India

Uganda

United Kingdom

Malaysia

37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்

திங்கள், ஜனவரி 24, 2011

எங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கே திரும்பி வந்து விட்டனர். பையன் கனடா பாஸ்போர்ட்டுடனும் சீன முகத்துடனும் இருப்பான். அண்மையில் இவன் விடுமுறைக்காக ஹாங்காங் சென்றிருந்தான். அப்போது அங்கு பார்த்தவற்றை அவன் சொல்லிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சீனர்கள் காப்பியடிப்பதில் வல்லவர்கள் என்பது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக் கொள்ளப் பட்ட விசயம். ஆனால் இந்த அளவுக்குச் செய்வார்களா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.

சீன அரசாங்கம் தற்போது தொழில்நுட்பக் கல்விக்கும், உயர் கல்வி ஆய்வுகளுக்கும் அதிகமான அளவில் நிதி அளித்து வருவது தெரிந்ததே. அதுபோக உலகமெங்கும் வியாப்பித்திருக்கும் சீன ஆய்வாளர்கள் தரமான ஆய்வுக் கட்டுரைகளை உலக அளவில் பிரபலமான பல ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளிலும் வெளியிடுகிறார்கள். ஆனால் இவர்கள் பெயரைக் கெடுக்கும் விதமாக சீனாவில் சிவ விசயங்கள் நடப்பதாக அந்த மாணவன் கூறினான். அதாகப் பட்டது, உலகின் பல மூலைகளில் இருக்கும் உயர்ந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்டு தரமான அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடப் படும் பல ஆய்வு வெளியீடுகளைக் காப்பியடித்து அவர்கள் பெயரில் சீனாவிலிருந்து வெளியாகும் பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்களாம். அவைகள் பெரும்பாலும் சீன மொழியில் இருப்பதாலும், பிரபலமான பத்திரிக்கைகளாக இல்லாத காரணத்தாலும் வெளி உலகத்திற்குத் தெரிவதில்லை என்றான். ஆய்வாளர்களின் பெயரை மட்டும் மாற்றி விடுவார்கள், அல்லது ஆய்வு முடிவுகளை சற்றே மாற்றி வெளியிட்டு விடுகிறார்களாம். ஒரு போதும் சீன அறிவியல் பத்திரிக்கைகளில் தான் ஆய்வு முடிவுகளை வெளியிடப் போவதில்லை என்ற தகவலையும் கூறினான். இந்தியாவில் இதே மாதிரி ஏதேனும் நடக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

36. 2011

ஞாயிறு, ஜனவரி 02, 2011

புது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன்? 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா? யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருபுரு கருபுரு, யூ வார் அண்டர் அரெஸ்ட்...). வழக்கமாகப் பாட்டிலுடன் தொடங்கும் புதுவருடம் வாழ்க்கையிலேயே முதன்முறையாக இரவு 12 மணி பூஜையுடன் தெடங்கியிருக்கிறது. மனைவிக்கு நன்றி. காலையில் லண்டனில் இருக்கும் பிரம்ம குமாரிகள் உலக மையத்திற்குச் மனைவி அழைத்துச் சென்றாள். பத்து நிமிட தியானம். (டென்சன் ஆவாதீங்க... நான் இல்ல... நான் இல்ல... அவள்தான்) எலுமிச்சை சாதம் போல ஒன்றும், காபியும் இருந்தது. (இது எனக்குத்தான்...) அங்கிருந்து ஃபெல்த்தாம் சினிவேல்ட்... பதினைந்து நிமிடம் தாமதம். மன்மதன் அம்பு பார்க்க முடியாமல் ஊர் திரும்பினோம். இந்த வருடமாவது கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டும். பார்க்கலாம். ரொம்ப நாளா யாருமே வராததினால என் வலைப்பதிவுக்குள்ளே வர எனக்கே பயமா இருக்கு!!!. இருந்தாலும் யாரும் தைரியமா நுழைஞ்சிருந்தா உங்களுக்கு என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...