என்னை மிகவும் கோபமுண்டாக்கும் செயல்களில் ஒன்று ஆய்வகத்தில் அடுத்தவர்கள் என் அனுமதியில்லாமல் என்னுடைய பொருட்களை உபயோகப் படுத்துவது. ஏனென்றால் எடுத்த பொருட்களை திருப்பி வைக்கவும் மாட்டார்கள், நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள். நம்முடைய உபயோகத்திற்காக அவசரமாகத் தேடும் போது அவை இருக்காது. இது நம்மை மிகவும் எரிச்சலூட்டுவதோடு மட்டுமல்லாமல் வேலையையும் பாதிக்கும். ஆனால், நிறைய பேர் வேலை பார்க்கும் இடங்களில் ஒழுங்கு என்பதை அதிகமும் எதிர்பார்க்க முடியாது. அதுவும் ஆய்வகங்கள் போன்ற கூடுதலாக ஒழுங்கு தேவைப்படும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த விசயத்தில் எங்களுடைய ஆய்வகத்தில் இருக்கும் சீன மாணவன் மீது எனக்கு மிகவும் மனவருத்தம் உண்டு. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" கொள்கையில் மிகவும் பிடிப்புள்ள மாணவன். எல்லோருடைய பொருட்களையும் தன்னுடைய பொருட்களாகவே எண்ணும் பரந்த மனப்பான்மை கொண்டவன். எடுத்த பொருட்களை திருப்பியும் வைக்க மாட்டான். ஆனால் நாம் அதை விசாரிக்கத்தால் உடனடியாக மன்னிப்புக் கோரும் உயரிய பண்புடையவன். ஆனால் திரும்பவும் அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்யத் துணிந்தவன். "Sorry" என்ற அந்த ஒற்றை வார்த்தை சகல தவறுகளையும் செய்யும் அதிகாரத்தை அவனுக்கு வழங்கியிருந்தது. ஆனால் மற்றபடிக்கு மிகவும் நல்ல பையன். தானுண்டு தன்னுடைய Facebook உண்டென மகிழ்ச்சியாக வாழ்பவன். ஆய்வகத்தில் அவனே இளையவன். ஆகவே பல சமயங்களில் எனக்குத் தோன்றும், நாங்கள் அனைவரும் படிப்பை முடித்துச் சென்ற பிறகு இந்தப் பையன் என்ன செய்வானோ என்று. மிகவும் கஷ்டப்படப் போகிறான் என்று மட்டும் தோன்றும். ஒரு வழியாக அவனையும், புதிதாகச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் தவிர அனைவரும் ஆய்வக வேலை முடிந்து, thesis எழுதச் சென்றுவிட்டோம்.
இடையில் ஒரு நாள் என்னுடைய Supervisor-ரைப் பார்க்க நான் அவருடைய அலுவகத்திற்குச் சென்றிருந்தேன். நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், ஏதோ எடுக்க வேண்டுமென்று ஆய்வகத்திற்குள் சென்றார். திரும்பி வந்தபோது அவருடைய கிரேக்க முகம் முற்றாக வெளிறிப் போயிருந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற முகபாவத்திலிருந்தார். என்ன ஆயிற்று என்றேன். தன்னுடைய ஆய்வகத்தையே காணவில்லை என்றார். ஆய்வகத்தில் ஒரு பொருளும் இல்லை, யாரோ ஒட்டுமொத்தமாக ஆய்வகத்தையே சுருட்டிக் கொண்டு போய் விட்டனர் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படி யார் செய்யக்கூடும். அதுவும் இவருடைய அனுமதி இல்லாமல்... நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஆய்வகத்தினுல் நுழைந்தேன்.
அங்கே நான் கண்ட காட்சி என்னால் நம்ப முடியாததாக இருந்தது. அவ்வளவு சுத்தமாக எங்கள் ஆய்வகத்தை நான் பார்த்ததே இல்லை. எல்லா கருவிகளும் சுத்தம் செய்யப்பட்டு ஒழுங்காக அதனதன் இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. காலி அட்டைப் பெட்டிகள் மற்றும் பனிக்கட்டி வைக்கப் பயன்படும் பெட்டிகள் ஒன்றையும் காண முடியவில்லை. Bufferகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு Canகளில் முழுவதுமாக நிரப்பப் பட்டிருந்தன. அந்தச் சீன மாணவன் இவையனைத்தையும் செய்திருப்பான் என என்னால் நம்பமுடியவில்லை. இத்தனை குப்பைகளையும் இத்தனை காலமாகப் பார்த்துக் கொண்டிருந்த Supervisor-ருக்கு அவை இல்லாமல் அவருடைய ஆய்வகமே அவருக்கு அடையாளம் தெரியாமல் போய்விட்டது. எனக்கும் வெட்கமாக இருந்தது. இவ்வளவு குப்பைகளையும் வைத்துக் கொண்டா நான் ஆய்வகத்தில் வேலை பார்த்திருக்கிறேன்... வெளியே வந்து Supervisor-ரிடம் விளக்கினேன். ஆய்வகம் நம்பமுடியாத அளவிற்குத் தூய்மையாக இருப்பதைச் சொன்னேன். அவரும் சமாதானமடைந்து பெருமூச்சு விட்டார். முகத்தில் மீண்டும் அமைதி குடிறேறியது.
ஆனால் எனக்குச் சில விசயங்கள் புரியவேயில்லை. அவன் ஏன் இவ்வளவு நாட்களும் இதைச் செய்யவில்லை? நாங்கள் அனைவரும் வெளியேறும் வரை ஏன் காத்திருந்தான்? இவ்வளவு ஒழுங்காக ஆய்வகத்தை வைக்கத் தெரிந்தவன், ஏன் நாங்கள் இருந்தவரையிலும் அத்தனை ஒழுங்கீனமாக நடந்துகொண்டான்? இவைகளுக்கு இன்னமும் விடை தெரியவில்லை எனக்கு.