India

Uganda

United Kingdom

Malaysia

51. உகாண்டாத் திருடர்கள்... (2)

சனி, ஜூலை 28, 2018




உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இருமுறை) stock taking என்றொரு வைபவம் நடைபெறும். கடையில் இருக்கும் பொருட்கள் லெட்ஜர் காட்டும் பொருட்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்று பார்ப்பார்கள். வழக்கமாக கம்பாலாவிலிருந்து ஒரு கணக்காயர் வருவார். சில சமயங்களில் கடை மேலாள‌ரிட‌மே அந்தப் பொறுப்பை விட்டு விடுவார்கள். அன்று கடை விடுமுறை. நானும் மற்ற அலுவலர்களும் காலை 8 மணிக்கெல்லாம் கடைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டு ஸ்டாக் எடுப்போம். மதியம் என் வீட்டில் எல்லோருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்ப‌ட்டிருக்கும். என் வீடு கடையின் மாடியிலேயே இருந்தது. ஒரு மணி நேர மதிய இடைவேளைக்குப் பின்னர் திரும்பவும் stock taking. காலையிலேயே கடை ஆட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் என்று பிரித்து விடுவேன். அவர்கள் மருந்துக்களைக் கணக்கெடுத்து குறித்துக் கொள்வார்கள். நான் ஒவ்வொருவராகச் சென்று சரி பார்ப்பேன். இதுதான் நாங்கள் எப்போதுமே பின்பற்றும் நடைமுறை.
2006-ல் ஒருமுறை இப்படி ஸ்டாக் எடுத்துக் கொண்டு இருந்தோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  மதியம் கடைக்கு மேலுள்ள எங்கள் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டுத் திரும்பியும் வேலையைத் தொடர்ந்தோம். ஒரு மணி நேரம் கழித்து, வாசலுக்கு அருகில் ஒரு உயரமான நாற்காலியில் நின்று கணக்கெடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு எல்லோரும் அவள் இருந்த இடம் நோக்கி ஓடினோம். முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் அந்தப் பெண் சுய நினைவுக்குத் திரும்பினாள். மிகவும் களைப்பாக இருந்தாள். சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று நினைத்தேன். எனவே, அவளை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு நாங்கள் வேலையைத் தொடர்ந்தோம்.

சற்று நேரத்தில் அங்கே இருந்த எட்டுப் பேருக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. சிலர் வாந்தியும் எடுத்தார்கள். சாப்பாடுதான் பிரச்சினை என்று நினைத்தேன். ஆனால் கடையின் உதவி மேலாளர் (ஒரு குஜராத்தி) சைவம் ஆதலால் அவனுடைய வீட்டில்தான் சப்பிட்டுவிட்டு வந்திருந்தான். அவனுக்கும் தலைசுற்று இருந்ததால் சாப்பட்டில் பிரச்சினையில்லை என்பது தெரிந்தது. நேரம் ஆக ஆகத் தலைசுற்றும் அதிகமாக ஆரம்பித்தது. கணக்கெடுத்த வரைக்கும் போதும், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லோரையும் கிளம்பச் சொல்லிவிட்டேன். எனக்கும் நிற்கவே கடினமாக இருந்தது. கடையின் பின்பக்கக் கதவை அடைத்து விட்டுக் கடைக்கு மேலிருந்த வீட்டிற்குச் செல்ல எனக்கு கால் மணி நேரத்திற்கு மேலானது. மாடிப்படிகளில் கிட்டத்தட்ட தவழ்ந்துதான் சென்றேன். எப்படியோ வீட்டிற்குச் சென்று கட்டிலில் படுத்தால் வீடே சுற்றுவது போல் தோன்றியது. உருண்டு கொண்டே இருந்தேன். எவ்வளவு நேரம் முழித்திருந்தேன் என்று தெரியாது. கண் முழித்த போது இரவாகி விட்டிருந்தது. தலைசுற்று நின்று விட்டிருந்தது. ஆனால் களைப்பாக உணர்ந்தேன். அடுத்த நாள் காலையில் பணியாளர்கள் கடைக்கு  வந்த பின்னர், கடையின் முன்வாசலில் black magic க்கில் உபயோகப் படுத்தும்  சில வஸ்துக்கள் கிடந்ததாகச் சொன்னார்கள். Black magicக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அந்தப் பொருட்கள் மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களாக இருக்கலாம் என்று நினைத்தேன். கடை முன்பக்கம் அடைத்திருக்கிறது, உள்ளே அனைவரும் மயங்கி விட்டால் பின்னர் பின்பக்க‌மாக‌ உள்ளே நுழையலாம் என்று யாராவது திட்டம் போட்டிருக்கலாம். பிறகு ஏதோ காரணத்தால் திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம்.

இதைப் போலவே இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. எங்கள் கடையில் வேன் ஓட்டுனராக முண்டு (Muntu) என்றொரு பையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பையன், திருட்டு, போதைவஸ்துக்கள் என ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. வார இறுதியில் அவனுடைய ஊருக்குச் சென்று விட்டு திங்களன்று திரும்பி வருவான். ஒரு நாள் திங்கட்கிழமை காலை பையன் வரவில்லை. கைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. திடீரென மதியம் வாக்கில் ஒரு Boda Boda காரர் அவனைக் கொண்டுவந்து சேர்த்தார். போதைப் பொருள் உபயோகித்தவன் மாதிரி பையன் சிரித்துக் கொண்டே இருக்கிறான். உடனடியாகப் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தோம். diuretic கொடுத்து அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றி அவன் உடம்பிலிருந்து நச்சை/போதைப் பொருளை வெளியேற்றினார்கள். இரண்டு மணி நேரம் கழித்துச் சுயநினைவுக்கு வந்தவன் சொன்னான். பேரூந்தில் இவன் அருகே அமர்ந்திருந்தவன் ஏதோ உபயோகித்து இவனை மயக்கமடையச் செய்து, பணத்தைத் திருடியிருக்கிறான். பேரூந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தவனைத் தெரிந்த Boda Boda காரர் கடையில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் வேன் பயணத்தின் போதெல்லாம் ஓட்டுனருக்கு அருகிலிருக்கும் முன்னிருக்கையில் மட்டுமே பயணிக்கத் தொடங்கினேன். அதிலும் பிரச்சினை இருந்தது. ஏற்கெனவே அந்த இருக்கையில் யாராவது அமர்ந்திருந்தால், நான் அந்த வேனில் ஏறமாட்டேன். ஓட்டுனர் எனக்காக அங்கே ஏற்கெனவே அமர்ந்திருப்பவர்களை எழுப்பிவிட்டு என்னை அமரச் செய்வார்கள். சில சமயம் அப்படி எழுப்பிவிடப்பட்டவர்கள் மிகவும் கோபமாக என்னை முறைத்துக் கொண்டே பின்னால் செல்வார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்பது புரிகிறது. நிறத்தை/இனத்தை முன்னிறித்திச் சிலருக்குச் சலுகைகள் வழங்கப் படும் போது, அதனால் பாதிக்கப் படுப‌வர்களுக்கு எப்படி வலிக்கும் என்பது, வளர்ந்த நாடுகளுக்குக் (??) குடியேறி நான் பாதிக்கப்பட்ட பின்னர்தான் புரிந்தது. விதி வலியது, வேறென்ன சொல்ல?

50. அடிலெய்ட் - முதல் பார்வை

புதன், ஜூலை 25, 2018

அடிலெய்டைத் தொலைந்து போக வசதியில்லாத நகரம் என்பார்கள். மற்ற ஆஸ்திரேலிய மாநிலத் தலைந‌கரங்களை ஒப்பிடும் போது அடிலெய்ட் சிறிய நகரம், மற்றும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். எனவே தொலைந்து போவது கடினம். பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரங்களைப் போலல்லாமல் அடிலெய்ட் பிரித்தானிய குற்றவாளிகளின் குடியேற்றத்திற்காக நிர்மாணிக்கப் படவில்லை, மாறாக, Free settlers எனப்படும் குற்றப் பிண்ணனியில்லாதவர்களின் குடியேற்றத்தினால் உண்டான நகரம். அடிலெய்ட்வாசிகளுக்கு அதில் பெருமை அதிகம். 

                     Image courtasy: https://www.australia.com/en/places/adelaide-and-surrounds.html

ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர விண்ணப்பித்தது 2014லில். விசா வந்தது 2018ல். இது தெற்கு ஆஸ்திரேலியா sponsored விசா. எனவே விசாவில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. முக்கியமானது, நாங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடங்கள் வசிக்க வேண்டும். அதில் ஒரு வருடமாவது ஒரு முழு நேரப் பணியிலோ அல்லது இரண்டு பகுதி நேரப் பணியிலோ இருக்க வேண்டும். அதன் பின்னர் நிரந்தரக் குடியுறிமை பெற்றுக் கொள்ளலாம். 2018 ஜனவரியில் இங்கே குடியேறிய போது, இந்நகரம் அளவுக்கு மீறி அமைதியாக இருப்பதாகத் தோன்றியது. தவறு அடிலெய்ட் மீதல்ல. இங்கே வருவதற்கு முன்பு கோலாலம்பூரில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வசித்திருந்தோம். எங்கு பார்த்தாலும் வானுயரக் கட்டிடங்கள், திரும்பின பக்கமெல்லாம் மால்கள், அகலமான சாலைகளில் விரையும் கணக்கிலடங்காத வாகனங்கள் என மலேசியத் தலைநகரின் பரபரப்பான வாழ்க்கை பழகிவிட்டிருந்தது. அடிலெய்டின் அமைதி அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தவிர மலேசியா வந்த பின் நாங்கள் மறந்து போயிருந்த ஒன்றையும் அங்கே அனுபவிக்க நேர்ந்தது. அது, பெரும்பாலான கடைகள் மாலை 5.30 மணிக்கே மூடி விடுவது. இந்த வழக்கத்தை இங்கிலாந்திலும் அனுபவித்திருந்தோம். ஜனவரி இங்கே கோடைகாலம், எனவே இரவு 8.30 மணி வரை வெளிச்சம் இருந்தது ஆனால் கடைகள் இல்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கோலாலம்பூரில் வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் மழை பெய்யும், மிதமான வெய்யில் இருந்தாலும் அடிக்கடி மழை பெய்வதால் அவ்வளவாக வெக்கை தெரியாது. ஆனால் அடிலெய்டில் காற்றில் மிகக்குறைவான ஈரப்பதம் காரணமாகத் தோல் வரண்டு போனது, கண்கள் எரிந்தன, தலைவலி உண்டாயிற்று. வெய்யில் வேறு 40 டிகிரிகளுக்கு மேல் கொளுத்தியது. மதிய நேரத்தில் வெய்யிலில் பத்தடி நடப்பது கூடக் கடினமாக இருந்தது. உபர் சேவையும் அதிகம் செலவு வைப்பதாக இருந்தது (குறைந்தபட்சக் கட்டணம் AUD 8) . இது போக எது வாங்கினாலும் மனது தன்னிச்சையாக‌ மலேசிய ரிங்கெட்டில் கணக்கிட்டு, அய்யோ, இது மலேசியாவிலே எவ்வளவு விலை குறைவானது என அலறியது. 

இங்கிலாந்திலிருந்து மலேசியாவிற்கு வந்தபோதும் இது போலவே எங்களுக்குக் கோலாலம்பூரைப் பிடிக்கவேயில்லை. ஆனால் இந்த ஐந்து வருடங்களில் கோலாலம்பூர் மனதிற்கு மிகவும் நெருக்கமான நகரமாக மாறிவிட்டிருந்தது. நிறைய நண்பர்கள், நல்ல வேலை, இந்தியாவிற்குச் செல்வது மிகவும் எளிது, நல்ல சீதோஷ்ணநிலை, இந்தியாவிலிருந்து அப்பவுக்கும், அக்கா, தங்கைகளுக்கும் வந்து செல்வது எளிதாக இருந்தது. அடிலெய்டில் யாரையும் தெரியாது. சில நண்பர்கள் சிட்னியிலும் மெல்பெர்னிலும் இருந்தார்கள். வேலை இனிமேல்தான் தேட வேண்டும். பெரும்பாலான வேலைகள் சிட்னியிலும் மெல்பெர்னிலும் ம‌ட்டுமே இருந்தன. முன்னரே குறிப்பிட்டது போல், எங்களுடைய விசா கட்டுப்பாடுகளால் எங்களால் தெற்கு ஆஸ்திரேலியாவைத் தவிர வேறெங்கும் வசிக்கவோ, வேலை செய்யவோ முடியாது.  தெற்கு ஆஸ்திரேலியா வேலை வாய்ப்புகள் மிகக் குறைவான‌ மாநிலம். மாநில வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விடக் குறைவு, வேலை வாய்ப்பின்மை தேசிய சராசரியை விட அதிகம். மக்கள்தொகையைப் பொருத்தவரையில் ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்தது, இன்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.  ஒரு விதத்தில், வாழ்ந்து கெட்ட நகரம்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் வேறு நகரங்களுக்கும் வேலைக்குச் செல்ல முடியாது, ஏனென்றால் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலைடைத் தவிர வேறு நகரங்களே இல்லை. மொத்தமுள்ள 17 லட்சம் தெற்கு ஆஸ்திரேலியர்களில் 13 லட்சம் பேருக்கு மேல் அடிலைட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர். சமீபத்தில்தான் நிறைய வேலைவாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்திருந்தன. விபரங்களை இங்கே காணலாம். இதை எல்லாவற்றையும் விட பெரிய பிரச்சினை என் மகளைப் பள்ளியில் சேர்ப்பதில் வந்தது. என் மகளுடைய பிறந்த தினம் மே 10. 2018 ல் அவள் 4 வயது பூர்த்தி செய்வாள். தெற்கு ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை குழந்தைகளுக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் 4 வயது முடிந்திருந்தால் அந்த வருடம் ஜனவரியிலேயே Preschool அல்லது Kindergarten எனப்படும் பாலர் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். மே ஒன்றாம் தேதி என்றால் கூட அடுத்த வருடம் ஜனவரியில்தான் அட்மிசன். மகள் ஒரு வருடம் கழித்து பள்ளி செல்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அதுவரை childcare centre எனப்படும் குழந்தைகள் காப்பகத்தில் விடவேண்டும். அதற்கு தினமும் AUD 110 (INR 5500) கட்ட வேண்டும். நிரந்தரக் குடியேறிகளுக்கும், குடிமகன்களுக்கும் அரசாங்கம் இதில் பெரும்பகுதி கட்டிவிடும். மீதம் மட்டும் அவர்கள் கட்டினால் போதும். எங்களுடைய விசாவிற்கு இந்தச் சலுகை கிடையாது. முழுவதையும் நாங்களே கட்டவேண்டும். மேலும் இந்த விசாவிற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் Medicare எனப்ப்படும் medical insurance கிடையாது. அதற்காகத் தனியார் இன்சூரன்ஸ் வாங்க வேண்டியிருந்தது. மொத்தத்தில், எல்லாம் சேர்ந்து, ஏண்டா மலேசியாவை விட்டு வந்தோம் என எண்ண வைத்துவிட்டது. தொலைந்து போக முடியாத அடிலெய்ட் வீதிகளில் தொலைந்து போனவர்களைப் போல் உணர்ந்தோம்.