரு வந்திருந்தாரு. அதில ஒரு போட்டியும் நடத்தினாங்க. அதாவது அவர் ஒரு அறிவியலாளர் மாதிரி பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்துவாரு, அதைப்பற்றி நாங்க 150 வார்த்தைகள்ல ஒரு ரிப்போர்ட் தயாரிக்கனும். மாணவர்கள் பத்து குழுக்களாகப் பிரிக்கப் பட்டிருந்தோம். அரைமணி நேரத்திற்குப் பிறகு எல்லோருடையதையும் ப்ரொஜெக்டரில் போட்டுக் காட்டினாங்க. தலைப்பு ரொம்ப கவனத்தை ஈர்க்கும் படியா இருக்கனும்னு எல்லோருமே முயற்சி பண்ணியிருந்தது நல்லா தெரிஞ்சது. அதுல ஒரு குழு எழுத ஆசைப்பட்ட தலைப்பு இதுதான். "கொலைகார எலிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து". ஆனா தெரிஞ்சு பண்ணினாங்களா இல்ல தெரியாம நடந்திருச்சான்னு தெரியலை, எழுதும்போது ஒரு "L" ஐ விட்டுட்டு அவங்க எழுதியிருந்தது இதுதான்.

"Killer Rates Endanger Pubic Safety"

நீங்களே சொல்லுங்க் இதெல்லாம் தெரியாம பண்ணியிருப்பாங்களா, இல்ல ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருப்பாங்களா?

30. இங்கிலாந்து கொண்டாட்டங்களும் ஒரு அப்பாவித் தமிழனும்...

புதன், டிசம்பர் 26, 2007

இந்தியாவில் ஏகப்பட்ட முறையும், ஆப்பிரிக்க நாடுகளில் சில முறையும் கிருஸ்த்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. இம்முறை இங்கிலாந்தில்... இருந்தாலும் வெள்ளைக்காரங்க கொஞ்சம் ஓவராத்தான் கொண்டாடுறாய்ங்க...
கிருஸ்துமஸுக்கான தொடக்கநிலை முன்னேற்பாடுகள் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திலேயே தொடங்கி விட்டன. இதில் முதலிடம் வகிப்பது கிருஸ்துமஸ் டின்னருக்கான உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது. ஒரு நான்கைந்து உணவகங்களிலிருந்து மெனு வாங்கி இரண்டு வாரங்களாக‌ ஓட்டெடுப்பு நடத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்தாகி விட்டது. பின் அதற்கு முன்பணம் வசூலிப்பதில் இரண்டு வாரங்களை செலவிட்டனர். பணம் கொடுக்காமல் டிமிக்கி அடித்து இழுத்தடித்த இரண்டு பேர் ஓட்டெடுப்பில் எல்லோருக்கும் முன்பாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இரண்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்வதால் (அப்படித்தான் நம்பவைச்சிருக்கேன்) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டெடுப்பில் இரண்டு முறை கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஆயிற்று. இரண்டு முறையும் நான் தேர்தெடுத்த உணவகங்கள் டெப்பாஸிட் இழந்து தோற்றுப் போனது அவர்கள் உணவில் எனக்கிருக்கும் புலமையை உலகிற்கு உணர்த்தியது.
ஒரு வழியா டிசம்பர் மாசம் முதல் வாரத்தில் மிச்சக் காசையும் வசூல் செய்துவிட்டு, அடுத்த நாள் ஒரு உணவகத்திற்கு கூட்டிச் சென்றனர். நானும் ஸ்டைலாக ஒரு ஜீன்ஸும் டி சர்ட்டையும் மாட்டிக்கொண்டு போனால் அங்கே சொல்லி வைத்தாற்போல் ஒருவர் கூட டி சர்ட் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் ரொம்ப நல்ல புள்ளைங்களா ஜீன்ஸும், ஒரு முழுக்கை சட்டையும் அணிந்து வந்திருந்தனர். என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே என்று விதியை நொந்தபடி அமர்ந்தால் அடுத்த அடி விழுந்தது. அது உணவு மட்டுமில்லை, stand up காமெடி ஷோவும் சேர்ந்ததென்று. இந்த காமெடி ஷோக்களைப் பற்றி நான் முன்னரே கேள்விப் பட்டிருக்கிறேன். பக்கத்திலே உட்கார்ந்து இருக்கிறவங்களை வம்புக்கிழுத்து காமெடி செய்வதுதான் இவர்களில் நிறைய பேர் செய்வது. நல்ல வேளையாக மேடைலேருந்து கொஞ்சம் தள்ளிதான் இடம் கிடைத்தது. இருந்தாலும் மொத்த இடமே சின்னதா இருந்ததாலே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.
சாப்பாடு முடிஞ்சதும் இவங்க காமெடி ஷோவும் தொடங்கிச்சு. நானும் எவ்வளவோ கவனிச்சுப் பார்த்தேன், ஒரு 25% கூடப் புரியலை. நானும் எவ்வளவு நேரம்தான் புரியற மாதிரியே நடிக்கிறது...புரியுற மாதிரி நடிக்கிறது மட்டும்னா கூடப் பரவாயில்லை, ஸ்கூல், காலேஜ்ன்னு ஏகப்பட்ட இடங்கள்ள நடிச்ச அனுபவம் இருக்கு...இங்கே அவனுங்களோட சேர்ந்து சிரிக்கவும் வேண்டியிருக்கு. பிரச்சனை என்னன்னா அவனுங்க எப்போ சிரிப்பானுங்கன்னு எனக்குத் தெரியவே மாட்டேங்குது... நிறைய இடங்களில் அவனுங்க சிரிக்கிறப்ப நான் உர்றென்று இருப்பதும், அவனுங்க சீரியஸா கவனிச்சுக்கிட்டு இருக்கிறப்ப நான் அடக்க மாட்டாமல் சிரிப்பதுமாக காமெடி ஷோ பயங்கர காமெடியாக போய்க் கொண்டு இருந்தது. பக்கத்தில் ஒரு மாதிரியா பார்த்த வெள்ளைக்காரனிடம் "நைஸ் காமெடி, சிரிப்பை அடக்கவே முடியலை" என்று சொல்லி சமாளித்தேன். ஒரு கட்டத்திற்கு மேலே இனிமே நடிக்கவே முடியாது என்ற நிலை வந்து, எதிரே அமர்ந்து இருப்பவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். எதிரே ஒரு மலேசிய இந்தியப் பெண் என்னை மாதிரியே திரு திருவென்று முழிப்பதும், அவ்வப்போது கெக்கே பிக்கேவென்று சிரிப்பதுவுமாக இருந்தது. அடச்சே இங்கேயும் போட்டிக்கு வந்திட்டாங்களே என்று, சேரில் மிகவும் கீழே சாய்ந்து உட்கார்ந்து கொண்டால் மற்றவர்கள் என்னைக் கவனிக்க மாட்டார்களே என்று சாய்ந்த போதுதான் பார்த்தேன், பக்கத்து ஸீட் சைனாக்காரன் எனக்கு முன்னரே அந்த டெக்னிக்கைக் கையாண்டு கொண்டிருந்தான். "அடப்பாவி, நீ நேரா உட்கார்ந்தாலே உன்னை யாராலும் பார்க்க முடியாதேடா... நீ ஏன்டா இப்படிக் கஷ்டப் படுறே" என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஒரு வழியா ஒரு மணி நேரம் கழித்து, இந்தக் காமெடி கொடுமை முடிந்தது. அடுத்தது டான்ஸ் ஆடும் கொடுமை நடந்து கொண்டிருந்தது. நம்ம நான்கடி சைனாக்கார நண்பன் கிட்டத்தட்ட ஆறடி இருக்கும் பெண்ணுடன் டான்ஸ் ஆட எம்பி எம்பி முயன்று கொண்டிருந்தான். ஒரு நாளைக்கு ஒரு முறை அவமானப்பட்டால் போதுமென்று நான் விடு ஜூட்...

29.உகாண்டா போய் இங்கிலாந்து வந்தது டும் டும் டும்....

ஞாயிறு, நவம்பர் 04, 2007

நான் திரும்ப எழுதும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மிரட்டிய கோடிக்கணக்கான வாசகர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி இன்று முதல் திரும்ப எழுத ஆரம்பித்திருக்கிறேன்...(கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேனோ...!)


போன தடவை பிளேடைப் போட்டப்ப உகாண்டால இருந்தேன்... கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை, பையன் உகாண்டாவைப் பத்தி எழுதுறானேன்னு எக்கச்சக்கமான பேர் (சரியா நாலு பேர்! அதுல ரெண்டு பேர் வழி தெரியாம உள்ளே வந்து மாட்டின‌வங்க...!) என்னோட பதிவு பக்கமா வந்துக்கிட்டு போயிக்கிட்டு இருந்தாங்க. இதுல நான் வேற ரொம்ப நாளா, எழுத முடியாத அளவுக்கு ரொம்ப பிஸியா இருந்தனா, அவங்களும் வந்து வந்து பார்த்துட்டு ஏமாந்து போய், இப்பல்லாம் என் பதிவை எட்டிப்பாக்குறதையே விட்டுட்டாங்க...(நான் எழுதியிருந்தாலும் அதைப் படிச்சுட்டு ஏமாந்துதான் போயிருப்பாங்கன்றதெல்லாம் வேற விசயம்...) கொஞ்சம் பிஸியா இருக்கிற மாதிரி ஆக்ட் குடுத்தா, இதுதான் சாக்குன்னு, இப்படியெல்லாமா பண்ணுறது...என்னது இது...சின்னப்புள்ளத்தனமா இருக்கு...


ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே... வாலிப, வயோதிக அன்பர்களே...எனது நண்பர்களே... உங்க எல்லோருக்கும் நான் இந்த மொக்கை பதிவு மூலமா சொல்லிக்கிறது ஒன்றே ஒன்றுதான்... நான் இப்பொழுது உகாண்டாவில் இல்லை. என்னை மேன்மை பொருந்திய மகாராணி ஆட்சிபுரியும் சூரியன் அஸ்தமிக்காத தேசத்திற்கு நாடுகடத்தி விட்டனர். (சாயங்காலம் மூன்றரை மணிக்கெல்லாம் இருட்டீருது, இதுக்கு இவனுங்க வெச்ச பேரப் பாத்தீங்களா.?வெள்ளைக்காரனுங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்). எனவே அலைகடலென திரண்டு எனது வலைப்பதிவுக்குள் வாரீர்... உங்கள் பொன்னான ஆதரவைத் தாரீர்... நன்றி, வணக்கம்.

28.ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனும், உகாண்டாவும்...

திங்கள், மார்ச் 12, 2007

ஹாலிவுட்காரர்களுக்குத் திடீரென்று உகாண்டா மேல் காதல் வந்து விட்டது. காசினோ ராயலில் பாலேயைக் காட்டியவர்கள் (வெறும் 5 நிமிடங்களே என்றாலும்) இப்போது ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனிலும்....(இதில் முழுப் படமுமே உகாண்டாதான்)

இடி அமீன் கதை என்றவுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஆசியர்களை(இந்தியர்கள் எனப் பொருள் கொள்க) வெளியேற்றியது பற்றின படமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். படம் முடியும் தருணத்தில் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இந்தப் படம் பற்றின உகாண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்....?

பத்திரிக்கைகள் பாராட்டித் தள்ளின. முசிவேனியின் மீடியா சுதந்திரம், உகாண்டா பற்றின உலகின் பார்வையை மாற்றி விட்ட்து என்று ஒரே புகழாரம்தான்.

ஆனால், ஃபீல்ட் மார்சல், விக்டோரியா கிராஸ் (VC), மிலிட்டரி கிராஸ் (MC), டிஸ்டிங்விஸ்டு சர்வீஸ் ஆர்டர் (DSO), கான்க்விரர் ஆஃப் தி பிரிட்டீஷ் எம்பரர் (CBE) இடி அமீன் தாதாவை (மேற்கூரிய பட்டங்கள் யாவையும் அமீன் தனக்குத் தானே சூட்டிக் கொண்டவை) ரொம்ப‌வும் ந‌ல்ல‌ப‌டியாக‌க் காட்டி விட்டார்க‌ள் என்று சாமானிய‌ர்க‌ள் முணுமுனுக்கிறார்க‌ள்.

இங்கே வ‌ருவ‌த‌ற்கு முன் உகாண்டா என்ற‌வுட‌ன் நினைவுக்கு வ‌ந்த‌வ‌ர் இடி அமீன்தான்.உகாண்டாவில் வேலை பார்க்க‌ப் போகிறேன் என்ற‌வுட‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லோரும் நினைவுகூர்ந்த‌ ஒரு பெய‌ர் இடி அமீன்தான். இந்த‌ ச‌ங்க‌ட‌ங்க‌ள் எல்லா உகாண்ட‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து. இங்கிருந்து எந்த‌ வெளிநாட்டிற்குச் சென்றாலும், உக‌ண்ட‌ன் என்ற‌வுட‌ன் வ‌ரும் உட‌ன‌டி ப‌தில் "ஓ... இடி அமீன்" ஏதோ இவ‌ர் அமீனால் பாதிக்க‌ப்ப‌ட்டு த‌ப்பி வ‌ந்த‌வ‌ரைப் பார்ப்ப‌து போல் ஒரு பார்வை... இவ‌ர்க‌ளின் கோப‌ம் என்ன‌வென்றால், ஸடாலினுக்காக‌ யாரும் ருஷ்யாவைப் ப‌ழிக்க‌வில்லை, போல் பாட்டிற்காக‌ யாரும் க‌ம்போடியாவை ப‌ழிக்க‌வில்லை. ஆனால் அமீனுக்காக‌ ஏன் எல்லோரும் உகாண்டாவை ப‌ழிக்கிறார்க‌ள்???

இந்த‌ப் ப‌ட‌ம் ஒட்டு மொத்த‌மாக‌, உகாண்டா ப‌ற்றின‌ உல‌கின் பார்வைவை மாற்றிவிடும் என்று தோன்ற‌வில்லை. ஆனால் க‌ண்டிப்பாக‌ அந்த‌த் திசையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார்க‌ள் என்று சொல்ல‌ முடிகிற‌து. நாம் வ‌ழ‌க்க‌மாக‌ டாக்குமெண்ட‌ரிக‌ளில் பார்க்கும் உகாண்டாவாக இல்லாம‌ல், ப‌சியில் வாடும் ம‌க்க‌ளோ, உட‌ல் முழுக்க‌ ஈக்க‌ள் மொய்க்கும் குழ‌ந்தைக‌ளோ, உண‌வுப் பொட்ட‌ல‌ங்க‌ளைக் கொண்டு வ‌ரும் வ‌ண்டியை ச‌ண்டையிட்டு மொய்க்கும் கூட்ட‌ங்க‌ளோ இல்லாம‌ல் உகாண்டா, ஒரு வித‌த்தில் உண்மையான‌ உகாண்டா காட்ட‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஃபார‌ஸ்ட் விட்டேக‌ர் மிக‌வும் மென‌க்கொட்டிருக்கிறார் என்ப‌து ப‌ட‌ம் பார்க்கும் போது தெரிகிற‌து. நிறைய‌ ஹோம் ஒர்க் செய்திருக்க‌ வேண்டும். ந‌டை, பேச்சுவ‌ழ‌க்கு எல்லாவ‌ற்றிலுமே அச்சு அச‌ல் உகாண்ட‌ர்க‌ள் வாடை. அமீனின் பிர‌ப‌ல‌மான‌ மூட் மாறுத‌லை மிக‌வும் அனாச‌ய‌மாக‌ச் செய்திருக்கிறார். ஆஸ்கார் ஆச்ச‌ர்ய‌ம‌ளிக்க‌வில்லை.

இந்த‌ப் ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌தும், நிறைய‌ பேர் "அமீனும் நானும் ப‌ய‌ங்க‌ர‌ தோஸ்த் தெரியுமா? ஆனாலும் ம‌னித‌ர் அவ்வ‌ள‌வு மோச‌ம் கிடையாது" என்கிற ரேஞ்சில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதில் என்னைக் க‌வ‌ர்ந்த‌து இர‌ண்டு பேட்டிக‌ள். ஒன்று, அமீனின் இங்கிலீஷ் வாத்தியார். அமீன் என்கிற‌ பெய‌ரை ஆங்கில‌த்தில் எழுதுவ‌த‌ற்கே ம‌னுச‌னுக்கு 5 வ‌ருட‌ங்க‌ள் ஆகி இருக்கிற‌து. ஆனாலும் விடாப் பிடியாக‌ முய‌ன்றிருக்கிறார். த‌ன‌க்கு ஆங்கில‌ம் தெரியாது என்ப‌தை எல்லோரிட‌மும் சொல்லிக் கொள்ளும் ப‌ழ‌க்கமும் அமீனுக்கு இருந்திருக்கிற‌து. இதைப் ப‌டித்து விட்டு ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் நினைகூர்ந்த‌து, ஒருமுறை இராணியைப் பார்ப்ப‌த‌ற்காக‌ ல‌ண்ட‌ன் சென்றிருந்த‌ போது, இராணியை மிஸ்ட‌ர் க்வீன் என்று அழைத்துவிட்டார்.

இன்னொன்று, அமீன் ஆசிய‌ர்க‌ளை நாட்டை விட்டு வெளியேற்றிய‌ பின்ன‌ர், அவ‌ர்க‌ள‌து சொத்துக்க‌ளை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்ப‌து ப‌ற்றிய‌து. அமீன் எந்த‌ ஊருக்கொல்லாம் போகிறாரோ அந்த ஊர் ம‌க்க‌ளெல்லாம் அந்த‌ ஊரில் இருக்கும் இந்திய‌ர்க‌ளின் க‌ட்ட‌ட‌ங்க‌ளை நோக்கி ஓடுவார்க‌ள். யார் முத‌லில் சென்ற‌டைகிறாரோ அவ‌ருக்கே அந்த‌ க‌ட்டிட‌த்தை வ‌ழ‌ங்கிவிடுவார் அந்த‌ வ‌ள்ள‌ல். இந்திய‌ர்க‌ளை வெளியேற்றிய‌தில் அன்றைக்கு அங்கிருந்த‌ இந்திய‌ர்க‌ளின் ப‌ங்கும் முக்கிய‌மான‌தாம். அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ உள்ளூர் ம‌க்க‌ளை ந‌ட‌த்தினார்க‌ளாம். கொஞ்ச‌ம் காசு சேர்ந்த‌ பின், எங்கே இருக்கிறோம் என்ப‌தையே ம‌ற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌த‌ற்கு இது ஒரு ப‌டிப்பினை.

27. தைரியமான ஆண்களுக்கு மட்டும்....

புதன், நவம்பர் 22, 2006

நம்மூர் ஆண்கள் தைரியத்தை வெளிக்காட்ட, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போல, இங்கே ஒரு குறிப்பிட்ட இன மக்கள் ஒரு காரியம் செய்து தங்கள் தைரியத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

முகிசு என்ற அந்த இனத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக அந்த வீர சாகசத்தைப் பண்ணியாக வேண்டும். அதுவும் சிறு வயதில் இதை செய்து காட்ட அனுமதி இல்லை. வயதுக்கு வந்த ஆண்கள் (!) மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த சாகசத்தை செய்யாவிட்டால் அந்த ஆணைத் திருமணம் செய்ய எந்த அழகியும் முன்வரமாட்டாள்.

இந்த வீர விளையாட்டிற்குப் பயந்துபோய் புதரில் ஒளிந்து கொண்டு வாழ நினைத்தாலும் முடியாது. இதற்கென அமைக்கப்ப்ட்டிருக்கும் புதர் ஒழிப்புக் கமிட்டி ஒன்று, ஒரு புதர் விடாமல் தேடி அவர்களைக் கண்டுபிடித்து விளையாட்டை நடத்தி முடித்து விடுவார்கள்.

பண்டைக்காலத்தில் நம்மூரில் குழந்தை இறந்தே பிறந்தால், அதன் மார்பில் வாளால் கீறி அதன் பிறகுதான் தகனம் செய்வார்களாம். இந்த மேட்டரை எப்படியோ தெரிந்து கொண்ட இந்த மக்களும், இறந்து பிறந்த குழந்தைக்கும் இதை செய்துதான் புதைப்பார்கள்.

இந்த இனத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், மற்ற இனத்தைச் சேர்ந்த ஆண்களும் இதைச் செய்து காட்ட வேண்டும்.

போதும்டா பில்ட் அப்பு, மேட்டரைச் சொல்லுங்கிறீங்களா... வர்றேன். அதுக்குத்தான் வர்றேன். அதாகப் பட்டது, முகிசு ஆண் ஒருவன் வயதுக்கு வந்துவிட்டான் என என்று உலகிற்கு அறிவிக்கும் உன்னத முயற்சி இது. ந்ம்மூரில் பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா என்று நடத்துகிறார்களே, அதைப் போல்தான் இது.

அன்றைய தின விழாவில் கலந்து கொள்ள உற்றார் உறவினர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி, அந்த தினத்தன்று அந்தப் பையனை மணலால் (களிமண் போல இருக்கிறது) குளிப்பாட்டுகிறார்கள். அதன் பின் தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு அனைவரும் ஊர்வலம் செல்கிறார்கள். (ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காகத்தான்..) பின் இதற்காகவே அமைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு பூசாரி இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பையன் கொஞ்சம் பயந்தவனாக இருந்தால் சரக்கடித்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள். அதன் பின்னர் அனைவரும் ஆடிப்பாடுகிறார்கள். பின் பையனின் ஆடை களையப் படுகிறது. பூசாரி கத்தியுடன் பையனை நெருங்குகிறார். மக்கள் அனைவரும் குலை போடுவது போல் பயங்கரமாக கத்துகிறார்கள். அதன் பின் என்ன நடந்திருக்கும் என உங்களால் ஊகிக்க முடிந்திருக்கும்.

ஆமாம் மக்களே அதேதான். தினமலர் பாசையில் சொன்னால் "நறுக்". இரத்தம் செட்டச் சொட்ட அதில் மெத்திலேட்டட் ஸ்பிரிட் அல்லது டிங்சர் ஊற்றுகிறார்கள். மக்கள் அனைவரும் பையனின் தைரியத்தில் மெய்மறந்து கைதட்டுகிறார்கள். இதில் மிகவும் தைரியமான ஆண்கள் செய்வதைக் கேட்டால் நீங்களே மெய்சிலீர்த்து விடுவீர்கள்... அது என்னவென்றால் நம்மூரில் சமைக்கப் பயன்படும் மிளகாய்தூளையும், உப்பையும் கலந்து அந்த இடத்தில் பூசிக் கொள்வார்கள்... (அடப் பாவிகளா... என்ன, சமைக்கவா போறீங்க...)
இந்த வீர விளையாட்டைப் பற்றி கேள்விப்ப்ட்ட நாளிலிருந்தே முகிசு இனப் பெண்களைப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. அங்கே யாருக்கும் தைரியம் இருந்தால் சொல்லுங்கள்... பரவாயில்லை பிளைட் டிக்கெட்டை நீங்களே எடுத்துக்குங்க... வர்றதுக்கு முன்னாடி தெரியப்படுத்துங்க. ஊரைக்கூட்டி அமர்களம் பண்ணீறலாம்...

26. இதுதான் உகாண்டா...

சனி, ஜூன் 24, 2006

முதன்முதலாக இங்கே பார்மஸியில் நுழைந்த போது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய பழைய மற்றும் புழக்கத்தில் இல்லாத மருந்து வகைகள் தென்பட்டன. புதிய மருந்துகள் வருகை மிகவும் தாமதமாகவே நடக்கிறது.

இவர்களக்கு அனைத்திலும் பெரிய பெரிய டின்கள்தான் வேண்டும். பாராசெட்டமாலில் தொடங்கி, குளோராம்பினிக்கால், ஆம்பிசிலின், அமாக்சிசிலின் முதலான ஆன்ட்டி பயாட்டிக்குகள் வரை எல்லாமே 1000, 500 மாத்திரைகள் கொண்ட டின்களில்தான் அதிகமாக மார்க்கெட்டில் விற்பனையாகின்றன‌. பிளிஸ்டரில் வரும் மருந்துகளை விட இவை மிகவும் விலை குறைவாக இருப்பதே காரணம்.

இருமலுக்குப் பயன்படும் லிங்டஸும் ஒரு லிட்டர் கேனில் கிடைக்கிறது. பிராண்டட் மருந்துகளின் விற்பனை முகவும் குறைவு, ஆனால் விலை அதிகம். அதனால் ஜெனிரிக் கம்பெனிகள்தான் சக்கை போடு போடுகின்றன. பாராசெட்டமாலை "பனடால்" என்கிற ஸ்மித் க்ளய்ம் பெயரில்தான் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் வங்கும் போது, அதைக் கொடுத்தால் மறுத்து விட்டு லோக்கல் கம்பெனியின் பிராண்டை கேட்கிறார்கள். காரணம் விலை. ஒரு பாக்கெட்(100 மாத்திரைக‌ள்) பனடால் விலை கிட்டத்தட்ட 150 ரூபாய். லோக்கல் கம்பெனி 1000 மாத்திரைகள் கொண்ட டின் 125 ரூபாய். வேறு என்ன செய்வார்கள்?

மருந்துகள்தான் இப்படி என்றால், வைத்தியம் செய்பவர்கள் கதை அதற்கும் மேல். இங்கே ஒழுங்காக டாக்டருக்குப் படித்து பிராக்டீஸ் பண்ணுபவர்கள் மிகவும் குறைவு. மிகவும் குறைவான ஸீட்கள். மற்ற படிக்கு Clinical Officer எனப்படும் (நம்மூர் கம்பௌண்டர் மாதிரி) மூன்று வருட படிப்பு முடித்தவர்கள் டாக்டர்களைப் போலவே வைத்தியம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். இவர்கள் போக நர்ஸுகளும் கிளினிக் வைத்து நடத்துகிறார்கள். இவ்வளவும் நடந்தும் நிறைய இடங்களில் மருத்துவ வசதி இல்லை என்பது வேதனையான விஷயம்.

இங்கே கொடிகட்டிப் பறப்பவர்கள் பார்மஸிட்கள் எனப்படும் மருந்தாளுனர்கள்தான். கல்லூரியில் சேர டாக்டருக்குத் தேவைப்படும் மதிப்பெண்களை விட பார்மஸி படிப்பிற்கு நிறையத் தேவைப் படுகிறது. காரணம் இடங்கள். சென்ற ஆண்டு வரை, பார்மஸி படிப்பிற்குப் பத்தே பத்து இடங்கள். இவர்களின் தேசிய யுனிவர்சிட்டியான Makarere University யில் மட்டுமே அட்மிஸன். போனால் போகிறதென்று போன வருடம் Mbarara University யிலும் பத்து இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். கற்பனை செய்து பாருங்கள் கிட்டத்தட்ட தமிழ்நாடு சைஸில் இருக்கும் ஒரு இடத்தில் வருடத்திற்கு பத்தே பார்மஸிஸ்டுகள். (தமிழ்நாட்டில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 1700 பேர்). பின் அவர்களுக்கு ஏன் இருக்காது மவுசு.

பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பார்மஸிஸ்டும் இரண்டு பார்மஸியில் வேலை பார்க்க அனுமதிக்கப் படுகிறார்கள்.அப்படியும் பற்றாக்குறை. புதிதாக பார்மஸி வைக்க விரும்புபவர்கள் பார்மஸி படிக்கும் மாணவர்களை மூன்றாம் வருடத்திலேயே புக் பண்ணி விடுகிறார்கள். உபரியாக காலேஜ் ஃபீஸையும் கட்டி விடுகிறார்கள்). இவ்வளவு பற்றாக்குறை இருந்தும், வெளிநாட்டு பார்மஸி பட்டதாரிகளை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மக்கரேரேயில் கிட்டத்தட்ட 6 மாதம் படித்து, 6 மாதம் பயிற்சி எடுத்த பின்தான் அங்கீகாரம்.

மலேரியாதான் பிரதான வியாதி. அடுத்தது எயிட்ஸ். வெகு காலமாக குயினினையும், க்ளோரோகுயினையும் பயன் படுத்தியதில், இப்போது அவை எதிர்ப்புத் தன்மை இழந்துவிட்டன. இனிமேல் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி விட்டு, புதிய வகை மலேரியா மருந்துகளை இலவசமாக வினியோகிக்கிறது அரசாங்கம்.மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அவற்றை வெளியே கடத்திவந்து விலைக்கு விற்பதை காணும் போது வருத்தமாக இருக்கிறது. வருத்தப் படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் உகாண்டா...

25. இந்தியாவை மிஞ்சி விட்டது உகாண்டா...

புதன், ஜூன் 21, 2006

இந்தியாவில் இருந்த போது, உலகிலேயே அங்கேதான் லஞ்சம் அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்த பின்பு, இந்தியா எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. ஏதெனும் திருட்டு போய் விட்டது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சொன்றால், புகாரை வாங்குவதில் ஆரம்பிக்கும் உங்கள் தண்டச் செலவு. வெளிநாட்டவர் என்றால் ஸ்பெசல் ரேட். உள்ளூர்காரர்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி கிடைக்கும். புகாரை வாங்கின மறுநாளே, கடமையே கண்ணாயிணாராக காலங்கார்த்தால் உங்களைச் சந்திக்க ஒரு கான்ஸ்டேபில் வருவார்.

"எங்க பாஸ் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்"

அவனுடைய பாஸிற்கும், நம்மூர் கொள்ளைக்கூட்ட பாஸிற்கும் ஆறு வித்தியாசங்களைக் கூட காண முடியாது. அத்தகைய "பாஸ்" எனப்படுபவர் ஒரு C.I D. ஏதேனும் காணாமல் போய் விட்டதென்று புகார் கொடுத்திருந்தால், அதைத் திருடியதே நாம்தான் என்று ஆரம்பிப்பார். அதாவது, காணாமல் போனது எங்கே என்று அவரை நாம் கேட்டால், எது எங்கே இருக்கிறது என்று அவர் நம்மைத் திருப்பிக் கேட்பார்.

நான்கு காஸ்டேபில்கள் அவரது அடியாட்கள் மாதிரி உங்களைச் ச்ற்றி வந்து, நீங்கள்தான் திருடிவிட்டீர்கள் என்று கோஷம் போடுவார்கள். இவரைத் தூக்கி உள்ளே போடுங்கள் என்று சொல்லி விட்டு, பாஸ் வெளியே போய் விடுவார். சுற்றி இருக்கும் நான்கு அல்லக் கைகளில், ஒன்று, எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று ஆரம்பிக்கும். காய்கறிக்கடை போல் பேரம் பேசி, ஆளுக்கு 5000 ஷில்லிங்ஸ் கொடுத்தால், இன்று உன் வீட்டில் தூங்கலாம் என்று ஆசை காட்டி முடிப்பார்கள்.

இது முதல் நாள், இரண்டாம் நாள் ஒரு கான்ஸ்டேபில் பவ்யமாக உங்களைப் பார்க்க வருவார். திருடன் என்று ஒருவனைச் சந்தேகப் படுகிறோம். அவன் இப்போது 150 கி.மீ தள்ளி இருக்கும் ஒரு ஊரில் இருக்கிறான். அவனைப் போய் பிடித்து விசாரிக்க போக்குவரத்துச் செலவுக்கு 100,000 கொடுங்கள் என்று அதிகாரமாக வழிவார்கள். பின் இரண்டு நாட்கள் கழித்து, அது அவனில்லை என்று சொல்லி விடுவார்கள். கடைசியில், நீ இதை இன்ஸூரன்ஸில் க்ளெய்ம் செய்து வாங்கிக் கொள் என்று ஒரு ரிப்போர்ட் கொடுத்து விடுவார்கள். கடைசியி பார்த்தால், நாம் தொலைத்ததை விட அவர்களுக்குத்தான் அதிகமாகத் தண்டம் அழுதிருப்போம். அதனாலோ என்னவோ, இங்கே நிறைய பேர் தொலைத்தாலோ, திருடு போனாலோ போலீஸிடம் போவதே இல்லை.

அடுத்த கொள்ளைக் காரர்கள், குடியேற்ற உரிமை ஆட்கள். இங்கே யாராவது இந்தியர்களைப் பார்த்தாலே அவர்களுக்கு கொண்டாட்டம் வந்துவிடும். காரணம் 100க்கு 80 குஜராத்திகள் சட்ட விரோதமாகத் தங்கி இருப்பவர்கள். இவர்கள் சற்று பணக்கார கொள்ளையர்கள். டாலரில்தான் டீல் செய்வார்கள். முறையான உரிமம் இருந்தாலும் வந்து தொல்லை கொடுக்கத்தான் செய்கிறார்கள். என்னிடம்தான் முறையான உரிமம் இருக்கிறதே என்று காட்டினாலும் விட மாட்டார்கள். சாய் மணி கொடு, வந்து விட்டோம் ஏதாவது கொடு என்று வழிவார்கள். உரிமம் இருந்தால் கொஞ்சம் தைரியமாகப் பேசலாம். இல்லையென்றால் டாலரில் மொய் எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அது இது என்று இல்லை. எங்கேயும் லஞ்சம் எதிலும் லஞ்சம். யாராவது உகாண்டன் தாத்தா வந்து, வர்ம அடி கொடுத்தால்தான் உண்டு.

25. ஒரு படக் கதை...

ஞாயிறு, ஜூன் 18, 2006
















காலைலே எழுந்திச்ச உடனே இப்படி கண்ணை மூடிக்கிட்டு யோகா பண்ணனும்னு அம்மா சொல்லி இருக்காங்க...
















யோகாவை முடிச்சுட்டு ஃப்ரெஷா குளிச்சுட்டு வரனுமாம்...
















யாருப்பா அது, கைல கிலுகிலுப்பை எல்லாம் குடுத்து விளையாடச் சொல்றது... அதெல்லாம் சின்னப் பசங்க விளையாட வேண்டியது...

Posted by Picasa



















ஹையா... ஸ்டெதஸ்கோப் கிடைச்சாச்சு... நான் டாக்டராயிட்டேன்...
















நான் டாக்டரானது தெரிஞ்ச உடனே வெளில ஒரே பேஸண்ட்ஸ் கூட்டமாம்.. இன்னைக்கு என் காட்ல ஒரே மழைதான் போங்க...





















என்னது..!!! என் பேரை போலி டாக்டர் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்களா...?
















என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து எடுக்கிற வரைக்கும் இந்த ஸ்டெதஸ்கோப் கடிக்கும் போராட்டத்தை நடத்தலாம்னு இருக்கேன்...

Posted by Picasa














ஹி ஹி ஹி.. என் பேர லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்கலாம்...
















இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களா... இந்த மாமாவுக்கு எழுத ஒன்னுமே தோணலைன்னு என்னல்லாம் எழுதுறார்னு....

Posted by Picasa














இந்த மாமாவுக்கு வேற வேலையில்லை... வாங்க, நாம தூங்கப் போகலாம்...