India

Uganda

United Kingdom

Malaysia

35. நின்று போகாத உலகம்...

திங்கள், டிசம்பர் 20, 2010

என் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், "நீ இந்த வேலைகளைச் செய்யாவிட்டாலும் கம்பெனியின் உலகம் ஒன்றும் நின்று போய்விடாது, இந்த வேலைகளைச் செய்யும் ஆட்கள் திடீரென்று முளைத்து வருவார்கள், கம்பெனி எப்போதும் போல் லாபம் ஈட்டும்" என்று. என் மனைவி எப்போதும் போல் என்னைப் பொருட்படுத்தாமல் சென்று விடுவாள். விவாதத்தில் வென்றுவிட்ட தொனியில் நான் புன்னகைப்பேன். எனக்குத்தான் எல்லாம் தெரியுமே...

இந்தக் கதைக்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக இங்கே வெள்ளைக்காரர்களுடன் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஓரளவு உற்சாகத்துடன் கலந்து கொண்டிருந்தாலும் இந்த முறை அந்த உற்சாகம் மிஸ்ஸிங். பக்கத்து லேப் பசங்களுடன் இந்த முறை விருந்துக்குக் கூட செல்ல வில்லை. இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு ரொட்டீன்தனம் தெரிவது காரணமாக இருக்கலாம். அல்லது நன்றாகப் பழ‌கிய பலர் வெளியேறி புதிதாகப் பலர் வந்திருப்பதால் இருக்கலாம். என்னவோ, நான் கிருஸ்மஸ் கொண்டாடாததால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. யாரும் அது பற்றிக் கவலைப் படப் போவதும் இல்லை. ஆனால் கிழக்காப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் ஒரு பத்துப் பேராவது அது பற்றிக்கவலைப் படுவார்கள் என நான் நம்புவதற்கு இடமிருந்தது.

உகாண்டாவில் நான் வேலை பார்த்து வந்த கடையின் ஊழியர்களே அவர்கள். கடையில் ஸ்டாக் எடுக்கும் போது அவர்களை எனது வீட்டில் சாப்பிட அழைப்பேன். அங்கே கோழி (வான் கோழியென்று நினைக்கிறேன்) விலை அதிகம், ஆடு விலை கம்மி. எனது  House Girl-லிடம் அவர்களுக்காகக் கோழி வாங்கி சமைக்கச் சொல்லுவேன். அவர் ஆப்பிரிக்கரானதால் அவர்களுடைய சுவக்கேற்ற மாதிரி மசாலா இல்லாமலும்,  எனக்காகத் தனியாக மசாலா போட்டு ஆடும் சமைப்பார். Stock taking என்பது அதிகமான களைப்பை உண்டாக்கும் வேலையாதலால் இந்த மதிய உணவு அவர்களுக்கு சற்றே தெம்பளிக்கும் என்று நான் இதைச் செய்து வந்தேன். அந்த உணவுக்குப் பின்பும் அவர்கள் வேலை செய்ய வேண்டுமென்பதால் அங்கு குடிப்பதற்கு அனுமதிப்பதில்லை.

அதுபோக அவர்களை வருடத்திற்கு இரண்டு முறை வெளியே உணவகத்தில் இரவு விருந்திற்கு அழைப்பதுண்டு. அங்கே குடிப்பதற்கு அனுமதி உண்டு. ஈஸ்டருக்கு விடுமுறைக்கு முன்னாலும், கிருஸ்மஸ் விடுமுறைக்கு முன்னாலும் பாலேயின் உயர்தர உணவகம் ஒன்றில் இது வருடாவருடம் நடக்கும். நூறிலிருந்து நூற்றம்பதாயிரம் ஷில்லிங்குகள் வரை செலவாகும். மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வரை. இது எனக்கும் அவர்களுக்குமான உறவைப் பலப்படுத்தி, இதெல்லாம் செய்கிறானே என்று கடையில் திருடாமல் இருப்பார்களே என்று நம்பி செலவானாலும் பரவாயில்லை என்று செய்து வந்தேன். அப்படியும் நிறைய ஊழியர்கள் திருடி மாட்டிக் கொள்வார்கள். அப்படி மாட்டி நிறைய பேரை வேலையிலிருந்து தூக்கியும் இருக்கிறேன். இருந்தாலும் இந்த விருந்து வைபோகத்தை மட்டும் நிறுத்தவில்லை. அங்கிருந்து வந்து மூன்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் என்னை மிகவும் மிஸ் செய்திருப்பார்கள் எனத் திண்ணமாக நம்பியே இதுநாள் வரையிலும் இருந்து வந்தேன். இந்த உலகில் நாம் திரும்பிப் போகவே போகாத இடத்திலிருக்கும் சிலர் நம்மை மிஸ் செய்கிறார்கள் என்ற எண்ணமே சில சமயங்களில் நம்மை ஆழ்ந்த பெருமிதத்திற்குள்ளாக்குகிறது. ஆகா, எவ்வளவு நல்லவன் நான்... எவ்வளவு கொடுத்து வைத்தவன் நான்!!!

கடந்த வாரம் உகாண்டாவிலிருக்கும் ஒரு நண்பருக்குத் தொலைபேசினேன். அவரிடம் எனது பெருமையை நிலை நாட்டும்பொருட்டு இப்போது அங்கே நிலவரம் என்ன என்று விசாரித்தேன். என்னைக் கடை ஊழியர்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்ற செய்தியை உள்வாங்கி என் மனதைக்குளிர்விக்க என் காது மிகவும் உன்னிப்பானது. ஆனால் அவர் சொன்ன விசயம் என் அகந்தையைத் தவிடு பொடியாக்கியதுதான் மிச்சம். அதாகப் பட்டது, நான் கடையை விட்டகன்ற அடுத்த வருடத்தில் கடை ஊழியர்கள் அனைவரும் புதிய மேலாளரிடம் இந்த விருந்து வைபோகத்தைப் பற்றிக் கூறி அதைத் தொடரும் பொருட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவரும் அதை கம்பெனி மேலதிகாரிகளிடம் விளக்கி அந்த வருடத்திலிருந்து கம்பெனி செலவிலேயே அவர்களுக்கு கிருஸ்மஸ் விருந்து வழங்கப் பட்டிருக்கிறது. ஆக இந்த விருந்து படலத்தைத் தொடங்கி வைத்தவன் என்ற முறையிலே எனக்கு மூவாயிரத்து ஐநூறு வருடாவருடம் நட்டம்.  அவ்வளவுதான்.

நண்பர் சொன்ன விசயம் எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. நான் ஒருவன் இல்லாதது அவர்கள் எவருக்கும் ஒரு சிறு சலனத்தைக்கூட அளிக்க வில்லையா? வெட்கம்... திரும்பிப் பார்க்கிறேன். என் மனைவி வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்தாள். வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.  எனக்கு ஒன்று புரிந்தது. நான் கிருஸ்மஸ் கொண்டாடாததைப் பற்றிக் கிழக்காப்பிரிக்காவிலும் யாரும் கவலைப் படப் போவதில்லை.

34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...

வியாழன், அக்டோபர் 07, 2010

சமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ  அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம். அதை விடக் கொடுமை அந்த ஒரிஜினல் படங்களுக்கு நன்றி என்று கூடப் போடுவதில்லையாம். என்ன கொடுமை, என்ன கொடுமை... இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையம் முழுக்க நிறைய காணக்கிடைக்கின்றன. இந்தப் பின்ன‌னியில்தான் நான் நேற்று பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தை  அலச வேண்டியிருக்கிறது. படத்தின் பெயர் "தி டவுன்". சார்ல்ஸ் டவுன் என்பதன் சுருக்கமே அது. இந்தப் பெயர் ஒன்றே போதும் இந்த இயக்குனருக்கு கற்பனை வளமே இல்லையென்று நிரூபிக்க. ஏனென்றால் நம் இயக்குனர் இங்கே சுப்ரமணியபுரம் என்று ஏற்கெனவே சுயமாகச் சிந்தித்துப் பெயர் வைத்து விட்டார். ஊரின் பெயரால் இங்கே ஏற்கெனவே ஒருவர் சிவகாசி, மதுர, திருப்பாச்சி என்று பல படங்கள் வந்திருந்தாலும், சுப்ரமணியபுரத்தில் மட்டுமே கதைமாந்தர்கள் ஊடாக‌ அந்த ஊரின் ஒரு முழுமையான சித்திரம் பார்வையாளனுக்குக் கிடைத்தது. தி டவுனும் அதே மாதிரியான ஒரு முயற்சியே. இது படம் தொடங்குவதற்கு முன்னர் காட்டப்படும் எழுத்துக்களிலேயே விளக்கப் பட்டு விடுகிறது.

சுப்ரமணியபுரத்தின் கதை என்ன? ஒழுங்கான வேலை இல்லாத சில இளைஞர்கள் காலப்போக்கில் ஒரு அரசியல்வாதியின் அடியாட்கள் போல ஆக நேரிடுகிறது. வன்முறையின் பாதையில் இழுக்கப்படும் அவர்கள் அதன்பின் அதிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. இடையில் நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இந்தக் காதல் பிடிக்காமல் எச்சரிக்கும் இன்னொரு நண்பன், காதலித்த‌ பெண்ணின் துரோகத்தால் அவர்கள் எல்லோரின்  கதையும் முடிகிறது.

இப்போது தி டவுனின் கதை. திருடுவதையே தொழிலாகக் கொண்ட சில நண்பர்கள், அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மாஸ்டர் மைண்ட் தாதா, முயன்றாலும் அந்த தாதாவின் பிடியிலிருந்து வெளிவரமுடியாத நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இதை எச்சரிக்கும் இன்னொரு நண்பன், ஒரு பெண்ணின் துரோகத்தால் நண்பர்கள் அனைவரும் காலி. கதாநாயகன் மட்டும் எஸ்கேப்.   அவன் காதலியை வைத்து அவனைப் பிடிக்க திட்ட்ம் தீட்டும் போலீஸ், துரோகியாகும் கதாநாயகி, இதிலும் எஸ்கேப்பாகும் கதாநாயகன். கதாநாயகன் எஸ்கேப் தவிர எல்லாமே ஒன்றுதானே.

கதாநாயகன் சாகிற சீன் இதிலே இல்லையே என்று ஜல்லியடிப்பவர்கள் போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கலாம். படத்தின் இயக்குனரான் பென் அப்ஃலெக் சுப்ரமணியபுரத்தைப் பார்திருப்பார் என்று நான் நம்பவில்லை, நீங்களும் நம்பப் போவதில்லை. இதைப்பற்றி ஆங்கிலத்தில் யாரும் பதிவிடப் போவதுமில்லை. ஆனால் இதே விச‌யம் தமிழில் நடந்தால் மட்டும் ஏன் நாம் இயக்குனரைக் குறை சொல்லி ஏகப்பட்ட‌ பதிவுகள் இடுகிறோம்? சில இடுகைகளில் கூறப்படும் சினிமா ஒற்றுமைகள் சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கிறது. ஆகவே பொதுமக்களே வதந்திகளை நம்பாதீர்கள். இந்தப் பதிவையும் கூட...

33. அயன் - Special Preview Show in Manchester

ஞாயிறு, ஏப்ரல் 05, 2009

முன்னறிவிப்பு : இது அயன் படத்தைப் பற்றிய விமர்சனமல்ல...

இங்கே இங்கிலாந்தில் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. Cineworld, AMC, Odeon எனப் பல தொடர்திரையரங்குகளும், சில பல சிறிய மற்றும் நடுத்தர வகைத் திரையரங்குகள் இருந்தாலும், படம் பார்க்கக் கட்டணம் என்பது எல்லா இடங்களிலும் சராசரியாக 6 பவுண்டுகள் வரை வருகிறது. மாணவர்களுக்குச் சில கட்டணக்கழிவுகள் உள்ளன. திங்கள் முதல் வியாழன் வரை பகல் நேரப் படங்களுக்கு 4.50 பவுண்டுகள் ஆகின்றன. இது போக சில செல்போன் கம்பெனி தள்ளுபடிகளும் உள்ளன. அதாவது நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட செல்போன் சேவையை உபயோகிப்பவரானால், புதன்கிழமையன்று ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம். மாணவர்களுக்கான சில இணையதளங்களும் இத்தகைய தள்ளுபடிகளை அளிக்கின்றன.

ஆனால் இந்தவகைத் தள்ளுபடிகளுக்கெல்லாம் சிகரம் என்றால் அது Cineworld திரையரங்கக் குழுமம் வழங்கும் Unlimited Cinema Card Offerதான். அதாகப்பட்டது, நீங்கள் மாதம் 11 பவுண்டுகள் கட்டினால் அவர்கள் கொடுக்கும் அட்டையைப் பயன்படுத்தி மாதம் முழுவதும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அந்த அட்டைக்குக் குறைந்த பட்சம் ஒரு வருடம் Contract போட வேண்டும் அல்லது ஒரே தவணையில் ஒரு வருடத்திற்கான மொத்தப் பணத்தையும் கட்டி வாங்கிக் கொள்ளலாம். இவர்கள் UK முழுவதும் 70க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வைத்திருப்பதால் இது அவர்களுக்கும் லாபகரமானதாகவே இருக்குமென்று நம்புகிறேன். ஆனால் நேற்று அயன் திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து அந்த நம்பிக்கை மேல் கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கிறது.

நேற்று பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று நண்பர்கள் அயன் திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தோம். படம் ஓரளவுக்கு பரவாயில்லை ரகமாகவே இருந்தது. மூன்று பேருமே ரசித்துத்தான் படம் பார்த்தோம். விசயம் என்னவென்றால் கிட்டத்தட்ட 150 பேர் அமரக்கூடிய அந்தத் திரையரங்கில் மொத்தமே நாங்கள் மூன்று பேர்தான் அமர்ந்திருந்தோம். இதில் உள்ளே நுழையும்போது பையையெல்லாம் திறந்து காட்டச் சொல்லிப் பரிசோதித்தனர் (காமெரா இருக்கிறதா என்றுதான்...) எங்களுக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. இந்த லட்சணத்தில் நான் Unlimited Cardவைத்திருந்தேன். மான்செஸ்டரில் தமிழ்ப்படங்கள் அவ்வளவாக வருவதில்லை. எப்போதாவதுதான். இப்படிக் கூட்டம் அலை மோதினால் அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம்... இது ஏனென்று தெரியவில்லை. மான்செஸ்டர் இங்கிலாந்தில் மூன்றாவது பெரிய நகரம். நிறையத் தமிழர்கள் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். சரியாக விளம்பரம் செய்யவில்லை, திரையரங்கம் வெகு தொலைவில் உள்ளது என்ற பல காரணங்கள் இருந்தாலும் வெறும் மூன்றே பேர் ஒரு படத்தைப் பார்த்தது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் எங்கள் மூன்றே பேருக்காக என்றாலும் படத்தை ஓட்டிய திரையரங்கத்திற்கு நன்றி. கிட்டத்தட்ட ஒரு Special Preview Show மாதிரி இருந்தது.

32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள் சாப்பிட்டு விட்டு இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியாமல் அடுத்த நாள் காலையில் நெஞ்சுக் கரிக்கிறது என்று சொன்னதற்குத்தான் இப்படிச்சொன்னார் . இப்படி அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அவதிப்படுவது எப்போதிருந்து தொடங்கியது என்றுநினைவில்லை. அனேகமாக கல்லூரியில் படிக்கும் போதுதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன் +2 வரையில் வீட்டிலிருந்து படித்தபோது இப்படி அதிகமாக உண்டதாகநினைவில்லை. கல்லூரியில் எப்போதாவது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைவரும் போது காஞ்சமாடு கம்மங்கொல்லையில் பாய்ந்தது போல எக்குத்தப்பாகச் சாப்பிட்டுவிட்டுபுளிச்ச ஏப்பமா வருதும்மா என்று பரிதாபமாகச் சொன்னது நினைவிருக்கிறது. என்னவோதெரியவில்லை, உணவகங்களில் சாப்பிடும் போது அப்படி அதிகமாகவெல்லாம் சாப்பிடமுடியவில்லை. மற்றவர்கள் பார்ப்பார்களோ என்ற உணர்வுடனே சாப்பிட்டதால்இருக்கலாம். இருந்தாலும் தமிழ் நாட்டு உணவகங்களில் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நாட்டின் தேசிய உணவான புரோட்டா சால்னா சாப்பிடும் போது அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறேன்.... வீட்டிற்கு வந்துவிட்டால் சாப்பாட்டில் நான் பீமன்தான். நிறைய நேரங்களில் சாப்பிட்ட பின் என்னால் எழுந்திரிக்கவே முடியாமல் போய் விடும். என் தம்பிதான் கை கொடுத்துத் தூக்கி விடுவான். அம்மா சமையலில் எல்லாமே பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது ஞாயிறு காலையில் வைக்கும் இட்லி, கறிக்குழம்பு கூட்டணி. பலமுறை பதினைந்து இட்லிகளுக்கு மேல் ஸ்வாகா பண்ணியிருக்கிறேன்.

இப்படி சாப்பாட்டு இராமனாக இருந்த நான் திடீரென்று உகாண்டாவிற்குச் செல்ல வேண்டும் என்றவுடனே கொஞ்சம் பயந்துதான் போனேன்... அங்கே அவர்கள் வேறு நரமாமிசம் சாப்பிடுவார்கள் என்று நண்பர்கள் டுபாக்கூர் விட்டிருந்ததால் கனவில் கறிக் கடைக்காரரிடம் சென்று, "அந்த பிருஷ்ட பாகம் வேண்டாம், கொஞ்சம் கீழே முழங்காலுக்கு மேலே தொடைக் கறியாக‌த் தாருங்கள். ரொம்ப மேலே போகாதீர்கள்...வேறு எதையாவது வெட்டிவிடப் போகிறீர்கள்..." என்றெல்லாம் கேட்டுத்தொலைக்க வேண்டியிருக்குமோ என்று நடுங்கித்தான் போனேன். நல்லவேளையாக நான் சென்ற போது கறிக்கடைகளில் ஆடு மாடுகளையே தொங்க விட்டிருந்தார்கள்.

உகாண்டாவில் வீட்டு வேலை செய்வதற்கு குறைந்த ஊதியத்திற்கு House Boys அல்லது House Girls எனப்படும் ஆட்கள் கிடைப்பார்கள். (அவர்களை வேலைக்காரர்கள் என்று குறிப்பிட்டால் கோபித்துக் கொள்வார்கள்) வீட்டில் சமையல், துணி துவைப்பது, தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் செய்து விடுவார்கள். இவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில இடங்களில் திருடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். என் வீட்டில் இருந்த பெண்மணி நல்லவர். சமையலிலும் வல்லவர். நான் உகாண்டாவில் இரண்டரை வ‌ருடங்கள் இருந்தாலும் எடை குறையாமல் இருந்ததற்கு இவரும் ஒரு காரணம். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், மிக்சர், சமோசா, முறுக்கு, சாம்பார், அனைத்து வகை சட்னிகள் மற்றும் கறி, கோழிக்குழம்பு, பிரியாணி என அனைத்தையும் சுவையாகச் செய்வார். இவர் சமையலில் எனக்கு மிகவும் பிடித்தது பூரி, தேங்காய் சட்னி, சாம்பார் கூட்டணி...ம்ம்ம்.... நினைத்தால் இப்பவும் எச்சில் ஊறுகிறது.

உகாண்டாவில் நான் இருந்த சின்ன ஊரான பாலே(Mbale) யில் இரண்டு இந்திய உணவகங்கள் இருந்தன. நான் உகாண்டா போன புதிதில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மின்தடை அமலில் இருந்தது. அதெல்லாம் அந்தக் காலம்... இப்போது மின்சாரம் தடைபடுவதே அபூர்வம் என்று கேள்விப்பட்டேன். (சத்தியமாக இதில் நுண்ணரசியல் எதுவும் இல்லை ;‍)) அந்த சமயங்களில் நானும் என்னுடன் வேலை பார்த்த குஜராத்தி நண்பனும் அங்கே சென்று விடுவோம். கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும். பெரும்பாலும் வட இந்திய உணவுகளே கிடைத்தாலும் சுவை நன்றாகவே இருக்கும். அங்கே என் விருப்ப உணவு மசாலா சிப்ஸ். இங்கே மான்செஸ்டர் வருவதற்கு முன்னரே முன்னேற்பாடாக எங்கெங்கெல்லாம் இந்திய உணவகங்கள் இருக்கின்றன என்று இணையத்தில் தேடியாயிற்று (படிப்பு சம்பந்தமாக எதையுமே தேடவில்லை என்பதை இந்தப் பொன்னான தருண‌த்தில் உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ;‍-)) என்னுடைய அதிர்ஷ்டம் இங்கே பல்கலை அருகிலேயே Curry Mile என்று செல்லமாக அழைக்கப் படும் சாலை இருக்கிறது. நிஜமாகவே ஒரு மைல் தூரத்திற்கு நெடுக உணவகங்கள்தான் (ஏறக்குறைய 70 என்று கேள்வி). பெரும்பாலும் இந்திய உணவகங்கள் என்ற பெயரில் பங்களாதேசிக்காரர்கள் நடத்துவது. சில இடங்களில் சாப்பிட்டுப் பார்த்து நொந்து போய்விட்டேன். சில பரவாயில்லை. நிறைய Take Aways இருக்கின்றன. இதில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று தெரிந்தும் விரும்பிச் சாப்பிடுவது கபாப் எனப்படும் வஸ்து... இங்கே வந்த பின்னர் சாப்பிட்டுப் பழகியது. இன்று மதியம் சாப்பிட்டால் நாளை காலை வரை வயிறு கம் என்றிருக்கும். சாப்பிடும் வரை நன்றாயிருக்கும். சாப்பிட்டு முடித்தபின் ஏன்டா சாப்பிட்டோம் என்றிருக்கும்... இருந்தாலும் இதற்கெல்லாம் பீதியடைகிற ஆட்களா நாம்???

இது போக மான்செஸ்டரிலேயே வேறு இடங்களில் இருப்பவைகளில் நவாப், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் ஓரியண்டல் பஃபே மற்றும் சில பெயர் மறந்து போன உணவங்களில் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. என்ன இருந்தாலும் இவ்வளவு பெரிய மான்செஸ்டரில் ஒரு தென்னிந்திய உணவகம் கூட இல்லாதது எனக்குப் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. எனக்குத் தெரியாமல் எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கிற தென்னிந்திய உணவகம் பற்றித் தெரிவிப்பவர்களுக்கு மன்செஸ்டர் மியூசியத்தில் ஒரு சிலை வைக்கப் படும்.சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த போது, "உன் மருமகன் உன்னை மாதிரியே வந்திருக்கிறான்டா, சாப்பிட்டதுக்கு அப்புறமா கை கொடுத்துத் தூக்கினாத்தான் எந்திரிக்கிறான்" என்றாள் அக்கா. இந்தப் பழக்கம் ஜீனிலேயே அச்சேறி அடுத்த தலைமுறையும் கிளம்பி விட்டதை புரிந்து சிரிக்கிறேன்...

31. Manchester கதைகள்...

சனி, ஜூன் 07, 2008

முந்தா நேத்து எங்க லேப்ல இருந்த ஸ்பெக்ட்ரோ சரியா வேலை செய்யலேன்னு பக்கத்து லேபுக்கு போயிருந்தேன். வழக்கம் போல பேனாவை எடுத்துட்டுப் போகலை. சரீன்னு அங்க இருந்த ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல கை வழக்கம் போல பேனாவை வாய்க்கு எடுத்துட்டு போச்சு. அப்பத்தான் பேனா முனையில ஏதோ எழுதி இருந்ததைக் கவனிச்சேன். உத்துக் கவனிச்சு எழுத்துக் கூட்டிப் படிச்சா....

"Don't chew... Cyanide dipped..." ன்னு ஏதோ மெக்டொனால்ட்ல ஸ்வீட் சில்லி ஸாஸ்ல டிப் பண்ணின மாதிரி எழுதி இருந்தானுங்க. அடப்பாவிங்களா, பேனாவை வாயில வைக்கிறது ஒரு குத்தமாடா? அதுக்குப் போய் மரண தண்டனையாடா தருவீங்கன்னு பயந்துபோய் ஓடி வந்துட்டேன்.

இதை நினைக்கிறப்ப கார்ன்வால் போயிருந்தப்ப ஒரு உணவுவிடுதிக்கு வெளில இருந்த அறிவிப்புப் பலகைதான் ஞாபகத்துக்கு வருது. அது விளையாட்டுக்கு எழுதினதா, ஸீரியசா எழுதினதான்னு தெரியலை.

"Unattended children will be sold as slaves". அடங்கொக்காமக்க... காவாலிப்பய ஊரால்ல இருக்குன்னு நொந்துக்கிட்டேன்.

இருந்தாலும் நேற்று நடந்தது கொஞ்சம் ஓவரான ஜோக்குதான். இங்க பல்கலைக்கழகத்துல ஒவ்வொரு வருடம் முடிக்கும் போதும் ஒரு workshop நடத்துவாங்க. இந்த வருடம் எங்களுக்கு Communication skills பற்றி நடந்தது. சன் பத்திரிக்கையில் அறிவியல் பக்கத்தை எடிட் பண்றவரு வந்திருந்தாரு. அதில ஒரு போட்டியும் நடத்தினாங்க. அதாவது அவர் ஒரு அறிவியலாளர் மாதிரி பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்துவாரு, அதைப்பற்றி நாங்க 150 வார்த்தைகள்ல ஒரு ரிப்போர்ட் தயாரிக்கனும். மாணவர்கள் பத்து குழுக்களாகப் பிரிக்கப் பட்டிருந்தோம். அரைமணி நேரத்திற்குப் பிறகு எல்லோருடையதையும் ப்ரொஜெக்டரில் போட்டுக் காட்டினாங்க. தலைப்பு ரொம்ப கவனத்தை ஈர்க்கும் படியா இருக்கனும்னு எல்லோருமே முயற்சி பண்ணியிருந்தது நல்லா தெரிஞ்சது. அதுல ஒரு குழு எழுத ஆசைப்பட்ட தலைப்பு இதுதான். "கொலைகார எலிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து". ஆனா தெரிஞ்சு பண்ணினாங்களா இல்ல தெரியாம நடந்திருச்சான்னு தெரியலை, எழுதும்போது ஒரு "L" ஐ விட்டுட்டு அவங்க எழுதியிருந்தது இதுதான்.

"Killer Rates Endanger Pubic Safety"

நீங்களே சொல்லுங்க் இதெல்லாம் தெரியாம பண்ணியிருப்பாங்களா, இல்ல ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருப்பாங்களா?

30. இங்கிலாந்து கொண்டாட்டங்களும் ஒரு அப்பாவித் தமிழனும்...

புதன், டிசம்பர் 26, 2007

இந்தியாவில் ஏகப்பட்ட முறையும், ஆப்பிரிக்க நாடுகளில் சில முறையும் கிருஸ்த்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. இம்முறை இங்கிலாந்தில்... இருந்தாலும் வெள்ளைக்காரங்க கொஞ்சம் ஓவராத்தான் கொண்டாடுறாய்ங்க...
கிருஸ்துமஸுக்கான தொடக்கநிலை முன்னேற்பாடுகள் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திலேயே தொடங்கி விட்டன. இதில் முதலிடம் வகிப்பது கிருஸ்துமஸ் டின்னருக்கான உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது. ஒரு நான்கைந்து உணவகங்களிலிருந்து மெனு வாங்கி இரண்டு வாரங்களாக‌ ஓட்டெடுப்பு நடத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்தாகி விட்டது. பின் அதற்கு முன்பணம் வசூலிப்பதில் இரண்டு வாரங்களை செலவிட்டனர். பணம் கொடுக்காமல் டிமிக்கி அடித்து இழுத்தடித்த இரண்டு பேர் ஓட்டெடுப்பில் எல்லோருக்கும் முன்பாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இரண்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்வதால் (அப்படித்தான் நம்பவைச்சிருக்கேன்) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டெடுப்பில் இரண்டு முறை கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஆயிற்று. இரண்டு முறையும் நான் தேர்தெடுத்த உணவகங்கள் டெப்பாஸிட் இழந்து தோற்றுப் போனது அவர்கள் உணவில் எனக்கிருக்கும் புலமையை உலகிற்கு உணர்த்தியது.
ஒரு வழியா டிசம்பர் மாசம் முதல் வாரத்தில் மிச்சக் காசையும் வசூல் செய்துவிட்டு, அடுத்த நாள் ஒரு உணவகத்திற்கு கூட்டிச் சென்றனர். நானும் ஸ்டைலாக ஒரு ஜீன்ஸும் டி சர்ட்டையும் மாட்டிக்கொண்டு போனால் அங்கே சொல்லி வைத்தாற்போல் ஒருவர் கூட டி சர்ட் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் ரொம்ப நல்ல புள்ளைங்களா ஜீன்ஸும், ஒரு முழுக்கை சட்டையும் அணிந்து வந்திருந்தனர். என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே என்று விதியை நொந்தபடி அமர்ந்தால் அடுத்த அடி விழுந்தது. அது உணவு மட்டுமில்லை, stand up காமெடி ஷோவும் சேர்ந்ததென்று. இந்த காமெடி ஷோக்களைப் பற்றி நான் முன்னரே கேள்விப் பட்டிருக்கிறேன். பக்கத்திலே உட்கார்ந்து இருக்கிறவங்களை வம்புக்கிழுத்து காமெடி செய்வதுதான் இவர்களில் நிறைய பேர் செய்வது. நல்ல வேளையாக மேடைலேருந்து கொஞ்சம் தள்ளிதான் இடம் கிடைத்தது. இருந்தாலும் மொத்த இடமே சின்னதா இருந்ததாலே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.
சாப்பாடு முடிஞ்சதும் இவங்க காமெடி ஷோவும் தொடங்கிச்சு. நானும் எவ்வளவோ கவனிச்சுப் பார்த்தேன், ஒரு 25% கூடப் புரியலை. நானும் எவ்வளவு நேரம்தான் புரியற மாதிரியே நடிக்கிறது...புரியுற மாதிரி நடிக்கிறது மட்டும்னா கூடப் பரவாயில்லை, ஸ்கூல், காலேஜ்ன்னு ஏகப்பட்ட இடங்கள்ள நடிச்ச அனுபவம் இருக்கு...இங்கே அவனுங்களோட சேர்ந்து சிரிக்கவும் வேண்டியிருக்கு. பிரச்சனை என்னன்னா அவனுங்க எப்போ சிரிப்பானுங்கன்னு எனக்குத் தெரியவே மாட்டேங்குது... நிறைய இடங்களில் அவனுங்க சிரிக்கிறப்ப நான் உர்றென்று இருப்பதும், அவனுங்க சீரியஸா கவனிச்சுக்கிட்டு இருக்கிறப்ப நான் அடக்க மாட்டாமல் சிரிப்பதுமாக காமெடி ஷோ பயங்கர காமெடியாக போய்க் கொண்டு இருந்தது. பக்கத்தில் ஒரு மாதிரியா பார்த்த வெள்ளைக்காரனிடம் "நைஸ் காமெடி, சிரிப்பை அடக்கவே முடியலை" என்று சொல்லி சமாளித்தேன். ஒரு கட்டத்திற்கு மேலே இனிமே நடிக்கவே முடியாது என்ற நிலை வந்து, எதிரே அமர்ந்து இருப்பவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். எதிரே ஒரு மலேசிய இந்தியப் பெண் என்னை மாதிரியே திரு திருவென்று முழிப்பதும், அவ்வப்போது கெக்கே பிக்கேவென்று சிரிப்பதுவுமாக இருந்தது. அடச்சே இங்கேயும் போட்டிக்கு வந்திட்டாங்களே என்று, சேரில் மிகவும் கீழே சாய்ந்து உட்கார்ந்து கொண்டால் மற்றவர்கள் என்னைக் கவனிக்க மாட்டார்களே என்று சாய்ந்த போதுதான் பார்த்தேன், பக்கத்து ஸீட் சைனாக்காரன் எனக்கு முன்னரே அந்த டெக்னிக்கைக் கையாண்டு கொண்டிருந்தான். "அடப்பாவி, நீ நேரா உட்கார்ந்தாலே உன்னை யாராலும் பார்க்க முடியாதேடா... நீ ஏன்டா இப்படிக் கஷ்டப் படுறே" என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஒரு வழியா ஒரு மணி நேரம் கழித்து, இந்தக் காமெடி கொடுமை முடிந்தது. அடுத்தது டான்ஸ் ஆடும் கொடுமை நடந்து கொண்டிருந்தது. நம்ம நான்கடி சைனாக்கார நண்பன் கிட்டத்தட்ட ஆறடி இருக்கும் பெண்ணுடன் டான்ஸ் ஆட எம்பி எம்பி முயன்று கொண்டிருந்தான். ஒரு நாளைக்கு ஒரு முறை அவமானப்பட்டால் போதுமென்று நான் விடு ஜூட்...

29.உகாண்டா போய் இங்கிலாந்து வந்தது டும் டும் டும்....

ஞாயிறு, நவம்பர் 04, 2007

நான் திரும்ப எழுதும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மிரட்டிய கோடிக்கணக்கான வாசகர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி இன்று முதல் திரும்ப எழுத ஆரம்பித்திருக்கிறேன்...(கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேனோ...!)


போன தடவை பிளேடைப் போட்டப்ப உகாண்டால இருந்தேன்... கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை, பையன் உகாண்டாவைப் பத்தி எழுதுறானேன்னு எக்கச்சக்கமான பேர் (சரியா நாலு பேர்! அதுல ரெண்டு பேர் வழி தெரியாம உள்ளே வந்து மாட்டின‌வங்க...!) என்னோட பதிவு பக்கமா வந்துக்கிட்டு போயிக்கிட்டு இருந்தாங்க. இதுல நான் வேற ரொம்ப நாளா, எழுத முடியாத அளவுக்கு ரொம்ப பிஸியா இருந்தனா, அவங்களும் வந்து வந்து பார்த்துட்டு ஏமாந்து போய், இப்பல்லாம் என் பதிவை எட்டிப்பாக்குறதையே விட்டுட்டாங்க...(நான் எழுதியிருந்தாலும் அதைப் படிச்சுட்டு ஏமாந்துதான் போயிருப்பாங்கன்றதெல்லாம் வேற விசயம்...) கொஞ்சம் பிஸியா இருக்கிற மாதிரி ஆக்ட் குடுத்தா, இதுதான் சாக்குன்னு, இப்படியெல்லாமா பண்ணுறது...என்னது இது...சின்னப்புள்ளத்தனமா இருக்கு...


ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே... வாலிப, வயோதிக அன்பர்களே...எனது நண்பர்களே... உங்க எல்லோருக்கும் நான் இந்த மொக்கை பதிவு மூலமா சொல்லிக்கிறது ஒன்றே ஒன்றுதான்... நான் இப்பொழுது உகாண்டாவில் இல்லை. என்னை மேன்மை பொருந்திய மகாராணி ஆட்சிபுரியும் சூரியன் அஸ்தமிக்காத தேசத்திற்கு நாடுகடத்தி விட்டனர். (சாயங்காலம் மூன்றரை மணிக்கெல்லாம் இருட்டீருது, இதுக்கு இவனுங்க வெச்ச பேரப் பாத்தீங்களா.?வெள்ளைக்காரனுங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்). எனவே அலைகடலென திரண்டு எனது வலைப்பதிவுக்குள் வாரீர்... உங்கள் பொன்னான ஆதரவைத் தாரீர்... நன்றி, வணக்கம்.

28.ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனும், உகாண்டாவும்...

திங்கள், மார்ச் 12, 2007

ஹாலிவுட்காரர்களுக்குத் திடீரென்று உகாண்டா மேல் காதல் வந்து விட்டது. காசினோ ராயலில் பாலேயைக் காட்டியவர்கள் (வெறும் 5 நிமிடங்களே என்றாலும்) இப்போது ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனிலும்....(இதில் முழுப் படமுமே உகாண்டாதான்)

இடி அமீன் கதை என்றவுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஆசியர்களை(இந்தியர்கள் எனப் பொருள் கொள்க) வெளியேற்றியது பற்றின படமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். படம் முடியும் தருணத்தில் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இந்தப் படம் பற்றின உகாண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்....?

பத்திரிக்கைகள் பாராட்டித் தள்ளின. முசிவேனியின் மீடியா சுதந்திரம், உகாண்டா பற்றின உலகின் பார்வையை மாற்றி விட்ட்து என்று ஒரே புகழாரம்தான்.

ஆனால், ஃபீல்ட் மார்சல், விக்டோரியா கிராஸ் (VC), மிலிட்டரி கிராஸ் (MC), டிஸ்டிங்விஸ்டு சர்வீஸ் ஆர்டர் (DSO), கான்க்விரர் ஆஃப் தி பிரிட்டீஷ் எம்பரர் (CBE) இடி அமீன் தாதாவை (மேற்கூரிய பட்டங்கள் யாவையும் அமீன் தனக்குத் தானே சூட்டிக் கொண்டவை) ரொம்ப‌வும் ந‌ல்ல‌ப‌டியாக‌க் காட்டி விட்டார்க‌ள் என்று சாமானிய‌ர்க‌ள் முணுமுனுக்கிறார்க‌ள்.

இங்கே வ‌ருவ‌த‌ற்கு முன் உகாண்டா என்ற‌வுட‌ன் நினைவுக்கு வ‌ந்த‌வ‌ர் இடி அமீன்தான்.உகாண்டாவில் வேலை பார்க்க‌ப் போகிறேன் என்ற‌வுட‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லோரும் நினைவுகூர்ந்த‌ ஒரு பெய‌ர் இடி அமீன்தான். இந்த‌ ச‌ங்க‌ட‌ங்க‌ள் எல்லா உகாண்ட‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து. இங்கிருந்து எந்த‌ வெளிநாட்டிற்குச் சென்றாலும், உக‌ண்ட‌ன் என்ற‌வுட‌ன் வ‌ரும் உட‌ன‌டி ப‌தில் "ஓ... இடி அமீன்" ஏதோ இவ‌ர் அமீனால் பாதிக்க‌ப்ப‌ட்டு த‌ப்பி வ‌ந்த‌வ‌ரைப் பார்ப்ப‌து போல் ஒரு பார்வை... இவ‌ர்க‌ளின் கோப‌ம் என்ன‌வென்றால், ஸடாலினுக்காக‌ யாரும் ருஷ்யாவைப் ப‌ழிக்க‌வில்லை, போல் பாட்டிற்காக‌ யாரும் க‌ம்போடியாவை ப‌ழிக்க‌வில்லை. ஆனால் அமீனுக்காக‌ ஏன் எல்லோரும் உகாண்டாவை ப‌ழிக்கிறார்க‌ள்???

இந்த‌ப் ப‌ட‌ம் ஒட்டு மொத்த‌மாக‌, உகாண்டா ப‌ற்றின‌ உல‌கின் பார்வைவை மாற்றிவிடும் என்று தோன்ற‌வில்லை. ஆனால் க‌ண்டிப்பாக‌ அந்த‌த் திசையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார்க‌ள் என்று சொல்ல‌ முடிகிற‌து. நாம் வ‌ழ‌க்க‌மாக‌ டாக்குமெண்ட‌ரிக‌ளில் பார்க்கும் உகாண்டாவாக இல்லாம‌ல், ப‌சியில் வாடும் ம‌க்க‌ளோ, உட‌ல் முழுக்க‌ ஈக்க‌ள் மொய்க்கும் குழ‌ந்தைக‌ளோ, உண‌வுப் பொட்ட‌ல‌ங்க‌ளைக் கொண்டு வ‌ரும் வ‌ண்டியை ச‌ண்டையிட்டு மொய்க்கும் கூட்ட‌ங்க‌ளோ இல்லாம‌ல் உகாண்டா, ஒரு வித‌த்தில் உண்மையான‌ உகாண்டா காட்ட‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஃபார‌ஸ்ட் விட்டேக‌ர் மிக‌வும் மென‌க்கொட்டிருக்கிறார் என்ப‌து ப‌ட‌ம் பார்க்கும் போது தெரிகிற‌து. நிறைய‌ ஹோம் ஒர்க் செய்திருக்க‌ வேண்டும். ந‌டை, பேச்சுவ‌ழ‌க்கு எல்லாவ‌ற்றிலுமே அச்சு அச‌ல் உகாண்ட‌ர்க‌ள் வாடை. அமீனின் பிர‌ப‌ல‌மான‌ மூட் மாறுத‌லை மிக‌வும் அனாச‌ய‌மாக‌ச் செய்திருக்கிறார். ஆஸ்கார் ஆச்ச‌ர்ய‌ம‌ளிக்க‌வில்லை.

இந்த‌ப் ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌தும், நிறைய‌ பேர் "அமீனும் நானும் ப‌ய‌ங்க‌ர‌ தோஸ்த் தெரியுமா? ஆனாலும் ம‌னித‌ர் அவ்வ‌ள‌வு மோச‌ம் கிடையாது" என்கிற ரேஞ்சில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதில் என்னைக் க‌வ‌ர்ந்த‌து இர‌ண்டு பேட்டிக‌ள். ஒன்று, அமீனின் இங்கிலீஷ் வாத்தியார். அமீன் என்கிற‌ பெய‌ரை ஆங்கில‌த்தில் எழுதுவ‌த‌ற்கே ம‌னுச‌னுக்கு 5 வ‌ருட‌ங்க‌ள் ஆகி இருக்கிற‌து. ஆனாலும் விடாப் பிடியாக‌ முய‌ன்றிருக்கிறார். த‌ன‌க்கு ஆங்கில‌ம் தெரியாது என்ப‌தை எல்லோரிட‌மும் சொல்லிக் கொள்ளும் ப‌ழ‌க்கமும் அமீனுக்கு இருந்திருக்கிற‌து. இதைப் ப‌டித்து விட்டு ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் நினைகூர்ந்த‌து, ஒருமுறை இராணியைப் பார்ப்ப‌த‌ற்காக‌ ல‌ண்ட‌ன் சென்றிருந்த‌ போது, இராணியை மிஸ்ட‌ர் க்வீன் என்று அழைத்துவிட்டார்.

இன்னொன்று, அமீன் ஆசிய‌ர்க‌ளை நாட்டை விட்டு வெளியேற்றிய‌ பின்ன‌ர், அவ‌ர்க‌ள‌து சொத்துக்க‌ளை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்ப‌து ப‌ற்றிய‌து. அமீன் எந்த‌ ஊருக்கொல்லாம் போகிறாரோ அந்த ஊர் ம‌க்க‌ளெல்லாம் அந்த‌ ஊரில் இருக்கும் இந்திய‌ர்க‌ளின் க‌ட்ட‌ட‌ங்க‌ளை நோக்கி ஓடுவார்க‌ள். யார் முத‌லில் சென்ற‌டைகிறாரோ அவ‌ருக்கே அந்த‌ க‌ட்டிட‌த்தை வ‌ழ‌ங்கிவிடுவார் அந்த‌ வ‌ள்ள‌ல். இந்திய‌ர்க‌ளை வெளியேற்றிய‌தில் அன்றைக்கு அங்கிருந்த‌ இந்திய‌ர்க‌ளின் ப‌ங்கும் முக்கிய‌மான‌தாம். அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ உள்ளூர் ம‌க்க‌ளை ந‌ட‌த்தினார்க‌ளாம். கொஞ்ச‌ம் காசு சேர்ந்த‌ பின், எங்கே இருக்கிறோம் என்ப‌தையே ம‌ற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌த‌ற்கு இது ஒரு ப‌டிப்பினை.

27. தைரியமான ஆண்களுக்கு மட்டும்....

புதன், நவம்பர் 22, 2006

நம்மூர் ஆண்கள் தைரியத்தை வெளிக்காட்ட, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போல, இங்கே ஒரு குறிப்பிட்ட இன மக்கள் ஒரு காரியம் செய்து தங்கள் தைரியத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

முகிசு என்ற அந்த இனத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக அந்த வீர சாகசத்தைப் பண்ணியாக வேண்டும். அதுவும் சிறு வயதில் இதை செய்து காட்ட அனுமதி இல்லை. வயதுக்கு வந்த ஆண்கள் (!) மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த சாகசத்தை செய்யாவிட்டால் அந்த ஆணைத் திருமணம் செய்ய எந்த அழகியும் முன்வரமாட்டாள்.

இந்த வீர விளையாட்டிற்குப் பயந்துபோய் புதரில் ஒளிந்து கொண்டு வாழ நினைத்தாலும் முடியாது. இதற்கென அமைக்கப்ப்ட்டிருக்கும் புதர் ஒழிப்புக் கமிட்டி ஒன்று, ஒரு புதர் விடாமல் தேடி அவர்களைக் கண்டுபிடித்து விளையாட்டை நடத்தி முடித்து விடுவார்கள்.

பண்டைக்காலத்தில் நம்மூரில் குழந்தை இறந்தே பிறந்தால், அதன் மார்பில் வாளால் கீறி அதன் பிறகுதான் தகனம் செய்வார்களாம். இந்த மேட்டரை எப்படியோ தெரிந்து கொண்ட இந்த மக்களும், இறந்து பிறந்த குழந்தைக்கும் இதை செய்துதான் புதைப்பார்கள்.

இந்த இனத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், மற்ற இனத்தைச் சேர்ந்த ஆண்களும் இதைச் செய்து காட்ட வேண்டும்.

போதும்டா பில்ட் அப்பு, மேட்டரைச் சொல்லுங்கிறீங்களா... வர்றேன். அதுக்குத்தான் வர்றேன். அதாகப் பட்டது, முகிசு ஆண் ஒருவன் வயதுக்கு வந்துவிட்டான் என என்று உலகிற்கு அறிவிக்கும் உன்னத முயற்சி இது. ந்ம்மூரில் பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா என்று நடத்துகிறார்களே, அதைப் போல்தான் இது.

அன்றைய தின விழாவில் கலந்து கொள்ள உற்றார் உறவினர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி, அந்த தினத்தன்று அந்தப் பையனை மணலால் (களிமண் போல இருக்கிறது) குளிப்பாட்டுகிறார்கள். அதன் பின் தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு அனைவரும் ஊர்வலம் செல்கிறார்கள். (ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காகத்தான்..) பின் இதற்காகவே அமைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு பூசாரி இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பையன் கொஞ்சம் பயந்தவனாக இருந்தால் சரக்கடித்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள். அதன் பின்னர் அனைவரும் ஆடிப்பாடுகிறார்கள். பின் பையனின் ஆடை களையப் படுகிறது. பூசாரி கத்தியுடன் பையனை நெருங்குகிறார். மக்கள் அனைவரும் குலை போடுவது போல் பயங்கரமாக கத்துகிறார்கள். அதன் பின் என்ன நடந்திருக்கும் என உங்களால் ஊகிக்க முடிந்திருக்கும்.

ஆமாம் மக்களே அதேதான். தினமலர் பாசையில் சொன்னால் "நறுக்". இரத்தம் செட்டச் சொட்ட அதில் மெத்திலேட்டட் ஸ்பிரிட் அல்லது டிங்சர் ஊற்றுகிறார்கள். மக்கள் அனைவரும் பையனின் தைரியத்தில் மெய்மறந்து கைதட்டுகிறார்கள். இதில் மிகவும் தைரியமான ஆண்கள் செய்வதைக் கேட்டால் நீங்களே மெய்சிலீர்த்து விடுவீர்கள்... அது என்னவென்றால் நம்மூரில் சமைக்கப் பயன்படும் மிளகாய்தூளையும், உப்பையும் கலந்து அந்த இடத்தில் பூசிக் கொள்வார்கள்... (அடப் பாவிகளா... என்ன, சமைக்கவா போறீங்க...)
இந்த வீர விளையாட்டைப் பற்றி கேள்விப்ப்ட்ட நாளிலிருந்தே முகிசு இனப் பெண்களைப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. அங்கே யாருக்கும் தைரியம் இருந்தால் சொல்லுங்கள்... பரவாயில்லை பிளைட் டிக்கெட்டை நீங்களே எடுத்துக்குங்க... வர்றதுக்கு முன்னாடி தெரியப்படுத்துங்க. ஊரைக்கூட்டி அமர்களம் பண்ணீறலாம்...

26. இதுதான் உகாண்டா...

சனி, ஜூன் 24, 2006

முதன்முதலாக இங்கே பார்மஸியில் நுழைந்த போது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய பழைய மற்றும் புழக்கத்தில் இல்லாத மருந்து வகைகள் தென்பட்டன. புதிய மருந்துகள் வருகை மிகவும் தாமதமாகவே நடக்கிறது.

இவர்களக்கு அனைத்திலும் பெரிய பெரிய டின்கள்தான் வேண்டும். பாராசெட்டமாலில் தொடங்கி, குளோராம்பினிக்கால், ஆம்பிசிலின், அமாக்சிசிலின் முதலான ஆன்ட்டி பயாட்டிக்குகள் வரை எல்லாமே 1000, 500 மாத்திரைகள் கொண்ட டின்களில்தான் அதிகமாக மார்க்கெட்டில் விற்பனையாகின்றன‌. பிளிஸ்டரில் வரும் மருந்துகளை விட இவை மிகவும் விலை குறைவாக இருப்பதே காரணம்.

இருமலுக்குப் பயன்படும் லிங்டஸும் ஒரு லிட்டர் கேனில் கிடைக்கிறது. பிராண்டட் மருந்துகளின் விற்பனை முகவும் குறைவு, ஆனால் விலை அதிகம். அதனால் ஜெனிரிக் கம்பெனிகள்தான் சக்கை போடு போடுகின்றன. பாராசெட்டமாலை "பனடால்" என்கிற ஸ்மித் க்ளய்ம் பெயரில்தான் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் வங்கும் போது, அதைக் கொடுத்தால் மறுத்து விட்டு லோக்கல் கம்பெனியின் பிராண்டை கேட்கிறார்கள். காரணம் விலை. ஒரு பாக்கெட்(100 மாத்திரைக‌ள்) பனடால் விலை கிட்டத்தட்ட 150 ரூபாய். லோக்கல் கம்பெனி 1000 மாத்திரைகள் கொண்ட டின் 125 ரூபாய். வேறு என்ன செய்வார்கள்?

மருந்துகள்தான் இப்படி என்றால், வைத்தியம் செய்பவர்கள் கதை அதற்கும் மேல். இங்கே ஒழுங்காக டாக்டருக்குப் படித்து பிராக்டீஸ் பண்ணுபவர்கள் மிகவும் குறைவு. மிகவும் குறைவான ஸீட்கள். மற்ற படிக்கு Clinical Officer எனப்படும் (நம்மூர் கம்பௌண்டர் மாதிரி) மூன்று வருட படிப்பு முடித்தவர்கள் டாக்டர்களைப் போலவே வைத்தியம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். இவர்கள் போக நர்ஸுகளும் கிளினிக் வைத்து நடத்துகிறார்கள். இவ்வளவும் நடந்தும் நிறைய இடங்களில் மருத்துவ வசதி இல்லை என்பது வேதனையான விஷயம்.

இங்கே கொடிகட்டிப் பறப்பவர்கள் பார்மஸிட்கள் எனப்படும் மருந்தாளுனர்கள்தான். கல்லூரியில் சேர டாக்டருக்குத் தேவைப்படும் மதிப்பெண்களை விட பார்மஸி படிப்பிற்கு நிறையத் தேவைப் படுகிறது. காரணம் இடங்கள். சென்ற ஆண்டு வரை, பார்மஸி படிப்பிற்குப் பத்தே பத்து இடங்கள். இவர்களின் தேசிய யுனிவர்சிட்டியான Makarere University யில் மட்டுமே அட்மிஸன். போனால் போகிறதென்று போன வருடம் Mbarara University யிலும் பத்து இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். கற்பனை செய்து பாருங்கள் கிட்டத்தட்ட தமிழ்நாடு சைஸில் இருக்கும் ஒரு இடத்தில் வருடத்திற்கு பத்தே பார்மஸிஸ்டுகள். (தமிழ்நாட்டில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 1700 பேர்). பின் அவர்களுக்கு ஏன் இருக்காது மவுசு.

பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பார்மஸிஸ்டும் இரண்டு பார்மஸியில் வேலை பார்க்க அனுமதிக்கப் படுகிறார்கள்.அப்படியும் பற்றாக்குறை. புதிதாக பார்மஸி வைக்க விரும்புபவர்கள் பார்மஸி படிக்கும் மாணவர்களை மூன்றாம் வருடத்திலேயே புக் பண்ணி விடுகிறார்கள். உபரியாக காலேஜ் ஃபீஸையும் கட்டி விடுகிறார்கள்). இவ்வளவு பற்றாக்குறை இருந்தும், வெளிநாட்டு பார்மஸி பட்டதாரிகளை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மக்கரேரேயில் கிட்டத்தட்ட 6 மாதம் படித்து, 6 மாதம் பயிற்சி எடுத்த பின்தான் அங்கீகாரம்.

மலேரியாதான் பிரதான வியாதி. அடுத்தது எயிட்ஸ். வெகு காலமாக குயினினையும், க்ளோரோகுயினையும் பயன் படுத்தியதில், இப்போது அவை எதிர்ப்புத் தன்மை இழந்துவிட்டன. இனிமேல் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி விட்டு, புதிய வகை மலேரியா மருந்துகளை இலவசமாக வினியோகிக்கிறது அரசாங்கம்.மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அவற்றை வெளியே கடத்திவந்து விலைக்கு விற்பதை காணும் போது வருத்தமாக இருக்கிறது. வருத்தப் படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் உகாண்டா...

25. இந்தியாவை மிஞ்சி விட்டது உகாண்டா...

புதன், ஜூன் 21, 2006

இந்தியாவில் இருந்த போது, உலகிலேயே அங்கேதான் லஞ்சம் அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்த பின்பு, இந்தியா எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. ஏதெனும் திருட்டு போய் விட்டது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சொன்றால், புகாரை வாங்குவதில் ஆரம்பிக்கும் உங்கள் தண்டச் செலவு. வெளிநாட்டவர் என்றால் ஸ்பெசல் ரேட். உள்ளூர்காரர்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி கிடைக்கும். புகாரை வாங்கின மறுநாளே, கடமையே கண்ணாயிணாராக காலங்கார்த்தால் உங்களைச் சந்திக்க ஒரு கான்ஸ்டேபில் வருவார்.

"எங்க பாஸ் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்"

அவனுடைய பாஸிற்கும், நம்மூர் கொள்ளைக்கூட்ட பாஸிற்கும் ஆறு வித்தியாசங்களைக் கூட காண முடியாது. அத்தகைய "பாஸ்" எனப்படுபவர் ஒரு C.I D. ஏதேனும் காணாமல் போய் விட்டதென்று புகார் கொடுத்திருந்தால், அதைத் திருடியதே நாம்தான் என்று ஆரம்பிப்பார். அதாவது, காணாமல் போனது எங்கே என்று அவரை நாம் கேட்டால், எது எங்கே இருக்கிறது என்று அவர் நம்மைத் திருப்பிக் கேட்பார்.

நான்கு காஸ்டேபில்கள் அவரது அடியாட்கள் மாதிரி உங்களைச் ச்ற்றி வந்து, நீங்கள்தான் திருடிவிட்டீர்கள் என்று கோஷம் போடுவார்கள். இவரைத் தூக்கி உள்ளே போடுங்கள் என்று சொல்லி விட்டு, பாஸ் வெளியே போய் விடுவார். சுற்றி இருக்கும் நான்கு அல்லக் கைகளில், ஒன்று, எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று ஆரம்பிக்கும். காய்கறிக்கடை போல் பேரம் பேசி, ஆளுக்கு 5000 ஷில்லிங்ஸ் கொடுத்தால், இன்று உன் வீட்டில் தூங்கலாம் என்று ஆசை காட்டி முடிப்பார்கள்.

இது முதல் நாள், இரண்டாம் நாள் ஒரு கான்ஸ்டேபில் பவ்யமாக உங்களைப் பார்க்க வருவார். திருடன் என்று ஒருவனைச் சந்தேகப் படுகிறோம். அவன் இப்போது 150 கி.மீ தள்ளி இருக்கும் ஒரு ஊரில் இருக்கிறான். அவனைப் போய் பிடித்து விசாரிக்க போக்குவரத்துச் செலவுக்கு 100,000 கொடுங்கள் என்று அதிகாரமாக வழிவார்கள். பின் இரண்டு நாட்கள் கழித்து, அது அவனில்லை என்று சொல்லி விடுவார்கள். கடைசியில், நீ இதை இன்ஸூரன்ஸில் க்ளெய்ம் செய்து வாங்கிக் கொள் என்று ஒரு ரிப்போர்ட் கொடுத்து விடுவார்கள். கடைசியி பார்த்தால், நாம் தொலைத்ததை விட அவர்களுக்குத்தான் அதிகமாகத் தண்டம் அழுதிருப்போம். அதனாலோ என்னவோ, இங்கே நிறைய பேர் தொலைத்தாலோ, திருடு போனாலோ போலீஸிடம் போவதே இல்லை.

அடுத்த கொள்ளைக் காரர்கள், குடியேற்ற உரிமை ஆட்கள். இங்கே யாராவது இந்தியர்களைப் பார்த்தாலே அவர்களுக்கு கொண்டாட்டம் வந்துவிடும். காரணம் 100க்கு 80 குஜராத்திகள் சட்ட விரோதமாகத் தங்கி இருப்பவர்கள். இவர்கள் சற்று பணக்கார கொள்ளையர்கள். டாலரில்தான் டீல் செய்வார்கள். முறையான உரிமம் இருந்தாலும் வந்து தொல்லை கொடுக்கத்தான் செய்கிறார்கள். என்னிடம்தான் முறையான உரிமம் இருக்கிறதே என்று காட்டினாலும் விட மாட்டார்கள். சாய் மணி கொடு, வந்து விட்டோம் ஏதாவது கொடு என்று வழிவார்கள். உரிமம் இருந்தால் கொஞ்சம் தைரியமாகப் பேசலாம். இல்லையென்றால் டாலரில் மொய் எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அது இது என்று இல்லை. எங்கேயும் லஞ்சம் எதிலும் லஞ்சம். யாராவது உகாண்டன் தாத்தா வந்து, வர்ம அடி கொடுத்தால்தான் உண்டு.

25. ஒரு படக் கதை...

ஞாயிறு, ஜூன் 18, 2006
















காலைலே எழுந்திச்ச உடனே இப்படி கண்ணை மூடிக்கிட்டு யோகா பண்ணனும்னு அம்மா சொல்லி இருக்காங்க...
















யோகாவை முடிச்சுட்டு ஃப்ரெஷா குளிச்சுட்டு வரனுமாம்...
















யாருப்பா அது, கைல கிலுகிலுப்பை எல்லாம் குடுத்து விளையாடச் சொல்றது... அதெல்லாம் சின்னப் பசங்க விளையாட வேண்டியது...

Posted by Picasa



















ஹையா... ஸ்டெதஸ்கோப் கிடைச்சாச்சு... நான் டாக்டராயிட்டேன்...
















நான் டாக்டரானது தெரிஞ்ச உடனே வெளில ஒரே பேஸண்ட்ஸ் கூட்டமாம்.. இன்னைக்கு என் காட்ல ஒரே மழைதான் போங்க...





















என்னது..!!! என் பேரை போலி டாக்டர் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்களா...?
















என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து எடுக்கிற வரைக்கும் இந்த ஸ்டெதஸ்கோப் கடிக்கும் போராட்டத்தை நடத்தலாம்னு இருக்கேன்...

Posted by Picasa














ஹி ஹி ஹி.. என் பேர லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்கலாம்...
















இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களா... இந்த மாமாவுக்கு எழுத ஒன்னுமே தோணலைன்னு என்னல்லாம் எழுதுறார்னு....

Posted by Picasa














இந்த மாமாவுக்கு வேற வேலையில்லை... வாங்க, நாம தூங்கப் போகலாம்...

24. உகாண்டா நிலவரம்.... கலவரம்???

சனி, மே 20, 2006

அங்கே தமிழ்நாட்டில், கலைஞர் ஆட்சியேற்பதற்கு முந்தின நாள் சாயங்காலம், இங்கே, முசிவேனி மூன்றாம் முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். அங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாளில், இங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்கள் கழிந்து...

கடந்த 20 ஆண்டுகளில் முசிவேனி, பதவியேற்கும் நான்காவது விழா இது. 1985 ல் Milton Obote யிடமிருந்து, பதவியைப் பறித்த,Titi Okello விடமிருந்து நாட்டைக் காப்பாற்ற National resistance Army (NRA) புரட்சிக்குப் பின், 1986 இந்திய குடியரசு தினத்தன்று, முதன் முதலாகப் பதவியேற்றார். அதன் பின் முறையாக தேர்தலில் பங்கேற்று, 1996 லும், 2002 லும். இந்த பிப்ரவரியில் நடந்த இந்த Multi Party தேர்தல், உகாண்டா அரசியல் சரித்திரத்தில் ஒரு முக்கியமான் நிகழ்வு. முசிவேனிக்கு 58% ஓட்டுகளும், அவரை எதிர்த்த Forum Democratic Change (FDC)ஐ சேர்ந்த Col. Dr. Kissa Besigye க்கு 37% ஓட்டுகளும் கிடைத்தன.

நிறைய பக்கத்து நாட்டு அதிபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும், நிறைய பேர் வராமல் போனது, ஆப்பிரிக்காவில் முசிவேனியின் செல்வாக்கு மங்குவதைக் காட்டியது. ஒரு காலத்தில், ஆப்பிரிக்க மக்களுக்கு மட்டுமல்லாது, பல ஆப்பிரிக்க அதிபர்களுக்கே உதாரண புருசனாக இருந்தவர், 20 வருட தொடர் ஆட்சியின் முடிவில் களையிழந்து காணப் படுகிறார்.

தொடர் மின்சாரத் துண்டிப்பு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதைச் சரிக்கட்ட கருமாவிலும், புஜகாளியிலும் 2010 க்குள், அணைகள் கட்ட வேண்டும். அது போக, நம்மூரில் வீரப்பன் இரண்டு மாநில போலீசுக்குத் தண்ணீர் காட்டியது போல, இங்கே Kony என்னும் புரட்சிக்காரன் Lords Resistance Army (LRA)என்னும் அமைப்பை வைத்துக் கொண்டு, தெருவோர அனாதைச் சிறுவர்களைக் கடத்திக் கொண்டு போய் பயிற்சியளித்து, உகாண்டா, காங்கோ இரண்டு நாட்டு ஆட்சியாளர்களின் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். உகாண்டா அமெரிக்க தூதரகமே இந்த வருட இறுதிக்குள், கோனியின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் என்று அறிவிக்குமளவுக்கு அண்ணன் ஃபேமசாகி விட்டார். அங்கே நடந்தது போலவே இங்கேயும், பொது மன்னிப்பு கொடுக்கலாமா கூடாதா என்று, ரேடியோதோறும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உகாண்டா வீரப்பனைப் பற்றி தனிப் பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.

மற்ற படிக்கு, மழைக்காலம் துவங்கி விட்டாலும், சென்ற ஆண்டைக் காட்டிலும், மிகக் குறைவாகவே பெய்கிறது. லேக் விக்டோரியாவிலும் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த படிக்கு ஏறவில்லை. இங்கே மின்சார வினியோகம் UMEME என்கிற தனியார் வெளி நாட்டுக் கம்பெனி வசம் இருக்கிறது. குறைந்த அளவே மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்த போதிலும், அதே செலவு ஆவதால், 37% மின்கட்டண உயர்வு தடுக்க முடியாதது என்ற நல்ல செய்தியை அறிவித்துள்ளது. சுத்தமாக மின்வினியோகத்தைத் துண்டித்து விட்டு, அதே செலவாகிறது என்று, இன்னும் கட்டணத்தைக் கூட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது...

23. காணாமல் போன பதிவு...

திங்கள், மே 01, 2006

பிளாக்கரில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்தப் பதிவு இரண்டு முறை வெளியிட்டும், டாஸ்போர்டில் தெரியவே மாட்டேனென்கிறது. பின்னூட்ட்மும் வேலை செய்ய மாட்டெனென்கிறது ( தகவல் நன்றி துளசி மேடம்). மூன்றாவது முறையாக முயற்சிக்கிறேன். வருகிறதா பார்க்கலாம.
================================================================

நிறைய நாட்கள் எந்தப் பதிவும் போடாததால், சந்தோசப் படுகிற மக்கள்தொகை அதிகமாகிவிட்ட செய்தி கிடைத்ததனால் அவசர அவசரமாக இந்தப் பதிவு

கொஞ்சம் கொஞ்சமாகவாவது மழை பெய்வதால், 62 மணி நேரத்தில், 48 மணி நேரம் மின்சாரம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சந்தோசம் மனதைத் தொடும் முன்னரே 3 நாட்களுக்கு தண்ணீரைத் துண்டித்து புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது தண்ணீர் வாரியம். கஷ்டத்தைப் போக்க ஒரே வழி, மழை பெய்யும் போது, ஏதேனும் அலுவலக காரணத்தைச் சொல்லி வெளியில் சுற்ற வேண்டியதுதான். மழையில் நனைந்த மாதிரியும் ஆயிற்று, குளித்த மாதிரியும் ஆயிற்று. வீடு நாறத் தொடங்கும் முன்னர், தண்ணீர் கிடைக்க உட்டாலக்கடி சாமியாரை வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


ோடா போடா காரர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால், அன்றைய தினம் கழுவிக் கொள்ள ஒரு ஜெரிக்கானில் (கேனில்) தண்ணீர் கிடைக்கிறது. குளிக்க மழையையும், கழுவ போடா போடா காரர்களையும் நம்பி பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
================================================================

சரி ரொம்ப போரடிக்கிறதே இவர்களிடம் ஏதாவது கதையடித்து நேரத்தைப் போக்கலாம் என்று முடிவு செய்தேன்.முந்தா நாள் சேம்பியன்ஸ் ட்ரோபியில் பார்சிலோனா வெற்றி பெற்றதை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அவர்கள் சந்தோசத்தில் பங்கு கொள்ள எண்ணி ரொணால்டோ சூப்பரா விளையாடினாருல்ல (ஏதோ நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு பேரில ஒண்ணு...நல்லவேளை பீலே கலக்கினாருல்ல என்று சொல்லவில்லை...)என்று சொல்லி அசடு வழிந்த போது, அவர்கள் பார்த்த பார்வையில் இருந்தது இளக்காரமா அல்லது பரிதாபமா என்று தெரியவில்லை. இங்கே நான் சந்திக்கும் இரண்டாவது பிரச்சினை இது.முதலாவது, இந்தி தெரியாதது, இரண்டாவது, கிரிக்கெட் மட்டுமே தெரிந்திருப்பது.இந்தி பேசுரவன்கிட்ட சகஜமா பேச முடியல, ஏன்னா நமக்கு இந்தி தெரியாது. சரி இங்கிலீஸ் பேசுர ஆப்பிரிக்கன் கிட்ட பேசலாம்னா அவனுக்கு பிடிச்ச விசயங்கள்ல நமக்கு பரிட்ச்யம் இல்லை. கவுண்டர் சொன்ன மாதிரி, கல்லக் கண்டா நாயக் காணோம், நாயக் கண்டா கல்லக் காணோம்...

கிளப் மாட்சிற்கே இந்த ஆட்டம் ஆடுபவர்கள் உலகக் கோப்பைக்கு என்ன ஆட்டம் ஆடுவார்களோ தெரியவில்லை. அதற்குள்ளாகவாவது, யார் யார் எந்த டீமில் விளையாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.எந்த பார், ரெஸ்டாரண்ட், ஹோட்டல் என எங்கு சென்றாலும் TV யில் கால்பந்துதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இது போக சில இடங்களில், பெரிய திரையில் வேறு காட்டுவார்களாம்.
================================================================

சரி விளையாட்டை விடுங்கள், சாப்பாடு பற்றி பேசலாம் என்றால், இவர்கள் உண்பது, மட்டோக்கி எனப்படும், வாழைக்காயை நன்றாக வேக வைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வஸ்து, போஷோ எனப்படும், நம்மூர் குழைந்த பச்சரிசி சாதத்திற்கும், இட்லிக்கும் இடையிலான ஒரு தயாரிப்பு, மற்றும் ஆப்பிரிக்கன் சப்பாத்தி எனப்படும், ரப்பர் தட்டு போன்ற ஒரு சமாச்சாரம் என நமக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது... பற்றாக்குறைக்கு, இவர்களுக்கு உரைப்பு என்று உச்சரித்தாலே கண்ணில் தண்ணீர் வந்துவிடும்...நம்மவர்கள் அதிகமாக காரம் சேர்த்துக் கொள்வதைப் பற்றிக் கிண்டலடிக்கிறார்கள்..(இந்தியர்கள் கழிவறையில் ஏன் டிஸ்யூ பேப்பர் உபயோகிப்பதில்லை தெரியுமா? இவர்கள் உண்கிற காரத்திற்கு, பேப்பரை அங்கே வைத்தவுடன் தீப்பற்றிக் கொள்ளும்..)

இந்தி படிப்பதை விட கால்பந்து பற்றி அறிந்து கொள்தல் சுலபம் என்று தோன்றுகிறது... இவை எல்லாவற்றுக்கும் மேலாக பார்க்கலாம், இன்னும் எத்தனை நாளுக்கு வருண பகவானும், போடா போடாகாரர்களும் கருணை காட்டுகிறார்கள் என்று...

22. நான் Muzungu வான கதை...

செவ்வாய், ஏப்ரல் 11, 2006

வயது அதிகமாகிக் கொண்டே போவதை நினைவு படுத்தும் சமாச்சாரமாக இருப்பதால், நான் பிறந்த நாளெல்லாம் கொண்டாடுவதில்லை. பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஃபோனில் வாழ்த்துச் சொல்லும் போதுதான் அன்று பிறந்த நாள் என்பதே நினைவுக்கு வரும்.

பிறருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அதிகமாகக் கலந்து கொண்டதில்லை. (என் தம்பியுடையதைத் தவிர... காரணம் அவன் பிறந்த தினம்... டிசம்பர் 25). இங்கே நண்பி ஒருவர் அவருடைய பையனின் 3 வது பிறந்த நாள் விழாவிற்கு அழைத்த போது, இங்கே எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் ஆவலில் ஒப்புக் கொண்டேன்.

விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னர், என்னவெல்லாம் தேவைப்படும் என்று கணக்கிட்டு வாங்கி விட்டார். 150,000 உகாண்டன் சில்லிங்ஸ், கிட்டத்தட்ட 3750 ரூபாய். அவர்கள் உரைப்பு அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.எனவே எனக்காக சில்லி சாஸ் வாங்கிக் கொண்டார்.

நான் தங்கியிருக்கும் சிற்றூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலிருக்கும் கிராமத்தில்தான் விழா. நண்பிதான் அந்த ஊரில் வசதியானவர் என்பதால், கிட்டத்தட்ட 100 பேர் வரை அழைத்திருந்தார். நான்கு மணிக்கு விழா தொடங்கியது. முதலில் ஒரு பாதிரியார் ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தார்.பின் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பையனின் அம்மா தன்னையும், பையனையும் அறிமுகப் படுத்தினார். அம்மா பெயர் Faith, மகன் பெயர் Innocent. அப்பா பெயரைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ள வில்லை.

 
பையன் சிசேரியன் மூலமாகப் பிறந்தவன் என்பதைப் பையனின் தாத்தா நினைவு கூர்ந்தார். பின்னர் இசை ஆரம்பமாகியது. சிறுவர்கள் எழுந்து ஆடத் தொடங்கினர். நன்றாக ஆடும் சிறுவர்களை ஊக்குவிக்க சிலர் அவர்கள் பையில் பணம் சொருகினர். இது அரை மணி நேரம் நடந்தது.

பின் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. ஒரு சிறு டேபிளில் ஒரு தட்டு வைத்து, பக்கத்தில் பையன் அமர்ந்திருக்க, ஒவ்வொருவராகச் சென்று அன்பளிப்புகளை வழங்கினர். அன்பளிப்புகளை வாங்கி வராதவர்கள் அந்தத் தட்டில் பணத்தை வைத்துச் சென்றனர். பின்னர் கேக் வெட்டினான் பொடியன். நம்மூர் குலவைச் சத்தம் போலவே சத்தம் எழுப்பினர் கிராமப் பெண்மணிகள்.

விருந்து தொடங்குவதற்கு முன்னர் மறுபடியும் பாதிரியார், மீண்டும் ஜெபம். பின்னர் விருந்து தொடங்கியது. Buffet. நம்மூர் போண்டா மாதிரி ஒரு Item , ஆப்பிரிக்க சப்பாத்தி (முழு சப்பாத்திக்கல் சைசில், அரை இஞ்ச் தடிமனில் ஏதேனும் பரிமாறப் பட்டால் அது ஆப்பிரிக்க சப்பாத்தி என்று அறிந்து கொள்க), நம்மூர் பிரியாணி கலரில், மாட்டிறைச்சி கலந்த சோறு, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழிக்குழம்பு (உரைப்பே இல்லாமல், மசாலா எதுவும் கலக்காமல்) பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் சோடா(குளிர்பானங்களை இங்கே இப்படித்தான் அழைக்கிறார்கள்) வைக்கப் பட்டிருந்தன. பெரியவர்கள் வரிசையாகச் சென்று எடுத்து கொண்டனர். பெரிய தட்டுகளில் நிறைய வைக்கப் பட்டு ஐந்தாறு சிறுவர்களுக்கு மொத்தமாக வைக்கப்பட்டது.

 
 

கிட்டத்தட்ட ஆறு மணியளவில் விழா இனிதே முடிவடைந்தது. விழா ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை பையன் என்னை ஒரு மாதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்தான். நான் கிட்டத்தட்ட அவர்கள் கலரில் இருந்தாலும், முடி இருப்பதால் பையனுக்கு நான் வினோதமான ஜந்துவாகத் தெரிந்திருக்கிறேன். கடைசியில் பையனின் அம்மா நான் ஒரு Muzungu என்று அறிமுகப் படுத்திய பின்தான் சந்தேசமாக ஒட்டிக்கொண்டான். Muzungu என்றால் யாரென்று கேட்கவில்லையே..Muzungu என்றால் வெள்ளைக்காரன் என்று அர்த்தம். Posted by Picasa

21. முடிவைத் தொடங்கி வைக்கிறேன்...

வியாழன், மார்ச் 16, 2006

நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு, நாலு சங்கிலில சேர்த்து விட்டிருக்குற நம்ம இதயக்கனி, பாசத்த்லைவர், அன்பு அண்ணன் மணியன் அவர்களுக்கு, கம்பாலா பாம்போ ரோட்டின் நடுவில் சிலை வைக்க போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தாகி விட்டது. :-)

இனி நம்ம நாலுகள்...

1. பிடித்த நாலு உணவு வகைகள்:
சொல்ல நினைப்பது:
1. கம்மஞ் சோறும், கருவாட்டுக் குழம்பும்
2. பழைய சோறும், சின்ன வெங்காயமும்
3. புரோட்டாவும், காரமான சால்னாவும்
4. அம்மா கைவண்ணத்தில் மல்லிகைப்பூ இட்லியும், தொட்டுக்கப் பொடியும்

சொல்வது:
1. பீட்சா
2. பர்கர்
3. நக்கெட்ஸ்
4. சிக்கன் சிப்ஸ் (என்னன்னே தெரியல, இதெல்லாம் சாப்பிடலேன்னா தூக்கமே வர மாட்டேங்குது)

2. போயிருக்கும் நாலு வெளி நாடுகள் (அட்ரா சக்கை..அட்ரா சக்கை)
சொல்ல நினைப்பது:
1. மலேசியா
2. சிங்கப்பூர்
3. உகாண்டா
4. கென்யா (அடங்குடா...அடங்குடா...)

சொல்வது(எதிரேயிருப்பவர் நான் எது சொன்னாலும் நம்புபவராக இருந்தால்...)
1. சுவிஸ்
2. கனடா
3. யு.கே
4. கியூபா

3. பிடித்த நாலு நடிகைகள் (யாருப்பா அது, நடிகர்களைப் பத்தி கேக்குறது... அவங்கல்லாம் யாருன்னே தெரியாது எனக்கு...)
சொல்ல நினைப்பது:
1. ஜோதிலட்சுமி
2. ஜெயமாலினி
3. சிலுக்கு சுமிதா
4. டிஸ்கோ சாந்தி (இந்த மாதிரி குல விளக்குகள்லாம் இப்ப பிரபலம் ஆகிறதில்லையே ஏன்???)

சொல்வது:
கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால்:
1. சாவித்திரி
2. ரேவதி
3. லட்சுமி
4. ராதிகா

கொஞ்சம் அப்பாவியா தெரிஞ்சார்னா..
1. ஜூலியா ராபர்ட்ஸ்
2. ஆஷ்லி ஜூட்
3. காமரூன் டையாஸ்
4. ரென்னி ரஸ்ஸோ

4. பிடித்த நாலு விளம்பரங்கள்
1. ஹட்ச் சின்னப் பையனும் நாய்க்குட்டியும்
2. சாப்பிட்டுக்கிட்டு இருக்குறவங்க மேல தண்ணி ஊத்தர மாதிரி வரும் கண்ணாடி விளம்பரம்
3. உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர்
4. அக்சய்குமார் வந்த தம்ஸ் அப் விளம்பரம்

அனேகமாக எல்லோருமே ஆடி முடித்து விட்ட ஒரு விளையாட்டாகத் தோன்றுவதால் இவ்விளையாட்டின் முடிவைத் தொடங்கி வைக்க விரும்புகிறேன். நன்றி.

20. பிங்க் நிற மனிதர்கள்...

வெள்ளி, மார்ச் 10, 2006

இங்கே வந்த புதிதில், இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியமாக இருந்தது. காரணம் நூற்றுக்கு 90 சதவீதம் ஆண்கள் தலையை சுத்தமாக மழித்திருப்பதுதான். பெண்களும் நிறைய பேர் மொட்டைத்தலையுடன்தான் இருக்கிறார்கள். இயற்கையாக இவர்கள் முடி மிகவும் சுருட்டையாகவும், மெலிதான் பஞ்சு போல் இருப்பதாலும், படிவதில்லை. முடி நிறைய வளர்ந்தால் கிட்டத்தட்ட சாய்பாபா style ல் வளர்கிறது.சிறு வயதிலிருந்தே இப்படி தலையை மழித்து மழித்து, லேசாக முடி வளர்ந்தாலே இவர்களுக்கு அரிக்க ஆரம்பித்துவிடும். உடனே வீட்டில் அவர்களாகவே மொட்டையடித்துக் கொள்கிறார்கள்.

பெண்கள், பள்ளியில் படிக்கும் போது முடி வைத்துக் கொள்ளக்கூடாது என பல பள்ளிகள் கட்டுப்பாடு வைத்துள்ளன. ஒரு இஞ்ச் வரை அனுமதிக்கிறார்கள். இவர்கள் முடியே வெட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அது தோள்பட்டைக்கு கீழே வளர மாட்டேனென்கிறது. அதுவும் அருக்காணி Style ல் தூக்கிக்கொண்டு இருக்கிறது. இப்படி அடங்காமுடியாகவும், கொஞ்சமாகவும் வளர்வதால், முடியை அலங்காரம் செய்ய நிறைய பணமும், நேரமும் செலவிடுகிறார்கள். நாடு நெடுக முடியலங்கார நிலையங்கள் இருக்கின்றன, எப்போதும் கூட்டத்துடன்.


 
 
 
 

முடியை ஒருவிதமான Lotion தடவினால்தான் கொஞ்சமாவது படிகிறது. அதன் பின் கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவழித்து, மெலிதான சிறு சிறு சடைகளாகத் திரித்து அலங்கரித்துக் கொள்கிறார்கள். இதில் உபரி வசதி ஒன்றும் இருக்கிறது, தலை முழுக வேண்டாம். சென்ட் கொஞ்சம் சேர்த்து அடித்துக் கொண்டால் போதும்.

ஆப்பிரிக்காவில் முழுக்க முழுக்க கருப்பர்கள்தான் இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இங்கே நிறைய கலப்பின மக்களும் இருக்கிறார்கள். முக்கியமாக, அரேபிய-ஆப்பிரிக்க கலப்பு. இவர்களை சவுதாரா எனக் குறிப்பிடுகிறார்கள்.இந்திய ஆப்பிரிக்க கலப்பும் இருக்கிறது. சவுதாராக்கள், வெள்ளையாக சற்றே செம்பட்டையான, லேசான சுருட்டைத்தலையுடன் இருக்கிறார்கள்.இவர்கள் போக பக்கத்து, கென்ய, சோமாலிய நாட்டினரும் இருக்கிறார்கள். சோமாலியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள். இவர்களைத் தவிர, சில ஆப்பிரிக்கர்கள் பிளீச் செய்து, கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது, ஒரு விதமான பிங்க் நிறத்தில் வினோதமாக் காட்சியளிக்கிறார்கள்.

உகாண்டாவின் பாரம்பரிய உடையை வயதானவர்கள் மட்டுமே உடுத்துகிறார்கள். அதுவும் கிராமங்களில் இருப்பவர்கள் மட்டுமே. மற்றபடிக்கு எல்லோருமே மேற்கத்திய உடைகள்தான். மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்கிறார்கள். மொழியும் அப்படித்தான்.எளிதில் வசப்படுபவர்கள் போலிருக்கிறது.

நம்மையும்தான் வெள்ளைக்காரன் 200 வருடங்கள் ஆட்சி செய்தான். இருந்தாலும் நம்மவர்களால் ஏன் ஒழுங்காக எல்லோராலும் பிழையின்றி ஆங்கிலம் பேச முடிவதில்லை?? என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஆந்திர நண்பர் ஒருவர், கடையில் வேலை பார்ப்பவர்களை அடுத்த நாள் காலையில் சற்று நேரம் முன்னதாக வர வேண்டும் என சொல்ல விரும்பினார். அதற்கு அவர் சொன்னது...

"Yesterday everybody should come on 8 o' clock. Nobody should told funny funny reasons".

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவர் சொன்னதைப் புரிந்து கொள்ளவே 10 நிமிடங்கள் தேவைப்பட்டன.இவர், இதற்குப் பேசாமல் சைகை பாஷையிலேயே சொல்லியிருந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பதிவில்...

நாலு நாளா, நாலப் பத்தி யோசிக்க வச்சிட்டாரு நம்ம மணியன்... Posted by Picasa

19. ஏர்லைன்சுகளுக்கு மொய் எழுதியவர்கள்...

ஞாயிறு, பிப்ரவரி 26, 2006

வன்முறை பயத்தில், தேர்தல் சமயத்தில் இங்கிருக்க வேண்டாமென்று, நிறைய இந்தியர்கள் இங்கிருந்து இந்தியாவிற்கோ, அல்லது பக்கத்திலிருக்கும் கென்யாவிற்கோ குடும்பத்தை அனுப்பி விட்டனர். இவர்கள் கொடுத்த பில்ட் அப்பில் நான் கூட தேர்தல் சமயத்தில் வன்முறை ஏதேனும் நிகழக்கூடும் என்ற பயத்தில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருந்தேன். எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. எதிர்பார்த்தது போலவே, தற்போதய ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே, எதிர்கட்சித் தலைவர், தேர்தல் முறைகேடுகளைப் பற்றி குற்றம் சாட்டியிருக்கிறார். எப்படியானாலும், முசே வெற்றி பெறுவார் என்ற ஆப்பிரிக்கர்களின் வதந்தி உண்மையாகியிருக்கிறது. வன்முறை நடந்து, ஊரே இரத்தக்காடாகப் போகிறது என்ற வதந்தியைப் பரப்பி விட்டு, குடும்பத்தோடு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள், தேவையில்லாமல் ஏர்லைன்ஸ் காரர்களுக்கு மொய் எழுதி விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

National Resistance Movement (NRM) கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டது. அதே செடி கொடி உடை தரித்த மக்கள், அதே மத்தளச் சத்தம், அதே ஆட்டம்... திங்கட்கிழமை இந்த கொண்டாட்ட மூடிலிருந்து விடுபட்டு, தண்ணீர், மின்சாரம், அன்றைய இரவு பியர் போன்ற அத்யாவசிய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படத் தொடங்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. வன்முறை அது இதுவென்று கடந்த பல மாதங்களாக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த தேர்தல் சப்பென்று முடிந்து விட்டற் போன்று தோன்றினாலும், வன்முறை ஏதுமின்றி நடந்து முடிந்திருப்பது, நிம்மதியளிக்கிறது.

அடுத்த பதிவில்...
நமக்கெல்லாம் தாடி வைத்தால், அரிக்குமல்லவா.. அதே போல் இவர்களுக்குத் தலையில் முடி வைத்தால் அரிக்கும்... மற்றும் இந்த ஊர் பெண்களின் வினோத தலையலங்காரப் பழக்கங்கள் பற்றி...

18. தேர்தல் கால வதந்திகள்...

வெள்ளி, பிப்ரவரி 24, 2006

நேற்று தேர்தல். தேர்தலுக்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னரே, கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு விடும் என்று, ஒரு மாதத்திற்கு முன்னால் கூறப்பட்டது. அது ஒரு வாரமாகச் சுருங்கி, பின் மூன்று நாட்களாகி, கடைசியில், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை எல்லாக் கடைகளும் திறந்தே இருந்தன. வழக்கத்திற்கு மாறாக, நாடே அமைதியாக இருக்கிறது. நேற்று இரவு முதலே, வதந்திகள் உலா வரத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சி (The Forum for Democratic Change - NRM)ஐ சேர்ந்த Col. Besigye நகர்புறங்களில் முன்னணியில் இருக்கிறார். நிறைய குஜராத்திகள் பயத்தில் இருக்கிறார்கள். இருக்காதா பின்னே, நூற்றுக்கு எழுபதிற்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் ஆயிற்றே..கடந்த சனியன்று, குடியேற்ற அதிகாரிகள், திடீர் சோதனையிட்டதில் ஏகப்பட்ட குஜராத்திகளும், மூன்று தமிழர்களும் மாட்டினர் (சனிக்கிழமை என்பதால் நிறைய பேர் தப்பித்து விட்டனர்)எதிர்க்கட்சி ஜெயித்தால் நிறைய பிரச்சினைகள் வரும் என இவர்கள் நினைக்கிறார்கள். எனக்கென்னவோ, யார் ஜெயித்தாலும், இதுபோல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு தொல்லைதான் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள், சொந்த ஊருக்குச் செல்லாமல், எதிர்காலத்திலும் எப்போது செல்வோம் என்பதே தெரியாமல், வாழ்ந்து வரும் இவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

சரி, விசயத்திற்கு வருவோம், என் House Girl போனமுறையும் இப்படித்தான் இருந்தது என்கிறாள். கிராமப்புறங்களில் ஓட்டு எண்ணிக்கையைத் தொடங்கும் போது, முசே (இவர்கள் மொழியில் முசே என்றால் பெரியவர் என்று அர்த்தம்) President. Yoweri Kaguta Museveni முன்னணிக்கு வந்து விடுவார் என்கிறாள். ஜெயிக்கிறாரோ இல்லையோ, அவர்தான் அடுத்த ஜனாதிபதியாக அறிவிக்கப் படுவார் என்று ஒரு வதந்தியும் நிலவுகிறது. இதுவரை ஒரு வன்முறையும் நடந்ததாக தகவல்கள் இல்லை.(காலை 5 மணிக்கு கேட்ட துப்பாக்கிச் சத்தத்தைத் தவிர Mbale அமைதியாகத்தான் காட்சியளிக்கிறது)

கடையை இரண்டு நாட்கள் மூடிவிடுமாறு மேலிட உத்தரவு கிடைத்துள்ளது.(நேற்றும், இன்றும்). யார் செய்த புண்ணியமோ, இன்னும் மின்சாரத்தடை ஏற்படவில்லை. வீட்டில் 24 மணி நேரமும் அடைந்து கிடப்பது அலுப்பூட்டுகிறது. தமிழ் டி.வி யும் கிடையாது. குஜாராத்திகளின் பஜனையை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது?

வதந்திகள் எந்த அளவுக்கு நம்பகமானவை என்பது நாளை மாலை தெரிந்து விடும். நாளை எழுதுகிறேன் (மின்சார பகவான் கருணை காட்டினால்...)

17. என் பதிவைக் காணோமுங்க...

திங்கள், பிப்ரவரி 20, 2006

நீளமான பேர் வச்சதனாலயோ என்னவோ தெரியல, பதிவ காணவே காணோம். அதுக்குதான் இது.

பிடிக்காத விசயங்களைப் பற்றி எழுவதற்கு எளிதாக இருந்தது.. நல்ல விசயங்களைப் பற்றி எழுத வெகு நேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது.. என் தவறுதான், ஒப்புக் கொள்கிறேன்...

இங்கு வரும் வரை வணக்கம் சொல்லுதல் என்பதே ஒரு மாதிரியான, தர்ம சங்கடமான காரியமாக இருந்தது. மற்றவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமலோ அல்லது கவனிக்காமலோ போய் விட்டால் அசிங்கமாகப் போய் விடுமே என்ற அச்சம்தான் காரணம். என் கல்லூரி நண்பன் (உட்டாலக்கடி சாமியாரின் மீது சத்தியமாக நான் இல்லை, என் நண்பந்தான்...)ஆசிரியர் யாரையேனும் ஒரு கி.மீ சுற்றளவில் எங்கு பார்த்தாலும், தன் உயரத்தில் முக்கால் உயரம் மட்டுமே தெரியுமளவுக்கு ஒரு கூண் போட்டு, கையை விசுக்கென்று நெஞ்சு வரை கொண்டு வந்து, குமர்னிங் சர் (Good morning Sir எனப் பொருள் கொள்க..அது காலை, மதியம், சாயங்காலம், இரவு என எந்த வேளையாக இருந்தாலும் Standard குமர்னிங் சர் தான்)என்று வெளியே சத்தமே கேட்காத மாதிரி ஒரு வணக்கம் சொல்வான்.இதை அந்த ஆசிரியர் பார்த்து விட்டு பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டால் தீர்ந்தது மேட்டர்.. ஒரு வேளை அவர் கவனிக்காமல் போய் விட்டால் பிடித்தது வினை. அடுத்து அவர் கவனிக்கும் வரை தொடர்ச்சியாக இந்த வணக்கத்தைப் போட்டுக் கொண்டே இருப்பான். எத்தனை முறையானாலும் விடமாட்டான் அந்த விடாக்கொண்டன்.. இவன் இந்த வினோதமான வணக்கத்தைப் போட்டுக் கொண்டே நடந்து வருவதை, தூரத்திலிருந்து பார்க்கும் போது மிகவும் காமெடியாக இருக்கும்.

இங்கே உகாண்டாவில் இவர்களிடம் இருக்கும் சில நல்ல பழக்கங்களுள் ஒன்று, மனதார வாழ்த்துதல் அல்லது வணக்கம் சொல்லுதல். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 முறையாவது Hai, How are you? அல்லது Hai How is you? என்று சொல்லவும், கேட்கவும் வேண்டியிருக்கிறது. தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், உற்றார், உறவினர், நண்பர், எதிரி என யாரைப் பார்த்தாலும் அதே HHAY or HHIY தான்.பிச்சைக்காரர்கள் கூட குசலம் விசாரித்து விட்டுதான் யாசிக்கிறார்கள். சில சமங்களில் இது கொஞ்சம் ஓவராகவும் போய் விடும். கடையில் வேலை செய்யும் ஆப்பிரிக்கர்களில் சிலர், வாடிக்கையாளர்களிடம் ஃபோனில் பேசும் போது, அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலன், ஊர் எப்படி இருக்கிறது, வியாபாரம் எப்படி இருக்கிறது, மழை பெய்ததா போன்ற அதி முக்கியமான கேள்விகளை எல்லாம் கேட்டு விட்டு, பின் எதற்காக ஃபோன் சொய்தோம் என்பதையே மறந்து விட்டு, அப்புறமாக கூப்பிடுகிறேன் என்று சொல்லி வைத்து விடுவார்கள். இதை நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விசயம், தண்ணீர் கலக்காத பால் மற்றும், செயற்கை உரங்கள் உதவியில்லாமல் விளைந்த காய் கறிகள். வீட்டிற்கு வந்து போட பால்காரர்களெல்லாம் கிடையாது.(ஆச்சர்யமான விசயம், ஒரு சில வீடுகளுக்கு ஒரு வெள்ளைக்காரர் பால் ஊற்றுகிறார்). Platform களில் வாளி நிறைய பாலோடு உட்கார்ந்திருப்பார்கள். ஒரு கப் என்பது அரை லிட்டர். ஒரு லிட்டர் பால் கிட்டத்தட்ட 16 ரூபாய்.காய்கறி விலை அதிகமாக இருந்தாலும், இயற்கையாக விளைந்ததால் சுவையும் சத்தும் அதிகம்.

இன்னொரு குறிப்பிட்டே ஆக வேண்டிய விசயம், பியர் விலை பாட்டில் தண்ணீரின் விலையை விட கொஞ்சம்தான் அதிகம். ஒரு லிட்டர் தண்ணீர் 1000 ஷில்லிங்ஸ். 500 ml பியர் 800 ஷில்லிங்ஸ். ஹி...ஹி..இதுவும் நல்ல விசயந்தானுங்களே...

இவ்வளவு பெரிய தலைப்பைப் போட்டது ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கைக்காகத்தான். கின்னஸ்லே இடம் பிடிக்கிற ஆசையெல்லாம் கிடையாதுங்க ;-)